1-10 வரை
 
1.  திருவிளக்கு இட்டார் தமையே தெய்வம் அளித்திடும்

வரம் அளிக்கும் தண்டலையார் திருக்கோயில்
   உள்புகுந்து வலமாய் வந்தே
ஒரு விளக்கு ஆயினும் பசுவின் நெய்யுடன் தாமரை
   நூலின் ஒளிர வைத்தால்
கருவிளக்கும் பிறப்பும் இல்லை! இறப்பும் இல்லை!
   கைலாசம் காணி ஆகும்!
திரு விளக்கிட்டார் தமையே தெய்வம் அளித்திடும்!
   வினையும் தீரும் தானே!
உரை
   
2. வான்செய்த நன்றிக்கு வையகம் என் செய்யும்?

கூன்செய்த பிறை அணியும் தண்டலையார்
   கருணைசெய்து, கோடி கோடி
யான்செய்த வினை அகற்றி நன்மைசெய்தால்
   உபகாரம் என்னால் உண்டோ?
ஊன்செய்த உயிர் வளரத் தவம்தானம்
   நடந்தேற உதவியாக
வான்செய்த நன்றிக்கு வையகம்என்
   செய்யும்? அதை மறந்திடாதே.
உரை
   
3.      இட்டபடியே

அட்டதிசை எங்கணும்போய் அலைந்தாலும்
   பாதாளம் அதில் சென்றாலும்
பட்டம் என வான் ஊடு பறந்தாலும்
   என்ன? அதில் பயன் உண்டாமோ?
பிட்டுவர மண்சுமந்த தண்டலையாரே!
   முன்னாள் பெரியோர் கையில்
இட்டபடியே ஒழிய வேறு ஆசைப்
   படின் வருவது இல்லை தானே.

உரை
   
4.  நன்மை செய்தால் நலம் பெறுவர்

தன்மம் அது செயல்வேண்டும்; தண்டலைநீள்
   நெறியாரே தயவு செய்வார்!
வன்ம வினை செயல்வேண்டாம்; பொய்வேண்டாம்
   பிறரை ஒன்றும் வருத்தல் வேண்டாம்;
கன்ம நெறி வரல்வேண்டாம் : வேண்டுவது
   பலர்க்கும் உபகாரம் ஆகும் :
நன்மை செய்தார் நலம் பெறுவர்! தீமை செய்தார்
   தீமை பெற்று நலிவர் தாமே.
உரை
   
5.    இல்லறமும் துறவறமும்

புல் அறிவுக்கு எட்டாத தண்டலையார்
   வளம் தழைத்த பொன்னி நாட்டில்,
சொல் அற மாதவம் புரியும் சௌபரியும்
   துறவறத்தைத் துறந்து மீண்டான்!
நல் அறமாம் வள்ளுவர்போல் குடிவாழ்க்கை
   மனைவியுடன் நடத்தி நின்றான்!
இல்லறமே பெரிதாகும்! துறவறமும்
   பழிப்பு இன்றேல் எழில் அது ஆமே!
உரை
   
6.   கொக்கு எனவே நினைத்தனையோ?

முக்கணர் தண்டலை நாட்டில் கற்புடை மங்கையர்
   மகிமை மொழியப் போமோ!
ஒக்கும் எரி குளிர வைத்தாள் ஒருத்தி! வில்வேடனை
   எரித்தாள் ஒருத்தி! மூவர்
பக்கம்உற அமுது அளித்தாள் ஒருத்தி! எழு
   பரி தடுத்தாள் ஒருத்தி! பண்டு
‘கொக்கு எனவே நினைத்தனையோ? கொங்கணவா!'
   என்று ஒருத்தி கூறினாளே!
உரை
   
7.   பன்றி பல ஈன்றும் என்ன?

நன்றி தரும் பிள்ளை ஒன்று பெற்றாலும்
   குலமுழுதும் நன்மை உண்டாம்;
அன்றி அறிவு இல்லாத பிள்ளை ஒரு
   நூறு பெற்றும் ஆவது உண்டோ?
மன்றில் நடம் புரிவாரே! தண்டலையாரே!
   சொன்னேன்! வருடம் தோறும்
பன்றி பல ஈன்றும் என்ன ? குஞ்சரம் ஒன்று
   ஈன்றதனால் பயன் உண்டாமே;
உரை
   
8.  நல்லது நாயகனுக்கு

அல் அமரும் குழலாளை வரகுண பாண்டிய ராசர்
   அன்பால் ஈந்தார்!
கல்லைதனில் மென்று உமிழ்ந்த ஊன்அமுதைக்
   கண்ணப்பர் கனிவால் ஈந்தார்!
சொல்லிய தண்டலையார்க்குக் கீரையும் மாவடுவும்
   ஒரு தொண்டர் ஈந்தார்!
நல்லது கண்டால் பெரியோர் நாயகனுக்கு
   என்று அதனை நல்கு வாரே.
உரை
   
9.   விருந்து இல்லாது உண்ணும் சோறு மருந்து

திரு இருந்த தண்டலையார் வளநாட்டில்
   இல்வாழ்க்கை செலுத்தும் நல்லோர்
ஒரு விருந்தாயினும் இன்றி உண்ட பகல்
   பகலாமோ? உறவாய் வந்த
பெரு விருந்துக்கு உபசாரம் செய்து அனுப்பி
   இன்னும் எங்கே பெரியோர் என்று
வரு விருந்தோடு உண்பது அல்லால் விருந்து இல்லாது
   உணும் சோறு மருந்து தானே.
உரை
   
10. சர்க்கரைப் பந்தலிலே தேன்மாரி

பொன் குடையும் பொன் துகிலும் பொன் பணியும்
   கொடுப்பது என்ன பொருளோ? என்று
நன் கமல முகம் மலர்ந்தே உபசாரம்
   மிக்க இன்சொல் நடத்தல் நன்றே;
கல் கரையும் மொழிபாகர் தண்டலையார்
   வளநாட்டில் கரும்பின் வேய்ந்த
சர்க்கரையின் பந்தலிலே தேன்மாரி
   பொழிந்துவிடும் தன்மை தானே!
உரை