பாங்கி மதியுடன்பாடு
89

 
      முல்லைமாலை  சூட்டி வந்ததைக் கண்டு வினாவினாளென்று தலைவிக்குத்
தோன்றவும்,  இதழ்   வெண்மைக்கும்,   கண்   செம்மைக்கும்,   முல்லைமாலை
யுவமையாகப்   பாங்கி கருதிக் கவர்படுபொருளாய்ச் சொல்லலின், மெய்யினாற் பல
கவர்படு பொருள் சொல்லி நாடலாயிற்று. நாடல் - ஆராய்தல். இதழ்  வெளுத்தல்
அதரபானத்தாலும்,   கண்  சிவத்தல்  இறுகத்  தழுவுதலானும்  தோன்றியவென்று
உணர்க.

(65)    
சுனைவியந்துரைத்தல்:
சுனைவியந்துரைத்தல்   என்பது,  அச்சுனை  வியப்பை யானும் ஆடிக்காண்பேன்
என்று கூறல்.


மறலா யெதிர்ந்த மறமன்னர் வேழ மலையெறிவேல்
திறலார் முருகன் செழுந்தஞ்சை வாணன்தென் மாறைவையை
அறலார் குழலாய் நுதற்குறு வேர்வு மழகுநின்போற்
பெறலா மெனிற்குடை வேனடி யேனம பெருஞ்சுனையே.

      (இ-ள்.) மதிமயக்கமா  யெதிர்ந்த  வீரமன்னரது  யானையாகிய  மலையை
யெறியும்  வேலால் (முன் மலையையெறிந்த) வெற்றி யார்ந்த முருகனை யொக்குஞ்
செழுந்தஞ்சைவாணனது  தென்  மாறை  நாட்டில்  வரும் வையையாற்றிலிருக்கும்
அறல்  போன்ற   சூழலையுடையாய்,  நுதற்குறுவேர்வும்  அழகும்  நினைப்போற்
பெறலாமெனின்,  அடியேனும்   பெருஞ்சுனையை   ஆடிக்காண்பேன் என்றவாறு.

      மறல் - மயக்கம்.   மற மன்னர் - வீரமன்னர்.  திறல் - வெற்றி. அறல் -
கருமணல்.   குடைதல் - நீராடுதல்.    `பெறலாமெனில்`   என்பது    பெறுதற்கு
அருமைதோன்ற   நின்றது,  தான் குற்றேவல் செய்யும் முறைமையால், `அடியேன்`
எனக் கூறினாளென்று உணர்க.

(66)    
பொய்யினாற் பல்வேறு கவர்பொருள் சொல்லி
நாடலின் தகையணங்குறுத்தல்:
தகையணங்குறுத்தல்   என்பது   தலைவி   வேற்றழகினால் அவளைத்  தெய்வப்
பெண்ணாக வலியுறுத்திக்கூறல்.

 குவளை சிவத்துக் குமுதம் வெளுத்த குறையல்லவேல்
அவளைமறைத்துன்னைக் காட்டலு மாமலர்த் தேன்குதிக்கத்
தவளை குதிக்குந் தடம்பொய்கை சூழ்தஞ்சை வாணன்வெற்பில்
இவளை வரக்கண்டு நீயணங் கேபின் எழுந்தருளே.

(இ-ள்.) குவளையொக்குங்     கண்சிவந்து    குமுதமொக்கும்    வாய்வெளுத்த
குறைபாடல்லவாயின், எங்கள் தலைவியொருத்தி யுண்டு, அவள் வடிவில்