21 முதல் 30 வரை
 

21.

மங்கலை செங்கல சம்முலை

 

    யாள்மலை யாள்வருணச்
சங்கலை செங்கைச் சகல
    கலாமயில் தாவுகங்கை
பொங்கலை தங்கும் புரிசடை
    யோன்புடை யாளஉடையாள்
பிங்கலை நீலிசெய் யாள்வெளி
    யாள்பசும் பெண்கொடியே.

   

22.

கொடியே இளவஞ்சிக் கொம்பே

 

    எனக்குவம் பேபழுத்த
படியே மறையின் பரிமள
    மேபனி மால் இமயப்
பிடியே பிரமன் முதலாய
    தேவரைப் பெற்றஅம்மே
அடியேன் இறந்(து) இங்(கு)இனிப்பிற
    வாமல்வந்(து) ஆண்டுகொள்ளே.

   

23.

கொள்ளேன் மனத்தில்நின் கோலம்அல்

 

    லா(து)அன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசம யம்விரும்
    பேன்வியன் மூவுலகுக்(கு)
உள்ளே அனைத்தினுக் கும்புறம்
    பேஉள்ளத் தேவிளைந்த
கள்ளே களிக்கும் களியே
    அளியஎன் கண்மணியே.

   

24.

மணியே மணியின் ஒளியே

 

    ஒளிரும் மணிபுனைந்த
அணியே அணியும் அணிக்கழ
    கேஅணு காதவர்க்குப்
பிணியே பிணிக்கு மருந்தே
    அமரர் பெருவிருந்தே
பணியேன் ஒருவரை நின்பத்ம
    பாதம் பணிந்தபின்னே.

   

25.

பின்னே திரிந்துஉன் அடியாரைப்

 

    பேணிப் பிறப்பறுக்க
முன்னே தவங்கள் முயன்றுகொண்
    டேன்முதல் மூவருக்கும்
அன்னே உலகுக்(கு) அபிராமி
    என்னும் அருமருந்தே
என்னே இனிஉன்னை யான்மற
    வாமல்நின்(று) ஏத்துவனே.

   

26.

ஏத்தும் அடியவர் ஈரே

 

    ழுலகினை யும்படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவ
    ராம்கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல்அணங் கேமணம்
    நாறும்நின் தாள் இணைக்(கு)என்
நாத்தங்கு புன்மொழி ஏறிய
    வாறு நகையுடைத்தே.

   

27.

உடைத்தனை வஞ்சப் பிறவியை

 

    உள்ளம் உருகும்அன்பு
படைத்தனை பத்ம பதயுகம்
    சூடும் பணிஎனக்கே
அடைத்தனை நெஞ்சத்(து) அழுக்கைஎல்
    லாம்நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின்னருள்
    ஏதென்று சொல்லுவதே.

   

28.

சொல்லும் பொருளும் எனநட

 

    மாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடி
    யேநின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும்அவர்க்
    கேஅழி யாஅரசும்
செல்லும் தவநெறி யும்சிவ
    லோகமும் சித்திக்குமே.

   

29.

சித்தியும் சித்தி தருந்தெய்வ

 

    மாகித் திகழும்பரா
சத்தியும் சத்தி தழைக்கும்
    சிவமும் தவம்முயல்வார்
முத்தியும் முத்திக்கு வித்தும்வித்
    தாகி முளைத்தெழுந்த
புத்தியும் புத்தியின் உள்ளே
    புரக்கும் புரத்தையன்றே.

   

30.

அன்றே தடுத்(து)என்னை ஆண்டுகொண்

 

    டாய்கொண்ட(து) அல்லவென்கை
நன்றே உனக்(கு)இனி நான்என்
    செயினும் நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்
    றுகைநின் திருவுளமே
ஒன்றே பலவுரு வேயரு
    வேஎன் உமையவளே.