|
நச்சினார்க்கினியர் மெய்தொட்டுப் பயிறல் என்பதற்கு, புலையன் தீம்பால்போல மனங்கொள்ளவும் கொள்ளாவுமாகி யிருக்கின்ற காலத்தே தொட்டான் என்று உரை கூறினார். அஃதென்னை யெனின் புலையன் தொட்டான் என்பதனான் சிறிது அருவருப்பும், பாலுக்குக் குற்றமின்று என்பதனான் விருப்பும் என்று பொருள் ் கொள்க. அருவருப்பும் விருப்பும் இவட்கு எற்றினாலாயதோ வெனின், களவொழுக்கம் என்பதனான் அருவருப்பும், கந்தர்வமணம் என்பதனான் விருப்பும் என்று பொருள் கொள்க. இனி, எவ்வுறுப்பைத் தொட்டானெனின், தோள் தீண்டினான் என்க. என்னை,
|
| 1`உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலாற் பேதைக் கமிழ்தின் இயன்றன தோள்` |
என்பதனாற் கண்டுகொள்க.
|
| நல்லார் விழிபோ லிருந்தும் அளியெனு நாமம்பெற்றும் அல்லார் குழலில் அமர்ந்திருந் தாலம ராரைவெல்ல வல்லான் வரோதயன் வாணன்தென் மாறை மதுகரங்காள் நில்லர் திடையுமக் கோபழி சால நிலைநிற்குமே. |
(இ-ள்.) பகைவரை வெல்ல வல்லமை படைத்து வரத்தினால் உதயஞ் செய்தவனாகிய வாணனது தென்மாறை நாட்டு வண்டுகாள், நல்லார்க்கு நீர் கண் போலிருந்தும், அன்பு என்கிற அளியென்னும் பெயரைப் பெற்றும், இவளுடைய இருள் போன்ற குழலின்மேற் பொருந்தியிருந்தீராயின், இடைநில்லாது இறும்; அதனால் இவள் இறந்துபடும்; படின் உமக்குப் பெண் கொலைப் பாவம் மிகவும் நிலைநிற்கும்; அவ்வண்ணம் கொலைப்பாவம் வாராமல் நீக்குவீராக என்றவாறு.
|
நீக்குவீராக என்பது வருவித்து உரைக்கப்பட்டது. ஓ என்பது அசைநிலை. அல்லார் என்புழி, ஆர் உவமவுருபாய் நின்றது. வரோ தயன் வடசொன் முடிபு. வல்லான் என்னும் வினைக்குறிப்பு முற்றுவினை யெச்சமாய் நின்றது. என்னை, திருமுருகாற்றுப் படையுள்,
|
| 2`குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்` |
என்பதற்கு, `குழலையூதிக் கோட்டைக் குறித்துப் பல்லியத்தை யொலித்து` என முற்றுவினை யெச்சமாக நச்சினார்க்கினியர் கூறிய வுரையிற் கண்டுகொள்க. இக்கிளவிக்கு வண்டு முன்னிலையாகப் பாட வேண்டும் என்பது. (8)
|
|
1. குறள். புணர்ச்சி மகிழ்தல் - 6. |
2. திருமுரு. 209. |