|
|
| உவலைப் பதுக்கை மூரம்புசெல் லாம லுலகமங்கை தவலைத் தவிர்த்த தமிழ்த்தஞ்சை வாணன் தரியலர்போல் கவலக் கடத்துச் சிலைத்திரை கோலிக் கடும்பகழித் துவலைப் படைக்கடல் தோன்றல்பொற் றேர்வங்கஞ் சூர்கின்றதே.
|
(இ-ள்.) தோன்றலே! தழைகளொடு கூடிய குறுந்தூறுகள் மூடி மேடுசெல்லாமல் நிலமங்கையது வளங்கெடுதலைத் தவிர்த்த தமிழ்த் தஞ்சைவாணன் பகைவர் செல்லுங் கவர்வழியில், வில்லாகிய திரைகளை யுண்டாக்கிக் கடிய அம்பாகிய திவலைகளைச் சிதறிப் படையாகிய கடல் நினது பொற்றேராகிய மரக்கலத்தைச் சூழ்கின்றது என்றவாறு.
|
உவலை - தழை; |
| 1`உவலைக் கூரை யொழுகிய தெருவில்`
|
என்னும் முல்லைப் பாட்டிற்கு நச்சினார்க்கினியர், `தழையாலே வேய்ந்த கூரை` என எழுதிய புரையானுமுணர்க. பதுக்கை - சிறுதூறு. முரம்பு - மேடு. தவல் - கேடு. கவலை - கவர்வழி. கடம் - காடு. திரை - அலை. பகழி - அம்பு. வங்கம் - மரக்கலம். இஃது இயைபுருவகம். |
(363) |
தலைமகளைத் தலைமகன் விடுத்தல்: |
| ஆறலை வெஞ்சிலைக் கானவ ரேலென்கை யம்பொன்றினால் நூறலை யஞ்சல னுண்ணிடை யாய்நும ரேலவர்முன் சேறலை யஞ்சுவல் செல்வல்பைம் பூகச் செழும்பழுக்காய்த் தாறலை தண்டலை சூழ்தஞ்சை வாணன் தமிழ்வெற்பிலே.
|
(இ-ள்.) நுண்ணிடையாய்! ஈண்டுக் கூடிவருகின்றோர் வழியை அலைக்கும் வெய்ய சிலையையுடைய வேடராகில் என் கையிற்பிடித்த ஓரம்பினால், புறப்பொருளில் தும்பைத்திணையின் நூழிலாட்டு என்னுந் துறை தோன்றக், கொன்று குவித்தலை அஞ்சேன்; நும் சுற்றத்தவரே யாகில் அவர் முன் செல்லுதலை அஞ்சுவேன்; ஆதலான், நீ வாரலை; பசிய கமுகினது செழித்த பாக்குத்தாறு காற்றாலசையுஞ் சோலை சூழ்ந்த தஞ்சைவாணன் தமிழ் வெற்பிடத்தில் யான் செல்வேன் என்றவாறு.
|
ஆறலைத்தல் - வரிபறித்தல். நூறல் - கொல்லுதல். `நுமரேல் அஞ்சவல்` என்றது. நுமரெதிர்ந்துழி அவரைக் கொலை செய்ய வேண்டும்! செய்துழி நீ துயருழத்தி: ஆதலால், `அஞ்சுவல்` என்றான். தாறு - குலை. தண்டலை - சோலை. நூழிலாட்டு என்பது, ஒருவன் பலரைக் கொன்று குவித்தல்; என்னை. |
|
1. முல்லைப் பாட்டு - 29. |