|
|
பல்லியம் - முரசு. உருமேறு - இடி. பார்ப்பது - கருதுவது. வல்லியம் - புலி. போதகம் - யானை. கான் - காடு. அல்லி - அகவிதழ். அம்போருகை - திருமகள். கேள் - உறவு. அருளாசை - தருமாசை. நின்று - குறியிடத்து நின்று. எல்லியம்போது - இராப்போது. கேள்வர். கொண்கர். |
(200) |
என்பிழைப் பன்றென்று இறைவி நோதல்: |
என்பிழைப்பு அன்றென்று இறைவி நோதல் என்பது குறிபிழைத்தது என்பிழை யன்றென்று இறைவி நொந்து கூறல்.
|
| வியலூ ரெயிற்புற நொச்சியி னூழ்மலர் வீழ்தொறெண்ணி மயலூர் மனத்தொடு வைகினன் யான்தஞ்சை வாணன்வெற்பர் புயலூ ரிருட்கங்குல் வந்தவ மேநின்று போயின்ரென் றயலூர் நகைக்குமென் னேயென்ன பாவங்கொ லாக்கினவே.
|
(இ-ள்.) அகலம் பரந்த மதிற்புறத்து நொச்சிமரத்தினது பழையமலர் சரசரத்து வீழ்தோறும் வீழ்தோறும் தலைவர் வருகின்றார் என்னும் ஆசை செல்லு மனத்தோடு யான் இருந்தேன்; தஞ்சைவாணனது வெற்பிலுள்ளாராகிய தலைவர் புயல்கள் செல்லும் இருளில் வந்து பயனின்றியே நின்ற மீண்டு போயினர் என்று அயலூர் அறியில் நகைக்குமாதலால், இவ்வாறு ஆக்கியது என்ன பாவமோ, செய்யுமாறு என்னே என்றவாறு.
|
வியல் - அகலம். ஊர்தல் - பரத்தல். எயில் - மதில். ஊழ்மலர் - பழைய மலர். மயல் - ஆசை. ஊர்தல் இரண்டும் செல்லுதல். என்னே என்பது இகழ்ச்சியான் வந்தது. `அயலூர் நகைக்கும்` எனவே இகழ்ச்சி பிறந்து அவ்விகழ்ச்சிக்கண், `என்னே` என்று இழிவு தோன்றியவாறு உணர்க. |
(201) |
இத்துணையும் பகற்செய்தியென்று உணர்க. |
அல்லகுறி முற்றிற்று. |