கட
127
பாங்கியிற் கூட்டம்

 
       பாங்கி  கூற்றாயினவெல்லாம்,  `குறைநேர்தற்`கும்,  தலைவன் கூற்றாயின
வெல்லாம், `மடற்கூற் றொழிதற்`கும் உரியவாறு உணர்க.
(116)    
இறைவன் றனக்குக் குறைநேர்பாங்கி இறைவிக்கு
அவன் குறையுணர்த்தல்:
  1இருவர்கண் டால்வரு மேதமென் றெண்ணி யெனக்கெதிரே
வருவர்வந் தாலுந்தம் வாய்திற வார்தஞ்சை வாணன்வெற்பின்
ஒருவர்நஞ் சார லுழையக லார்தழை யுள்ளதெல்லாந்
தருவர்வம் பார்முலை யாயென்கொ லோசெயத் தக்கதுவே.

     (இ-ள்.) வம்பார் முலையாய்!  இருவர் கண்டால் குற்றம்  வருமென்றெண்ணி
எனக்கு எதிராயே  வருவர்,  வந்தாலும்  தம் வாய்திறந்து  ஒன்றுஞ்  சொல்லார்;
தஞ்சைவாணன் வெற்பில்  ஒருவர் நம்முடைய  மலைச்சாரலிடத்தை விட் டகலார்;
இவ்வனத்திலுள்ள  தழைகளையெல்லாங்  கொய்துவந்து தருவர்;  அவர்க்கு யாம்
செய்யத்தக்க தென்னோ என்றவாறு.

     ஏதம் - குற்றம். உழை - பக்கம். வம்பு - கச்சு. கொல் : அசைநிலை.
(117)    
இறைவி யறியாள்போன்று குறியாள் கூறல்:
      இறைவி யறியாள் போன்று குறியாள் கூறல் என்பது, பாங்கி  இவ்வார்த்தை
கூறவே தலைவி தான் கேட்டு அறியாள்போல மனத்திற் கருதாத  வேறொன்றைக்
கருதிக் கூறல்.

பாங்கி வினாவியதற்கு விடைகூறாது வேறொன்று கூறியது 1`செப்பும் வினாவும்வழா
அலோம்பல்` என்று கூறிய  விதியின்றி  வழுவக் கூறுதலால் செப்புவழு  என்னுங்
குற்றந்  தங்குமே  யெனின்,  தங்காது.  என்னை, ஒருவர் வந்திருக்கின்றார், தழை
யுள்ள  தெல்லாந்தருவர்,  அவர்க்கு யாம் என்செய்வோம்?`  என்று  வினாயவழி.
இவள் பெருநாணுடைய ளாதலால்,  அவன் நினைத்தபடி செய்வோமென்று  கூறத்
தகாதாதலானும், இவள் கற்புக்கடன் பூண்டவளாதலானும், மறுக்கத்தகா தாதலானும்,
காமம்  ஒருபாலும்  நாணம்  ஒருபாலும்  ஈர்த்துக்கொண்டு  நிற்றலின்,  ஒருபாற்
சாரமாட்டா  ளாதலானும்,  என்செய்வோம் என்று நெஞ்சிற் கவற்சியுற்று  நடுவாக
நின்றாளாகலான்,  அவள்  கேட்டதற்கு  விடை  செவ்வன்  கூறாது,   அக்கணம்
மனத்திற்   றோன்றிய  வொன்று  கூறுவது,  இவ்விடத்திற்கு  முன்னம்  என்னும் உறுப்பாதலின், இவ்வாறு கூறுதல் செப்புவழு அன்றெனக் கொள்க.


1. தொல். சொல். கிளவியாக்கம் - 13.