கட
249
உடன்போக்கு

 
தலைவி நாணழிவிரங்கல்:
தலைவி நாணழிவு இரங்கல் என்பத, உடன்போக்கில் நாணழியுமே யென்றதற்குத்
தலைவி யிரங்கிக் கூறல்.

  மறவாகை வேலங்கை வாணனை மாறையர் மன்னனைத்தம்
உறவாக வெண்ணி யுறாதவர் போலுயி ரோம்பியென்றும்
துறவாத நாணத் துறப்பது வேண்டலிற் றொல்லுலகில்
பிறவா தொழகைநன் றேயொரு காலமும் பெண்பிறப்பே.

     (இ-ள்.) வீரத்தால் வெற்றிகொண்ட வேலை அகங்கையிற் பிடித்த  வாணனை
மாறைநாட்டார்க்கு  மன்னவனைத்  தமக்கு உறவாக எண்ணி யுறாத பகைவர்போல்
உயிர்காத்தற்பொருட்டு என்றுந் துறத்தற்குத் தகுதியல்லாத  நாணத்தைத்  துறப்பது
வேண்டிற்றாகலான்,    பழையதாகிய   உலகில்   ஒருகாலமும்    பெண்பிறப்புப்
பிறவாதொழித்துவிடல் நன்று என்றவாறு.

     மறம் - வீரம். வாகை - வெற்றி. அங்கை - அகங்கை.

  1`அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே யாசிரி யர்க்க`

என்னுஞ் சூத்திர விதியானுணர்க. ஓம்பல் - காத்தல்.
(310)    
கற்புமேம்பாடு பாங்கி கழறல்:

கற்பு  மேம்பாடு  பாங்கி  கழறல்  என்பது,   கற்பின்   மேம்பாட்டைப்  பாங்கி
தலைவிக்குக் கூறாநிற்றல்.

  செந்நாண் மலரிற் றிருவன்ன கோலத் தெரிவையர்க்கு
மெய்ந்நா ணுயிரினு மிக்கதென் றால்விர வாவரசர்
தந்நாண் முறைமை தவிர்த்தருள் வாணன் தமிழ்த்தஞ்சைநாட்
டந்நா ணமுமட வாய்கற்பு நோக்க அழகிதன்றே.

(இ-ள்.) மடப்பத்தையுடையாய்!    சிவந்த    முறுக்கவிழ்    பருவத்த     தாய
தாமரைமலரிலிருக்கின்ற    திருவையொத்த    அழகையுடைய   தெரிவையர்க்கு
மெய்யின்கணிருக்கின்ற  நாண்  உயிரினுஞ்   சிறந்ததென்ற   சொல்லின்,  உறவு
கலவாத    வேந்தர்    தம்முடைய    வாழ்நாள்     முறைமை     தவிர்த்துக்
கிளையாயுள்ளவரிடத்து  அருளைத்  தரும  வாணன்  தமிழ்த்  தஞ்சை  நாட்டில்
சொல்லப்பட்ட அந்நாணமும் கற்பைக் கருதுமிடத்தில் அழகிதன்று என்றவாறு.

 
1. தொல். எழுத்து. புள்ளிமயங்கியல் - 20.