|
|
(இ-ள்.) நெஞ்சமே! தன்னிழலைப் பிறிதொரு யானையெனக் கருதித் திரும்பிக் கோபமிகுங் களிற்றையுடைய அண்ணலாகிய வாணன் தென்மாறை நாட்டின் புறத்தில் மிகுந்து இருண்ட கங்குலையொத்து, அகத்தில் மாணிக்கங்களின் ஒளியான் நல்ல பகல்போன்ற சோலையிடத்து, வாணுதலாகிய ஒளிமிகுந்த படைக்கண்ணி நின்றனளே! அந்நின்ற தோற்றம் முறைமை கூர்ந்த மனத்தருளினாலே எனது ஆருயிர் நின்றதாம் என்றவாறு.
|
கூர்தல் நான்கும் மிகுதல், தழைகளினது செறிவால் புறம் கூர் இருட் கங்குல் போன்றது. பொங்கர் - சோலை. நிறம் - ஒளி. படைக் கண்ணி: உவமைத்தொகை. சுளித்தல் - திரும்பல். மறம் - கோபம். களிறு - யானை. அறம் - முறைமை. நெஞ்சம்: முன்னிலையெச்சம்.
|
(57) |
தலைவியைக் காண்டல்: |
| பாகையுந் தேனையும் போன்மொழி யார்தமிழ்ப் பைந்தொடையும் வாகையுஞ் சூடிய வாணன்தென் மாறை வளமுமவன் ஈகையும் போலு மெழிலியை நோக்கி யிரங்குபுள்ளும் தோகையும் போல்நின்ற வாதனி யேயிந்தச் சோலையிலே.
|
(இ-ள்.) நெஞ்சமே! இந்தச் சோலையிடத்துத் தனியே என் வரவை நோக்கிப் பாகையுந் தேனையும் போன்ற மொழியார் நின்ற முறைமை, தமிழ்மாலையும் வாகைமாலையுஞ் சூடிய வாணனது தென்மாறைநாட்டு வளமும் அவன் கொடையும் ஒக்கும், மேகத்தை நோக்கியிரங்குஞ் சாதகப்புள்ளையும் மயிலையும் ஒக்கும் என்றவாறு.
|
`மொழியார் நின்றவா` என மாறுக. தமிழ்ப் பைந்தொடை - தமிழ்மாலை. வாகை: ஆகுபெயர். வளம் - செழுமை. வளமும், ஈகையும் எல்லாருக்கும் உபகரித்தலான் மேகம் ஒப்பாயிற்று. ஈகை - கொடை. எழிலி - மேகம். நோக்கி - வரவுகருதி. இரங்கல் - ஒலித்தல். புள் - சாதகப்புள். தோகை - மயில். நெஞ்சம்: முன்னிலையெச்சம். வாகைமாலை - வென்றார் சூடுவது, பாகையும் தேனையும் போன் மொழியார், நின்றவாற இரங்கு புள்ளுந் தோகையும் ஒப்பு என்று பயனிலை கொண்டவாறு உணர்க. |
(58) |
கலவியின் மகிழ்தல்: |
கலவியின் மகிழ்தல் என்பது புணர்ச்சிய்ன மகிழ்தல் |
| யாரும்பர் தம்பத மென்போல வெய்தின ரிம்பரம்பொன் வாருந் துறைவையை சூழ்தஞ்சைவாணன் மலயவெற்பில் தேருந் தொறுமினி தாந்தமிழ் போன்றிவள் செங்கனிவாய் ஆருந் தொறுமினி தாயமிழ் தாமென தாருயிர்க்கே.
|