|
|
சாரற் குறியிடத்தில் பயனின்றியே வருவாய்; எங்கள் மாநகரில் நீ வேதம் வல்ல அந்தணரொடும் வந்து தோன்றி வரைவு கூறினையேல் எங்கள் சுற்றத்தார் நின் சொல்லைக் கடவார்; அஃதென்னெனின், ஞாயிற்றைக் கண்டால் குளத்திலிருக்கும் தாமரை அலராது ஒழியா; ஆதலால், அந்தணரை முன்னிட்டுக்கொண்டு வருவாயாக என்றவாறு. |
எனவே, வெளிப்படையால் வரைவு கடாவியது. |
குருதி - இரத்தம். அம்: சாரியை. குறி: ஏழாம்வேற்றுமைத் தொகை. கண்டாய்: முன்னிலை யசைச்சொல். சுருதி - வேதம். கண்டார் - முடிவுகண்டார். இகத்தல் - கடத்தல். `நின்சொல் இகழார்` என்று பாடமோதுவாரு முளர். `அலராது ஒழியா` என்பது அலருமென்னும் பொருடந்து நின்றது. |
(233) |
வரையுநா ளுணர்த்தல்: |
வரையுநாள் உணர்த்தல் என்பது, மணஞ்செய்கின்ற நாளை அறிவித்தல். |
| அலகம் பனகண் ணிவள்கொங்கை மென்சுணங் காகிவண்டு பலகம் பலைசெய்யப் பூத்தன வேங்கை பனிவரைமேல் திலகம் பதித்தெனச் சேல்வைத்த வாணன்தென் மாறைமன்னன் உலகம் பயில்புகழ் போற்சிலம் பாமதி யூர்கொண்டதே.
|
(இ-ள்.) சிலம்பனே! கூர்மை பொருந்திய அம்பு போன்ற கண்ணையுடைய எங்கள் தலைவியது இறுகி வளர்ந்த முலைமேல் பரந்த மெல்லிய சுணங்குபோல வண்டுகள் பலபல விதமாய் ஆரவாரஞ் செய்ய வேங்கைகள் பூத்தன; பனிவரைமேல் திலகம் பதித்ததுபோன்ற சேற்கொடியை வைத்த வாணனாகிய தென்மாறை மன்னனது உலகமெல்லாமாக வளைந்த புகழ்போல் திங்களைப் பரிவேடம் வளைந்தது என்றவாறு. |
எனவே, இது வரையுநாளென வெளிப்படையான் உணர்த்திய வாறாயிற்று. |
அலகு - கூர்மை. அம்பு - கண். கணங்கு - மாமைநிறம். கம்பலை - ஆரவாரம். பனிவரை - இமயமலை. சேல் : ஆகுபெயர். பயிலுதல் - வளைதல். ஊர் - பரிவேடம். `வண்டு கம்பலை செய்யப் பூத்தன வேங்கை; என்றதனால், `வேங்கை சண்பகம் வண்டுணா மலர்` என்னும் விதியான், வேங்கைப் பூவை வண்டு அணுகாதாதலால் இங்ஙனம் கூறிய தென்னையெனின், வேங்கை மரத்தினும், சண்பகமரத்தினும் வண்டுண்ணாதிராது, உண்ணின் அதனான் மயங்கி மூர்ச்சையினை யடையும், பூவைக் கொண்ட உவகையால் ஆரவாரிக்கும், அதுபற்றிக் கூறியவாறு. |
(234) |