|
|
பெருமகள் ஆற்றின தருமை நினைந் திரங்கல்: |
பெருமகள் ஆற்றினது அருமை நினைந்து இரங்கல் என்பது, தலைவி தலைவன் வரும் வழியினது அருமையை நினைந்து இரங்கல்.
|
| செழியன் கயலைத் திசைவைத்த வாணன்தென் மாறையென்மேல் கழியன் புடையநின் கால்கண்க ளாகக் கராம்பயிலும் குழியன்றி யும்வெஞ் சுழியொன்றும் யாறுங் குழீஇக்கொடிதாம் வழியன்ப நீயெங்ங னேவந்த வாறிம் மழையிருளே.
|
(இ-ள்.) அன்பனே! பாண்டியனது கயற்கொடியயைத் திசை யெட்டினும் நிறுத்திய வாணனாட்டில் இருக்கின்ற என்மேல் மிகுந்த அன்பையுடைய நின் கால்களே கண்களாக முதலைகள் நெருங்குங் குழிந்த மடுவல்லாமலும் வெவ்விய சுழி பொருந்தும் அருவியாறுங் கூடிக் கொடியதாம் வழியில் இம் மழைக்காலிருளில் நீ வந்தவாறு எவ்வாறு என்றவாறு. |
செழியன் - பாண்டியன். கயல் : ஆகுபெயர். கழி - மிகுதி. கால் கண்களாதல், இருட்செறிவால் அக்கண் நெறி சொல்லதாகலான் காலறிவாற் றடவிவருதல். கராம் - முதலை. பயிலுதல் - நெங்குதல். குழீஇ - கூடி. |
(178) |
புரவலன் தேற்றல்: |
புரவலன் தேற்றல் என்பது, தலைவியைத் தலைவன் தேற்றல்.
|
| வெயிலுந் தரவிந்த மென்மல ரன்னமும் விந்தைவெற்றி மயிலும் பயில்புயல் வாணன்தென் மாறைநின் வாள்விழிபோல் அயிலுங் குயில்மொழி நின்னிடை போன்மின்னு மாடனிகள் பயிலுந் தொடைநின் குழல்போ லிருளைப் பருகினவே.
|
(இ-ள்.) குயில்போன் மொழியாய்! வெயிலினாலே முறுக்கைத் தள்ளப்பட்ட மெல்லிய தாமரை மலரிலிருக்குஞ் செல்வத்திருவும், விந்தையாகிய வெற்றித்திருவும் பழகிய புயத்தை யுடையவனாகிய வாணன் மாறைநாட்டு நின் ஒளியையுடைய விழியை யொக்கும் என் கைவேலும், நின் இடையையொக்கும் மின்னும், ஆடும் வண்டுகள் செறிந்த மாலை சூழ்ந்த நின்குழலை யொக்கும் இருளைக் குடித்தன. ஆதலால், யான் அச்சமின்றி வந்தேன் என்றவாறு.
|
உந்தல் - தள்ளுதல். அரவிந்த மென்மலர் அன்னம் - செல்வத்திரு. விந்தை வெற்றிமயில் - வெற்றித் திரு. பயிலுதல் - பழகுதல். அயில் - வேல். பயிலுதல் - செறிதல். பருகுதல் - குடித்தல். |
(179) |