101
பாங்கி மதியுடன்பாடு

 
      `பொன்மான்` என்று பாடமோதுவாருமுளர்; இவரெய்த  மெய்ம்மான் என்று 
கூறவே,  அம்மான்  பொய்ம்மான்  என்றே   கூற   வேண்டு   மாதலால்,  அது
பாடமன்மை   யுணர்க.   `மைவா   ளிலங்கு  கண்` : உவமைத்தொகை.   `ஆளி 
மொய்ம்பர்`  என்பதும் அது.  மொய்ம்பு - வலி.  `இளமாந் தளிரின்  செவ்வாளி` 
என்றது  கையில்  அம்பின்றித்  தளிர்  பிடித்து  நிற்றலின்  நகையாடிக் கூறியது. 
சேண் - சேய்மை.  அன்று - பண்டைக்   காலம்.  சீதை  கொண்கன் - இராமன்.
கைவாளி - கையம்பு. உம்மை - சிறப்பும்மை.
(79)    
பாங்கிமதியின் அவரவர் மனக்கருத்துணர்தல்:
      பாங்கிமதியின்   அவரவர்   மனக்கருத்து  உணர்தல்  என்பது  பாங்கின
தன்னறிவினான் தலைவன் தலைவி யென்றிருவரது மனக்குறிப்பை யாராய்ந்து கூறல்.

  புனங்காவ லன்றிவள் பூண்டதும் ஆண்டகை போந்ததுமான்
இனங்காவ லின்கலை யெய்யவன் றாலிக லாழிவிந்தை
தனங்காவ லன்தஞ்சை வாணன் னாட்டிவர் தங்களில்தாம்
மனங்காவல் கொண்டதெல் லாங்கண்க ளேசொல்லும் வாய்திறந்தே.

      (இ-ள்.) போர்செய்யும்  நேமியை  யணிந்த   வீரமகளுடைய  தனத்துக்குக்
காவலனாகிய தஞ்சைவாணனது நல்ல  நாட்டில்,  இவ்விருவரும்  தங்களில்  தாம்
மனத்தைக் காவல் கொண்ட தெல்லாம்,  இவர்கள் கண்கள்  யாமறியவாய் திறந்து
சொல்லுதல்  போல்  அறிவிக்குமாதலால்,  இவள்  மனத்தின்கண்  பூண்டிருப்பது
புனங்காவல்   அன்று;   இவ்வாண்டகை   வந்ததும்   மானினங்கட்குக்  காவலா
யின்பத்தைக் கொடுக்குங் கலை யெய்ய அன்று என்றவாறு.

      ஆண்டகை: அன்மொழித்தொகை. இகல் - போர். ஆழி - நேமி. விந்தை -
வீரமகள்; வாணன் தோளைப் பிரியாதிருத்தலின், `தனங்காவலன்`  என்று கூறியது.
மனங்காவல்  கொள்ளல் - வேறோரிடத்திற்  செல்லாது  காவல்  செய்வதுபோலத்
தம்மிடத்தில் மனத்தை வைத்திருத்தல்.

(80)    
இருவரு முள்வழி யவன்வர வுணர்தல் முற்றிற்று.

      காட்சியில்  தலைவி   ஆயவெள்ளம்   புடைசூழ்ந்து  குற்றேவல்  செய்ய
வீற்றிருந்தாள்   என்று   கூறி  இஙட்ஙனந்  தினைப்புனங்  காத்திருந்தாளென்று கூறியதும்,  தலைவனும பற்பல நூறாயிரங் கூர்வேலிளைஞர் புடைசூழத்  தேரேறி
வேட்டையாட வந்தான் என்று கூறி  இங்ஙனந் தமியனாய்த்  தழையேந்திவந்தான்
என்றும் குறையிரந்தான் என்றும் கூறியதும் மாறுபாடன்றோ எனின் மாறுபாடன்று;
என்னை,தலைவி ஆயக்கூட்டமும்  முன்போலவே  சூழ்ந்து  பிரிந்து விளையாடா
நிற்ப, இவளும் பற்பல