|
|
பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல்: |
பாங்கி தலைவியைச் சார்ந்து கையுறை காட்டல் என்பது, குறியிடத்து நிறுத்திப்போயின பாங்கி தலைவன் போயினபின்தான் கையுறைக்குப் போயின பாவனையாய்க் கையுறை கொண்டு வந்து காட்டல்.
|
| பொய்போ லிடைநின் விழிபோற் குவளையம் போதிவைநின் மெய்போ லசோக மிளிர்பூந் தழையிவை மெல்லியனின் கைபோற் கவின்கொள்செங் காந்தளம் போதிவை கண்டருள்யான் மைபோற் குழலிதந் தேன்தஞ்சை வாணன் வரையினின்றே.
|
(இ-ள்.) மையை யொக்குங் குழலையுடையாய்! தஞ்சை வாணன் வரையினின்று யான் நினைக்குத் தந்தேன்; பொய்யை யொக்கும் இடையாய்; நின் கண்களையொக்குங் குவளைப் போது இலை; நினது மெய்யைப்போ லொளிவிடும் அசோகப் பூந்தழை இவை; மெல்லிய இயலையுடைய நினது கையைப் போல அழகுகொண்ட செங்காந்தட்போது இவை; நீ கண்டருள்வாய் என்றவாறு. |
மிளிர்தல் - ஒளிவிடுதல். கவின் - அழகு. மை - மேகம். `பொய் போலிடை` `மைபோற் குழலி` என இரண்டு முன்னிலை வந்தவாறு காண்க. `தஞ்சைவாணன் வரையின் யான்` என மாறுக. அம்மூன்றும் சாரியை. |
(137) |
தலைவியைப் பாங்கிற் கூட்டல்: |
| குளிநாண் மதிநுதற் கோகில மேநின் குழலிலெல்லாப் பனிநாண் மலரும் பறித்தணிந் தேனிந்தப் பார்மடந்தை தனிநா யகன்தஞ்சை வாணன்றண் சாரல் தனித்துநில்லா தினிநா மகன்றிளை யார்விளை யாடிட மெய்துதுமே.
|
(இ-ள்.) வளைந்த நாட்கொண்ட மதிபோன்ற நுதலையுடைய கோகிலமே! நினது குழலினிடத்தில் வனத்திலுள்ள குளிர்ந்த முறுக்கவிழ்ந்த மலரனைத்தும் பறித்தணிந்தேன்; இந்தப் பூமடந்தைக் கொப்பற்ற நாயகனான தஞ்சைவாணனது குளிர்ந்த மலைச்சாரலிடத்துத் தனியாய் நில்லாது இவ்விடத்தினின்றும் அகன்று, இப்போது இளையார் விளையாடுமிடத்தை யாம் எய்துவோம் என்றவாறு.
|
குனிநாண்மதி - பிறை. `மதிநுதற் கோகிலம்` என்றது சிறப்புருவகம். தனி - ஒப்பின்மை. நாண்மலர் முறுக்கவிழ் மலர். |
(138) |