கட
தஞ்சைவாணன் கோவை
300

 
  1`நெய்யோ டையவி யப்பியை துரைத்து`

என்பதனானுணர்க.    குழவி   என்புழி  இரண்டனுருபு  தொக்கது;  வால்வளை:
ஆகுபெயர். காதன்மை - ஆசைத்தன்மை. வாணுதல். அண்மைவிளி.
(390)    
தலைவிக் கவன்வரல் பாங்கி சாற்றல்:
  ஏரார் புதல்வன் புறந்தனன் வாழிய வென்னுமுன்னே
வாரார் வளமனை வந்துநின் றார்கங்குல் வாணன்தஞ்சை
நீராவி நீல நெடுங்கண்மின் னேநின்னை நீப்பதல்லால்
தேரா தொழிகுவ ரோபெரி யோர்தஞ் சிறுவனையே.

(இ-ள்.) நெடுங்காலம்   வாழ்க,   அழகார்ந்த   புதல்வன்   பிறந்தன    னென்று
சொல்வதற்கு  முன்னே வருந் தகுதியில்லார் கங்குலிடத்து வளவிய நம் மனையில்
வந்து நின்றனர்; வாணன்  தஞ்சையில்  நீர்  பொருந்திய  வாவியிற்  பூத்த நீலம்
போன்ற  நெடிய  கண்ணையுடைய மின்னே! நின்னைப் பிரிவதேயல்லது, பெரியர்
தம் சிறுவனைத் தேர்ந்தறியாது விடுவரோ என்றவாறு.

ஏர் - அழகு. வாழிய: நெடுங்காலம் பற்றிய சொல் - என்னை?

  2`வாழிய வென்னுஞ் செயவென் கிளவி`

என்பதனான் உணர்க.  ஆவி - வாவி.   மின் : ஆகுபெயர்.   நீத்தல் - பிரிதல்.
தேர்தல் - பிறந்தகாலத்தை யாராய்ந்தறிதல்.
(391)    
தலைவியுணர்ந்து தலைவனோடு புலத்தல்:
  வயங்கே ழுலகும் புரக்கின்ற வாணன்தென் மாறையன்ன
நயங்கேழ் பெருவள நல்குநல் லூர நயந்துநண்ணி
முயங்கேல் சிறுவற் பயந்தவென் மேனியின் முத்துவடம்
தயங்கே ரகமுழு தும்பழு தாமது தானினக்கே.

(இ-ள்.) விளங்கப்பட்ட  ஏழுலகத்தையும்  காக்கின்ற  வாணன்  தென்மாறையன்ன
இன்பமும்  ஒளியும்  பெரிய  வளமும்  நல்கப்   பட்ட    நல்லூரையுடையானே,
சிறுவனைப்  பயந்த  என்  மேனியை விரும்பிப் பொருந்தி முயங்கற்க; முயங்கில்,
அதுதான்  நினக்கு  இன்பமாகிய  பரத்தையர்  முலைமேல் அணிந்த முத்துவடந்
தயங்கப் பட்ட அழகு பொருந்திய நெஞ்சு முழுதும் பழுதாம் என்றவாறு.

    வயங்கல் - விளங்கல்.  புரத்தல் - காத்தல்.  நயம் - இன்பம்.  கேழ் - ஒளி.
தயங்கல் - விளங்கல்.    ஏர் - அழகு.      அகம் - நெஞ்சு.    மேனி நயந்து`
என இயையும்.
(392)    

1. திருமுரு. 228. 2. தொல். எழுத்து. உயிர் மயங்கியல் - 10.