|
|
புராந்தகர் - ஈசர். புள் - வண்டு. இமிழ்தல் - ஆரவாரித்தல். குராந்தொடை - குருவமாலை. கொம்பு: ஆகுபெயர். மராம் - செங்கடம்பு. `மராந்தழுவும் வெற்பு` எனக் கூட்டுக. வல்சி - இரை. தேர்ந்து - தேடி. இலஞ்சி - குழிந்தாழ்ந்த நீர்நிலை. கராம் - முதலை. கல்லதர் -இருமருங்கும் நெருங்கிய வழி. எல்லி - இரவு. கற்பு - முறைமை.
|
ஓரறிவாகிய கடம்பு முல்லைக்கொடியைத் தழுவியதுபோல ஆறறிவொடுங் கூடிய உயர்பிறவியாகிய நீ கொடிபோல்வாளைத் தழுவுவாயாக என்று உள்ளுறையுவமங் கொள்ளக்கிடந்தவாறு உணர்க. |
(242) |
ஆற்றாத் தன்மையாற்றக் கூறல்: |
ஆற்றாத் தன்மை யாற்றக் கூறல் என்பது, தலைமகளது ஆற்றாத தன்மையை ஆற்றுதல் செய்யத் தலைவற்குக் கூறல். |
| கலங்குந் தெளியுங் கனலெழ மூச்செறி யுங்கண்ணிளீர் மலங்கும் பொலந்தொடி சோரமெய் சோரு மறஞ்செய்கொலை விலங்கும் படிறுசெய் யாக்குன்ற நாட விரைந்தளிப்பாய் அலங்குங் கடும்பரித் தேர்வாணன் மாறை யணங்கினையே.
|
(இ-ள்.) விளங்கப்பட்ட கடிய வேகத்தையுடைய பரி பூட்டிய தேரையுடைய வாணன் மாறையின் மறமாகச் செய்யுங் கொலைத் தொழிலையுடைய விலங்கும் களவுசெய்யாத மலைநாட்டை யுடையானே! கலங்கும்; தெளியும், நெருப்பெழப் பெருமூச்செறியும், கண்களில் நீர்ததும்பும்; பொன்னாற் செய்த தொடிகழல மெய்யிளைக்கும் என்று சொல்லப்பட்ட அணங்கு போல்வாளை விரைந்து அளிப்பாயாக என்றவாறு.
|
அளியாவிடின் இறந்துபடும் என்பது தோன்றியவாறு. இவ்வாறு கூறவே, வரைந்துகொள்வாயென்று குறிப்பாற் கூறியவாறாயிற்று. மலங்கல் - ததும்பல். சோருதல் - கழலுதல். சோருதல் - இளைத்தல். மறம் - பாவம். கொலை - கொல்லுந் தொழில். விலங்கும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. படிறு - களவு. குன்றநாடு - மலைநாடு. அலங்கல் - விளங்கல். பரி - குதிரை. அணங்கு: ஆகுபெயர். புன்மையறிவாகிய விலங்கும் களவு செய்யா எனவே மேலறிவாகிய நினக்கு வரையாது களவிலொழுகத் தகாதெனக் குறிப்பாற் கூறியவாறாயிற்று. |
(243) |