தஞ்சைவாணன் கோவை
262

 
    (இ-ள்.) இப்   பதியிடத்து  மகிழ்ச்சி  கொண்டிருக்கின்ற காகமே! பாவியாகிய
யான் பெற்ற  கொம்புபோல்  வாளை  ஈண்டுவர நீ அழையாய்,   அழைத்தவுடனே
வருவள்; அவள்   வந்தால்,  வடித்த    தொழில்    பொருந்திய   புகர்நிறத்தை
முகத்திலுடைய   வாட்   டொழிலில்   வல்ல  வாணனது  தென்மாறையுள் யான்
வழிபடு கடவுளாக   நின்னைப்போற்றி,  சோறு  தசை  முதலிய  அரிய  பலியை
இன்று கொடுத்தாற் போல் என்றும் தருவேன் என்றவாறு.

வடி - வடித்த தொழில்.  புகர் - இரத்தக் கறைப்புள்ளி. அடி தொழுந் தெய்வம் -
வழிபடுகடவுள்.   பேணி - போற்றி.   அரியபலி - கிடையாத   பலி. இன்னே -
இப்போதே.  கொடி - காகம்.  கரைதல் - அழைத்தல்.  காகமழைத்தல்  ஊர்க்குப்
போயினார் வருவரென்னும உலகியல்புபற்றிக் கூறினளென்று உணர்க.
`இன்னே வர` என இயையும்.
(334)    
சுரந்தணிவித்தல்:
சுரம் தணிவித்தல் என்பது, சுரத்தின்வெம்மை குளிருமாறு கூறுதல்.

 வெஞ்சுர நாடு வியன்சுர லோகமும் வெங்கடுங்கான்
ஐஞ்சுர தாரு வனங்களு மாக அகிற்புகைபோல்
மஞ்சுர வாடக மாமதில் சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
பஞ்சுர மாகு மொழிச்சுரு ளோதியென் பைந்தொடிக்கே.

(இ-ள்.) அந்நகரிலுள்ளார் குழற்கு ஊட்டும் அகிற் புகை போன்ற முகில்தவழப்பட்ட
வலிய  பொன்மதில்  சூழ்ந்த  தஞ்சை வாணனது வெற்பிடத்துப்  பஞ்சுரமென்னும்
பண்ணுக்கு  ஒப்பாகிய  மொழியையும்  சுருண்ட  குழலையும் உடைய என்  பசிய
தொடியை   யணிந்தாட்கு, வெய்ய பாலையுலகம், விரிவாகிய தேவருலகும், வெய்ய
கடிய  காடும், அத்தேவருலகிலுண்டாகிய   பஞ்ச  தருச் சோலையுமாக என்றவாறு.

சுரநாடு - பாலையுலகம்.    வியன் - விரிவு.   ஐந்து   சுரதுரவாவன - சந்தனம்,
அரிசந்தனம்,  மந்தாரம்,  பாரிசாதம்,  கற்பகம்,  பஞ்சுரம் -  பாலைநிலத்துப்பண்.
ஓதி - குழல்.      மொழிச்சுருளோதி:     உம்மைத்தொகை.       பைந்தொடி:
அன்மொழித்தொகை.
(335)