கட
தஞ்சைவாணன் கோவை
126

 
     இப்பூந்தழையானது,  ஒலியொடு  கூடித்  தெளிந்த  கடன்மருங்கிற்  சூழ்ந்த
உலகேழிடத்தும் பழவினைதான் வலிதென்று  சொல்வதனை  இப்போது  விளங்கச்
செய்தது என்றவாறு.

எனவே,  கையுறை  யேற்றவா  றாயிற்று.  இதனுள்  கருப்பொருள் மயங்கியவாறு.

1`உரிப்பொரு ளல்லன மயங்கவும் பெறுமே`

என்னுஞ் சூத்திரவிதியால் உணர்க.

    புடை - மருங்கு.  ஊழ்வினை - பழவினை.  வயக்கியது - விளக்கியது.  கலி,
இலாங்கலி தலைக்குறையாய் விகாரப்பட்டு நின்றது: தெங்கில் ஒரு வேறுபாடு. `கலி
தெங்கும்` என்புழி,

  2`எஞ்சுபொருட் கிளவி செஞ்சொ லாயின்`

என்னுஞ் சூத்திரவிதியால்,  உம்மை தொக்கு நின்றது.   உம்மைகள் எண்ணன்கண்
வந்தன. கதலி - வாழை. அடவி - காடு. பூந்தழை - பூவொடு கூடிய தழை.
(115)    
கிழவோனாற்றல்:
கிழவோனாற்றல் என்பது, தலைவன் துயர்மாறிக் கூறுதல்.

  மைப்போ தணிதொங்கல் வாணனொன் னாரென வல்வினையேற்
கப்போ தடைந்த அருந்துயர் நீங்கி யரும்பியபொற்
செப்போ திளமுலை யாணகை வாண்முகத் திங்களைக்கண்
டிப்போ திளகிய தாலிந்து காந்தங்கொ லென்னெஞ்சமே.

(இ-ள்.) குவளைப் போதால் இயன்ற மாலையையணிந்த வாணன் பகைவரையொத்த
வல்வினையேனாகிய  எனக்கு  நென்னலடைந்த அரிய துன்பம் நீங்கித் தோன்றிய
பொற்செப்பு   உவமையாயோதிய   இளமுலையையுடைய   பாங்கியது   மகிழ்ச்சி
ஒளிபொருந்திய   முகத்   திங்களைக்    கண்டு,    இப்போது    மகிழ்ச்சியால்
இளகியதாதலால், என்னெஞ்சம் சந்திரகாந்தம் என்னும் சிலை என்றவாறு.

எனவே,  ஈரமின்றிப்  புலர்ந்த  தன்னெஞ்சம் பாங்கி முகத்  திங்களைக்  கண்டு,
இப்போது மகிழ்ச்சி யென்னும் நீருண்டாதலின், `இந்து காந்தம்` என்று கூறியது.

     மைப்போது - குவளைப்போது. ஒன்னார் - பகைவர். அரும்பல் - தோன்றல்.
கொல் : அசைநிலை.


1. தொல். பொருள். அகத்திணையியல் - 13.
2. தொல். சொல். இடையியல் - 36.