கட
105
பாங்கியிற் கூட்டம்

 
தலைவன் தலைவி தன்னை யுயர்த்தல் :
  மிக்கா ருளரல்லர் மெல்லியன் மாதரின் மேதினிமேல்
தக்கார் புகழ்தஞ்சை வாணர்பி ரான்தமிழ் நாடனையாய்
மைக்கார் நிகர்குழல் வள்ளிசெவ் வேளுக்கு வல்லவையாம்
இக்கா ரணமுண ராதென்கோ லோநின் றியம்புவதே.

     (இ-ள்.) மேதினிமேல்   தகுதியுடையோராற்   புகழப்பட்ட  தஞ்சையிலுள்ள
வாணர்பிரானது  தமிழ்நாடு  போல்வாய்!  மெல்லிய  இயல்பினையுடைய மாதரில்
மிகுதித்   தன்மையை  யுடையா  ரல்லார்  ஆர்?  கரிய   முகிலை   யொக்குங்
குழலினையுடைய   வள்ளி  முருகக்  கடவுளுக்கு  வல்லவையாகிய  இக்காரணம்
உணராது, இயையாது என்று நீ சொல்லுவது என் என்றவாறு.

     `மிக்குள ரல்லரார்`   என மாறுக.   மேதினி - புவி.  தக்கார் - பெரியோர்.
செவ்வேள் - முருகக்கடவுள்.  வாணர்பிரான் - அவன்  குலத்தில்  வாணர் என்று
பிறக்குமவர்கட்கெல்லாஞ்   சிறந்தோன்.   `கொலைகா லயிற்படை நேரியர்கோன்`
(செ.52) என்று   முன்னங் கூறியது போலக் கொள்க.  தமிழ்நாடு - பாண்டியநாடு.
வல்லவை - தேவி. காரணம் - கதை. கொலோ: அசைநிலை.

(83)    
பாங்கியறியாள் போன்று வினாதல்:
      பாங்கி யறியாள் போன்று  வினாதல்   என்பது, இவன்   தலைவியிடத்துக்
காதல்கொண்டது  அறியாள்போல நீ  எவளிடத்துக்  காதல்  கொண்டாள்   என
வினாதல்.

  பொன்னிய லூசலும் பொய்தலு மாடியெப் போதுநன்னீர்
மன்னிய நீலமு நித்தில முங்குற்று வாணன்தஞ்சை
இன்னிய லாரு மிளமரக் காவி னிடம்பிரியாக்
கன்னியர் தாம்பலர் யார்நின்னை வாட்டிய காரிகையே.

      (இ-ள்.) பொன்னாலியன்ற  ஊசலும்  விளையாட்டும்  ஆடியெஞ்ஞான்றும்
நல்ல  நீரினிடத்து  நிலைபெற்ற நிலமும்   முத்தும்  குற்றும வாணனது  தஞ்சை
நாட்டில் இனிய இயல்  பொருந்தும்  இளமரச் சோலையிடம் பிரியாத கன்னியர்கள்
தாம் பலர், அவருள் நின்னை வாட்டிய காரிகை யார்? யான் அறிய உரைப்பாயாக
என்றவாறு.

`பொன்னியல்` என்புழி, மூன்றனுருபு தொக்கது. பொய்தல் - விளையாட்டு.
நீலம் - குவளை. நித்திலம் - முத்து. இன்னியல் - இனிய சாயல். கா-சோலை.
காரிகை - பெண். ஊசலும் விளையாட்டும் இவ்விரண்டையும் ஒருதொழிற்படுத்தி,
`ஆடி` என்றும், நீலமும் நித்திலமும்