|
|
பாங்கி அருளியல் கிளத்தல்: |
பாங்கி அருளியல் கிளத்தல் என்பது, அவ்வாறு தலைவன் கூறக்கேட்ட பாங்கி மடலேறத் தகாது என அருண்முறைமை கூறுதல்.
|
| செயலார் குடம்பையிற் செந்தலை யன்றிற் சினையுளபைங் கயலார் வனவெண் குருகின்வண் பார்ப்புள கைக்கடங்கா மயலார் களிற்றண்ணல் வாணன்தென் மாறைவை யைந்துறைவா இயலா தருளுடை யார்க்கென்று மாமட லேறுவதே.
|
(இ-ள்.) பாகன் கைக்கடங்கா மதத்தால் மயக்கமார்ந்த களிற்றரசனாகிய வாணன் தென்மாறைநாட்டில் வருகின்ற வையைத் துறைவனே, பனையில் புட்களாற் செய்யப்பட்ட செயலார்ந்த வட்டில் சிவந்த தலையினையுடைய அன்றில் முட்டைகளுள; பசிய கயலார்வனவாகிய வெண்ணிறக்குருகின் வளவிய பார்ப்புக்களுள; ஆதலால், அருளுடையார்க்கு எக்காலத்தும் மடன்மா ஏறுதல் பொருந்தாது என்றவாறு. |
எனவே, மடலேறத் தகாது என அருள்முறைமை கூறுதலால், பனைமடலை வெட்டலும், முட்டைகளைச் சிதைத்தலும், பார்ப்புக்களை வதைத்தலும் ஆகிய பாவங்கள் சூழ்தலின், அருளுடையோர்க்கு ஆகாது என்றவாறாயிற்று. மடற்கூற்று அதிகாரப்பட்டு வருதலின் பனையென வருவிக்கப்பட்டது.
|
செயல் - தொழில். குடம்பை - கூடு; `செந்தலையன்றில்` வண்ணச்சிலைச் சொல். |
| 1`அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.`
|
என்னுஞ் சூத்திரத்தான் உணர்க.
|
சினை - முட்டை. குருகு - நாரை. பார்ப்பு - பிள்ளை.
|
| 2`பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற் றிளமை` |
என்பதனான் உணர்க. மயல் - மயக்கம். களிறு - யானை. இயலாது - பொருந்தாது. அண்ணல் - வேந்தன். |
(106) |
|
1. தொல். சொல். கிளவியாக்கம் - 26. |
2. தொல். பொருள். மரபியல் - 4. |