தஞ்சைவாணன் கோவை
252

 
நானம் - மான்மதம்.   மன்றல் - மணம்.   புணர்தல் - கூடல்.  கிளை - சுற்றம்.
இன்னாமொழி - அலர்மொழி.   `மன்றலம் பூங்குழல்,  தஞ்சைவாணன்  வையைச்
சுழிநாணு முந்தி` எனக் கூட்டி ஆகுபெயராகக் கூறுக.
(315)    
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல்:
தலைமகளைத் தலைமகன் சுரத்துய்த்தல் என்பது, ஐம்பத்து மூன்றாநாள்,
தலைமகன் தலைமகளைச் சுரத்திற் செலுத்தல்.

 தளிபோற் கொடைபயில் சந்திர தமிழ்த்தஞ்சையான்
அளிபோற் குளிர்ந்த இளமரக் காவு மவன்புகழின்
ஒளிபோல் விளங்கிய வெண்மணல் யாறு முவந்துகண்டு
நளிபோ தவிழ்குழ லாய்மெல்ல மெல்ல நடந்தருளே.

(இ-ள்.)  குளிர்ச்சி   யுடைய   மலர்   முறுக்கவிழப்பட்ட  குழலை   யுடையாய்!
மேகம்போற்   கொடுக்குந்தொழில் பழகிய சந்திரவாணனாகிய தமிழ் விளக்கப்பட்ட
தஞ்சையான்  அன்புபோல்  குளிர்ந்த  இளமரச்  சோலையும்  அவனது  புகழின்
ஒளியைப்போல   வெண்மணல்செறிந்த   கான் யாறும்  கண்டு மகிழ்ந்து  மெல்ல
நடந்தருள்வாயாக என்றவாறு.

தளி - மேகம்.    பயிலுதல் - பழகுதல்.    அளி - அன்பு.      கா - சோலை.
ஆறு - கான்யாறு.     உவத்தல் - மகிழ்தல்.    நளி - குளிர்ச்சி,   `கண்டுவந்து`
என இயையும்.
(316)    
தலைமகன் றலைமக ளசைவறிந் திருத்தல்:
    அசை - வருத்தம்.   1`  அன்புகொண்  மடப்பெடை யசைஇய  வருத்தத்தை`
என்றார் பிறரும். அசைஇய - வருந்திய.

 வரமாமை வேற்படை வாணன்தென் மாறை வணங்கலர்கள்
புரமான வல்லழல் பொங்குவெங் கானிற் பொருந்தியகூர்
அரமான கல்லுன் னடிமல ராற்றல வாதலினாம்
சுரமாறு மெல்லைநல் லாயிருப் பாமிந்தச் சோலையிலே.

(இ-ள்.) நல்லாய், வரத்தையுடைய   மாமைநிறம் பொருந்திய வேற்படையையுடைய
வாணன்   தென்மாறையை  வணங்காதார்  நகரைப்போல, வலிய அழல்  பொங்கி
யெழும்   வெய்ய   காட்டில்  கூர்பொருந்திய  அரத்துக் கொப்பான கற்கள் உன்
அடிமலர்   பொறுக்குந்தன்மைய  அல்ல; ஆதலால்,  சுரம் ஆறுமளவும்   இந்தச்
சோலையிலே யிருப்பாம் என்றவாறு.

1. கலித். பாலை - 10.