205
வரைவு கடாதல்

 
துறைவனேயென்று கூறியவதனால், நீங்கள் இருவீரும் மணத்தொடு கூடியிருப்பீரென
உள்ளுறையுவமம் தோன்றியவாறுணர்க.
(245)    
கனவுநலிபுரைத்தல்:

     கனவு நலிபு உரைத்தல் என்பது, தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைப்
பாங்கி தலைவற்கு உரைத்தல்.

 மாணாத தெவ்வென்ற வாணன்தென் மாறை வளநகர்போல்
பூணாக மெல்லியற் வுல்லினை யாகவப் பொய்யைமெய்யாப்
பேணா மகிழ்ந்து பெருந்துயி லேற்றவள் பின்னைநின்னைக்
காணாள் கலங்கின னாற்கலங் காமனக் காவலனே.

     (இ-ள்.) கலங்காத   மனத்தையுடைய    காவலனே!    மாட்சிமை யில்லாத
பகைவரை  வென்ற  வாணன் தென்மாறை வளநகரைப் போன்ற  பூண்பொருந்திய மார்பையுடைய  மெல்லியலைக்  கனவினிடைத் தழுவினையாக, அந்தப் பொய்யை மெய்யாக  விரும்பி மகிழ்ச்சியை யடைந்து  பெரிய துயிலையுற்றவள் துயிலுணர்ந்த பின்பு   நின்னைக் காணளாய்க் கலங்கினள் என்றவாறு.

     மாணாத - மாட்சிமையில்லாத.   தெவ் - பகை:   ஆகுபெயர்.  பூணாகம் -
பூண்பொருந்திய மார்பு.  மெல்லியல்: தலைவி. பேணி - விரும்பி. பேணா: செய்யா
என்னும்  வினையெச்சம். ஆல்: அசை. `பெருந்துயில ஏற்றவள்` என்றதனால் கனவு
வருவிக்கப்பட்டது.
(246)    
கவினழிபுரைத்தல்:
     கவின் அழிபு உரைத்தல் என்பது, தலைவி அழகு அழிந்ததனைத் தலைவற்குக்
கூறுதல்.
 ஏரேற்ற கொங்கை யிளங்கொடி மாந்தளி ரேய்ந்தவண்ணம்
காரேற்ற கங்குலிற் பீரலர் போன்றது காவியுண்கண்
வாரேற்ற பைங்கழல் வாணன்தென் மாறையில் வாவியின்கண்
நீரேற்ற செங்கழு நீர்மலர் போன்றது நின்பொருட்டே.

     (இ-ள்.) தலைவனே!  நின்பொருட்டு  அழகு  நிறைந்த  கொங்கையையுடைய
இளங்கொடி   போன்றவளது  மாந்தளிர்க்கு  ஒப்பாகிய  அழகு    கருமைநிறைந்த
இராக்காலப் பீர்ப்பம்பூப் போன்றது; கருங் குவளைபோன்ற உண்கண், வார்கோத்துக்
கட்டிய   பைம்பொன்னாற்   செய்த   வீரக்கழல்   புனைந்த வாணன் தென்மாறை
நாட்டிலுள்ள   வாவியிடத்துச்   செங்கழுநீர்  மலரில் நீர் நிறைய முகந்து கொண்ட
மலர்போன்றது என்றவாறு.