|
|
தோடு - பனைமேலேற்றுங்கால் ஏடு; பெண் மேலேற்றுங் கால் செவியிற்குழை. குரும்பைக் கொங்கை; பனைக்குப் பண்புத் தொகை; பெண்ணுக்கு உவமைத்தொகை. `உண்கட்`பனைக்கு உண்ணுங்கள்; பெண்ணுக்கு மையுண்ட கண். ஒலிடுதல் - ஆரவாரித்தல். `வளநகர்க்கே` என்புழி வேற்றுமை மயக்கம். |
தலைமகன் கூற்றாயின வெல்லாம், `மடற்வற்`றிற்கும், பாங்கி கூற்றாயினவெல்லாம், `மடல்விலக்`கிற்கும் உரித்தாயினவாறு காண்க. |
(107) |
| தலைவி யிளைமைத்தன்மை பாங்கி தலைவர்க்குணர்த்தல்: களவரும் பாகரு நிலங்கள் காமக் கடவுளுமால் கொளவரும் பாபைங் குரும்பைக் குலுஞ்செங் குமுதத்துவெண் தனவரும் பாநண்ப னேதஞ்சை வாணன் தமிழ்வை யைநாட் டிளவரும் பாமிவள் மாட்டேன்கொ லோநின் றிரப்பதுவே.
|
(இ-ள்.) நண்பனே! கருநீலம் போன்ற கண்களிற் களவு அரும்பவில்லை; காமக் கடவுளும் காதல்கொள்ள மார்பில் பசிய குரும்பைக் குலைபோல முலைகள் அரும்பவில்லை; செவ்விய குமுதம் போன்ற வாயில் வெண்டளவு போன்ற பல் அரும்பவில்லை; தஞ்சைவாணன் தமிழ் வையை நாட்டின் அரும்பு போன்ற இவளிடத்தில் யான் சென்று நின்று இரப்பது எவ்வாறு சொல்வாயாக என்றவாறு. |
பொருளை உவமைப்பொருளாய்க் கூறியவெல்லாம் ஆகுபெயர். கொல்லும், ஓவும் அசைநிலை. |
(108) |
| தலைவன் தலைவி வருத்தியவண்ண முரைத்தல்: சிலைபயில் வாணுதல் மின்னே பிறந்தவச் செவ்வியிலே கொலைபயி னாகக் குருளையைப் போற்குறி யோளிருந்த மலைபயில் வார்தமிழ் வாணன்தென் மாறை மயிலனையாள் அலைபயி லால்விழி யாலென தாவி யணங்கினளே.
|
(இ-ள்.) சிலை வளைவு பழகும் வாணுத்லையுடைய மின்னே! குறுமுனிவன் இருந்த மலையில் பழகிய நெடுந்தமிழ்கற்ற வாணன் தென்மாறை நாட்டு மயிலனையாள் பிறந்த அக்காலத்தே கொலைபழகிய நாகக் குட்டியைப் போல் அலையிற் பழகிய ஆலம் போன்ற விழியால் எனது ஆவியை வருத்தினாள் என்றவாறு.
|
சிலை - வில். பயிலல் - நான்கும் பழகுதல். குருளை - குட்டி. குறியோன் - அகத்தியன். `வாணுதல் மின்னே` என்றது சிறப்புருவகம். அலை : ஆகுபெயர். ஆல் என விகாரப்பட்டது; நீலம் - நீலம் என நின்றாற்போல. |
(109) |