|
|
அஞ்சாநிற்கும்; நெருங்கிய கண்களார்ந்த சிறகாகிய தலையையுடைய மயில் காந்தளை அரிய மணியை யுமிழும் நாகமெனச் சினங்கொண்டுவர அல்லாமையினால் காந்தளைச் சேர்ந்து பெருமூச்செறிந்தன; ஆதலால், வம்பன்று; காலத்தில் வந்த கார் இஃது என்றவாறு. |
எனவே, காந்தள் மலருங் காலம் கார்காலமென்பது தோன்றக் கூறினாளென்க. தகை - அழகு. அன்னம் : ஆகுபெயர். `வரையகத் தென் கண்பார்த்து` என வியையும். `கண் பார்த்து` என்னும் வினை யெச்சம் தன்வினையைக் கொண்டு முடியாது, `நெஞ்சஞ்சும்` எனப் பிறவாற்றான் முடிந்தது. என்னையெனின், 1`உரற்கால் யானை யொடித்துண் டெஞ்சிய, யாநிழற் றுஞ்சிய செந்நாயேற்றை` என்றாற்போலுங் கொள்க. |
தூவி - சிறகு. கோபம் - சினம். தோன்றி - காந்தள். ஆவித்தல் - பெருமூச்செறிதல். காந்தள் என்புழி இரண்டனுருபு தொகுத்தல். காலுதல் - உமிழ்தல். |
(270) |
அவர் தூதாகி வந்தடைந்ததிப் பொழுதெனத் துணைவி சாற்றல்: |
அவர் தூதாகி வந்து அடைந்தது இப்பொழுது எனத் துணைவி சாற்றல் என்பது, தலைவி கார்காலம் வந்ததென்று கூறியசொற் கேட்ட பாங்கி, தலைவன் தான் வருகின்ற செய்தியை அறிவித்தற்கு விடுப்ப இப்பொழுது இக்கார் தூதாய் வந்து அடைந்ததென்று கூறல். |
| இன்னே வருவர்நின் காதல ரேதில ரேங்கவினிக் கொன்னே யிரங்கி வருந்தல்கண் டாய்கொற்ற நேமிவிந்தை மன்னே யெனவந்த வாணன்தென் மாறை வுரவுணர்த்த முன்னே நடந்தன காண்கடுங் கால முகிலினமே.
|
(இ-ள்.) அலர்தூற்றும் அயலாரேங்க நின் காதலர் இப்போதே வருவர்; இன்று வீணேயிரங்கி வருந்தலை; வெற்றியாழியைப் புனைந்த சயமாதுக்கு இறைவனென வந்த வாணன் தென்மாறை நாட்டில் தலைவர் வரவுணர்த்த விரைவொடு கூடிய முகிலினம் முன்னே நடந்துவந்தன காண்பாயாக என்றவாறு. |
இன்னே - இப்போதே. ஏதிலர் - அயலார். கொன்னே - வீணே. கண்டாய்: முன்னிலையசை. கொற்றநேமி விந்தை - சயமாது. மன் - இறைவன். முகிலினம் - முகிற்கூட்டம். |
(271) |
|
1. குறுந்தொகை - 232. |