|
|
தலைவன் போக்குடன்படுதல்: |
| நஞ்சோ அழலோ வெணுஞ்சுர மேசெல்ல நாடியவென் நெஞ்சோ கொடியது நேரிழை யாய்நிழல் மாமதியோ மஞ்சோ தவழ்மதில் சூழ்தஞ்சை வாணன் வரையிலவம் பஞ்சோ அனிச்சங் கொலோவெனுஞ் சீறடிப் பைந்தொடிக்கே.
|
(இ-ள்.) நேரிழையாய்! ஒளியையுடைய மதியும் முகிலும் தவழப் பட்ட மதில்சூழ்ந்த தஞ்சைவாணன் வரையிலுள்ள இலவம் பஞ்சோ அல்லது அனிச்சம்பூவோ என்று சொல்லப்பட்ட சிறிய அடியையும் பசிய தொடியையும் உடையாட்கு நஞ்சோ அழலோ என்று சொல்லப்பட்ட காட்டிற் செல்லக்கருதிய என் நெஞ்சோ மிகக் கொடியது என்றவாறு.
|
பைந்தொடி: அன்மொழித்தொகை. அழல் - நெருப்பு. நிழல் - ஒளி. அனிச்சம்: ஆகுபெயர்.
|
நஞ்சோ அழலோ என்புழி ஒகாரமும், பஞ்சோ என்புழி ஒகாரமும் அனிச்சங்கொலோ என்புழிக் கொல்லும் ஐயம். சுரமோ என்புழி ஓகாரமும், கொலோ என்புழி ஓகாரமும் அசைநிலை. நெஞ்சோ என்புழி ஓகாரம் சிறப்பு. மதியோ மஞ்சோ என்புழி ஓகாரம் எண்ணின்கண் வந்தன. |
(308) |
தலைவிக் குடன்போக் குணர்த்தல்: |
தலைவிக்கு உடன்போக்கு உணர்த்தல் என்பது தலைவனுடன் போதலைப் பாங்கி தலைவிக்கு உரைத்தல். |
| பாலன்ன பாயற் பகையென்னுஞ் சீறடி பட்டுருவும் வேலன்ன கூர்ங்கல் மிதிக்ருங்கொ லென்றனர் மேதினிக்கு மாலன்ன வாணன்தென் மாறைநன் னாட்டு வயலுகளுஞ் சேலன்ன நிள்விழி யாய்தெரி யாதன்பர் சிந்தனையே.
|
(இ-ள்.) மேதினிக்கு மால்போன்ற வாணனது தென்மாறைநாடு சூழ்ந்த வயலிற் பிறழப்பட்ட சேலையொத்த நீண்ட விழியினை யுடையாய்! மல்லிகைப்பூவால் நிரைத்தலால் அப்பாலையொத்த படுக்கையைப் பகையென்று சொல்லப்பட்ட சீறடியாயின, அது பட்டு உருவப்பட்ட வேல்போன்ற கூரிய கல்லை மிதிக்குமோ என்றதனால் அன்பர் நினைத்த சிந்தனை யாதோ தெரியாது என்றவாறு. |
`மல்லிகைப்பூவால் நிரைத்தல்` என்பது அவாய்நிலையான் வந்தது. பாலன்னபாயல் - வண்ணவுவமம். பாயல் - படுக்கை. உகளுதல் - புரளுதல். கொல் : ஐயம். |
(309) |