கட
தஞ்சைவாணன் கோவை
238

 
பாங்கி இயற்பழித்தல்:
பாங்கி  இயற்பழித்தல்  என்பது,  தலைமகன்  இயலைப்  பாங்கி பழித்துக் கூறல்.

  மழவே துறந்து மறந்தவர் போற்றஞ்சை வாணன்வென்றி
முழவேய முந்நீர் முழங்கிருங் கானல் முழுதுலகும்
தொழவே தகுந்ததெய்வ நோக்கிச்செல் லேனென்று சொல்லியுநீ
அழவே துறந்தன ரால்நல்லர் நல்லரவ் வாடவரே.

    (இ-ள்.) தஞ்சைவாணனது    வெற்றி    முரசொலிக்கு    ஒப்பாகக்   கடல்
முழங்கப்பட்ட  பெரிய  கழிக்கரைச்  சோலையிடத்து  உலகமுழுதும் தொழத்தக்க
தெய்வத்தை நோக்கிப் பிரியேன் என்று சொல்லியும் இளமைப் பருவத்தே  துறந்து
மறந்தவர்போல  நீ  அழத்தக்கதாகத்  துறந்து  போயினாராதலால்   அவ்வாடவர்
நல்லர் நல்லர் என்றவாறு.

மழவு - இளமை.      முழவு - முரசு.      ஏய - ஒப்பாக.     முந்நீர் - கடல்.
இருமை - பெருமை.   கானல் - சோலை.   உலகமுழுதும் என இயையும். நல்லர்
நல்லர்,   தீயர்  தீயர்  என இகழ்ச்சிக்  குறிப்பின்கண்  வந்த  அடுக்கு  மொழி.
`அவ்வாடவர் நல்லர் நல்லர்` என இயையும்.
(292)    
தலைமகள் இயற்பட மொழிதல்:
    தலைமகள் இயற்பட மொழிதல் என்பது, அங்ஙனங் கூறக் கேட்ட தலைமகள்
சொற்பொருள் ஓரியல்புபட மொழிதல்.

  மாகப் புயல்மண்ணில் வந்தன வாணன்தென் மாறைமுந்நீர்
நாகப் புகர்ச் செய்ய புள்ளிப்பைங் கான்ஞெண்டு நாகிளந்தண்
பூகக் குளிர்நிழற் பேடையொ டாடும் புலம்பரின்னார்
அகக் கருதினல் லாயினி யாரினி யாருளரே.

    (இ-ள்.) நல்லாய்!     வானத்திடத்திலிருக்கும்     மேகம்    மண்ணிடத்தில்
வந்ததுபோன்ற  வாணன்  தென்மாறை   நாட்டுக்   கடலிடத்துப்   புன்னைமரத்
தடியிலிருக்கும்  புகராகிய  சிவந்தநிறம்  புள்ளியையும்  பசிய காலையும் உடைய
ஆண்ஞெண்டு  நாகுப்பருவத்தையுடைய   வளமையையும்   தட்பத்தையுமுடைய
குளிர்ந்த  கமுகினிழலில்   பெடைஞெண்டைப்   பிரியாமற்  
 கூடும் புலம்பரைப்
பொல்லாராகக் கருதின நமக்கு இனியராயுள்ளார் இனி யார் என்றவாறு.

    அவரே  நமக்கு  இனியராய் வந்து  கூடுவாராதலால் அவரை  இயற்பழித்துக்
கூறத்தகாது என்றவாறாயிற்று. 
    மாகம் - ஆகாயம். புயல் - மேகம். நாகம் - புன்னை.  நாகு - இளங்கன்றுப்
பருவம் நீங்கிக் கருக்கொள்ளுங் காலம்; என்னை, பசு