91 முதல் 100 வரை
 

91.

மெல்லிய நுண்ணிடை மின்அனை

 

    யாளை விரிசடையோன்
புல்லிய மென்முலை பொன்அனை
    யாளைப் புகழ்ந்துமறை
சொல்லிய வண்ணம் தொழும்அடி
    யாரைத் தொழுமவர்க்குப்
பல்லியம் ஆர்த்தெழ வெண்பக(டு)
    ஊரும் பதம்தருமே.

   

92.

பதத்தே உருகிநின் பாதத்தி

 

    லேமனம் பற்றிஉன்றன்
இதத்தே ஒழுக அடிமைகொண்
    டாய்இனி யான்ஒருவர்
மதத்தே மதியங் கேன்அவர்
    போனவழியும் செல்லேன்
முதத்தேவர் மூவரும் யாவரும்
    போற்றும் முகிழ்நகையே.

   

93.

நகையே இஃதிந்த ஞாலமெல்

 

    லாம்பெற்ற நாயகிக்கு
முகையே முகிழ்முலை மானே
    முதுகண் முடிவில்அந்த
வகையே பிறவியும் வம்பே
    மலைகள் என்பதுநாம்
மிகையே இவள்தன் தகைமையை
    நாடி விரும்புவதே.

   

94.

விரும்பித் தொழும்அடி யார்விழி

 

    நீர்மல்கி மெய்புளகம்
அரும்பித் ததும்பிய ஆனந்த
    மாகி அறிவிழந்து
சுரும்பிற் களித்து மொழிதடு
    மாறிமுன் சொன்னஎல்லாம்
தரும்பித்தர் ஆவரென் றால்அபி
    ராமி சமயம்நன்றே

   

95.

நன்றே வருகினும் தீதே

 

    விளைகினும் நான்அறிவ(து)
ஒன்றேயு மில்லைஉனக்கே
    பரம்எனக்(கு) உள்ளஎல்லாம்
அன்றே உனதென்(று) அளித்துவிட்
    டேன்அழி யாதகுணக்
குன்றே அருட்கட லேஇம
    வான்பெற்ற கோமளமே.

   

96.

கோமள வல்லியை அல்லியந்

 

    தாமரைக் கோயில்வைகும்
யாமள வல்லியை ஏதம்
    இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலக
    லாமயில் தன்னைத்தம்மால்
ஆமள வும்தொழு வார்எழு
    பாருக்கும் அதிபரே.

   

97.

ஆதித்தன் அம்புலி அங்கி

 

    குபேரன் அமரர்தங்கோன்
போதிற் பிரமன்(புராரி)
    முராரி பொதிமுனி
காதிப் பொருபடைக் கந்தன்
    கணபதி காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர்
    போற்றுவர் தையலையே.

   

98.

தைவந்து நின்னடித் தாமரை

 

    சூடிய சங்கரற்குக்
கைவந்த தீயும் தலைவந்த
    ஆறும் கரந்ததெங்கே
மெய்வந்த நெஞ்சின்அல் லால்ஒரு
    காலும் விரகர்தங்கள்
பொய்வந்த நெஞ்சில் புகஅறி
    யாமடப் பூங்குயிலே.

   

99.

குயிலாய் இருக்கும் கடம்பா

 

    டவியிடைக் கோலஇயல்
மயிலாய் இருக்கும் இமயா
    சலத்திடை வந்துதித்த
வெயிலாய் இருக்கும் விசும்பில்
    கமலத்தின் மீதன்னமாம்
கயிலா யாருக்(கு)அன்(று) இமவான்
    அளித்த கனங்குழையே.

   

100.

குழையைத் தழுவிய கொன்றையந்

 

    தார்கமழ் கொங்கைவல்லி
கழையைப் பொருத திருநெடுந்
    தோளும் கருப்புவில்லும்
விழையப் பொருதிறல் வேரியம்
    பாணமும் வெண்ணகையும்
உழையைப் பொருக்கண்ணும் நெஞ்சில்எப்
    போதும் உதிக்கின்றவே.

   

கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு

 

தாரமர் கொன்றையும் சண்பக
     மாலையும் சாத்தும்தில்லை
ஊரர்தம் பாகத்து உமைமைந்த
     னேஉல(கு) ஏழும்பெற்ற
சீரபி ராமிஅந் தாதிஎப்
     போதும்என் சிந்தையுள்ளே
காரமர் மேனிக் கணபதி
     யேநிற்கக் கட்டுரையே.

   

 

நூல் பயன்



 

ஆத்தாளை எங்கள் அபிராம
    வல்லியை அண்டம்எல்லாம்
பூத்தாளை மாதுளம் பூநிறத்
    தாளைப் புவிஅடங்கக்
காத்தாளை ஐங்கணை பாசாங்
    குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழு
    வார்க்(கு)ஒரு தீங்கில்லையே.