11-20 வரை
 
11.    எறும்பு எண்ணாயிரம்

குறும்பு எண்ணாது உயர்ந்த நல்லோர் ஆயிரம் சொன்னாலும்
   அதைக் குறிக்கொளாமல்
வெறும் பெண்ணாசையில் சுழல்வேன் மெய்ஞ்ஞானம்
   பொருந்தி உனை வேண்டேன்! அந்தோ!
உறும் பெண்ணார் அமுது இடம்சேர் தண்டலைநீள்
   நெறியே! என் உண்மை தேரில்
‘எறும்பு எண்ணாயிரம் அப்பா! கழுதையும் கை
   கடந்தது எனும்' எண்ணம் தானே!
உரை
   
12. தினை அளவு பனை அளவாகும்!

துப்பிட்ட ஆலம்விதை சிறிது எனினும்
   பெரிது ஆகும் தோற்றம் போலச்
செப்பிட்ட தினை அளவு செய்த நன்றி
   பனை அளவாய்ச் சிறந்து தோன்றும்!
கொப்பிட்ட உமைபாகர் தண்டலையார்
   வளநாட்டில் கொஞ்ச மேனும்
உப்பிட்ட பேர்கள்தமை உளவரையும்
   நினைக்கும் இந்த உலகம் தானே!
உரை
   
13.    காட்டுக்கே எறித்த நிலா!

மேட்டுக்கே விதைத்த விதை, வீணருக்கே
   செய்த நன்றி, மேயும் பட்டி
மாட்டுக்கே கொடுத்தவிலை, பரத்தையர்க்கே
   தேடிஇட்ட வண்மை எல்லாம்
பாட்டுக்கே அருள்புரியும் தண்டலையார்
   வீதிதொறும் பரப்பி டாமல்
காட்டுக்கே எறித்தநிலா, கானலுக்கே
   பெய்த மழை கடுக்கும் தானே!
உரை
   
14.   கங்கையிலே படர்ந்தாலும்....

சங்கை அறப் படித்தாலும் கேட்டாலும்
   பிறர்க்கு உறுதிதனைச் சொன்னாலும்
அங்கண் உலகினில் சிறியோர் தாம் அடங்கி
   நடந்து கதி அடைய மாட்டார்!
திங்கள் அணி சடையாரே! தண்டலையாரே!
   சொன்னேன் சிறிது காலம்
கங்கையிலே படர்ந்தாலும் பேய்ச் சுரைக்காய்
   நல்ல சுரைக்காய் ஆகாதே!
உரை
   
15. மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லை

உழை இட்ட விழிமடவார் உறவு விட்டும்
   வெகுளி விட்டும் உலக வாழ்வில்
பிழைவிட்டும் இன்னம்இன்னம் ஆசைவிடாது
   அலக்கு அழியப் பெற்றேன்! அந்தோ!
தழை இட்ட கொன்றைபுனை தண்டலைநீள்
   நெறியே! என் தன்மை எல்லாம்
மழைவிட்டும் தூவானம் விட்டது இல்லையாய்
   இருந்த வண்மை தானே.
உரை
   
16.    துர்ச்சனப் பிள்ளைக்கு...

கொச்சையில் பிள்ளைக்கு உதவும் தண்டலையார்
   வளநாட்டில் கொடிதாய் வந்த
வச்சிரப் பிள்ளைக்கு முனம் மாதவனே
   புத்தி சொன்னான்! வகையும் சொன்னான்!
அச்சுதப் பிள்ளைக்கும் அந்த ஆண்டவரே
   புத்தி சொன்னார்! ஆதலாலே
துர்ச்சனப் பிள்ளைக்கு ஊரார் புத்தி சொல்லுவார்
   என்றே சொல்லுவாரே!
உரை
   
17.   பொறுத்தவரே அரசு ஆள்வார்

கறுத்த விடம் உண்டு அருளும் தண்டலையார்
   வளநாட்டில் கடிய தீயோர்
குறித்து மனையாள் அரையில் துகில் உரிந்தும்
   ஐவர் மனம் கோபித்தாரோ!
பறித்து உரிய பொருள்முழுதும் கவர்ந்தாலும்
   அடித்தாலும் பழி செய்தாலும்
பொறுத்தவரே அரசு ஆள்வார்! பொங்கினவர்
   காடாளப் போவார் தாமே.
உரை
   
18.   பிள்ளை பெற்றார்தமைப் பார்த்து...

அள்ளித் தெள் நீறு அணியும் தண்டலையார்
   வளநாட்டில் ஆண்மை உள்ளோர்,
விள் உற்ற கல்வி உள்ளோர், செல்வம் உள்ளோர்,
   அழகு உடையோர் மேன்மை நோக்கி
உள்ளத்தில் அழன்று அழன்று நமக் கு இல்லை
   என உரைத்து இங் கு உழல்வார் எல்லாம்
பிள்ளை பெற்றவர் தமைப் பார்த்து இருந்து
   பெருமூச்சு எறியும் பெற்றியாரே.
உரை
   
19.    எண்ணம் எல்லாம் பொய் ஆகும்

மண் உலகு ஆளவும் நினைப்பார், பிறர்பொருள்மேல்
   ஆசை வைப்பார், வலிமை செய்வார்,
புண்ணியம் என்பதைச் செய்யார், கடைமுறையில்
   அலக்கு அழிந்து புரண்டே போவார்;
பண் உலவு மொழிபாகர் தண்டலையார்
   வகுத்த விதிப்படி அல்லாமல்
எண்ணம் எல்லாம் பொய் ஆகும்! மௌனமே
   மெய் ஆகும் இயற்கை தானே!
உரை
   
20.   சொன்னதைச் சொல்லும் இளங் கிள்ளை

சொன்னத்தைச் சொல்லும் இளங் கிள்ளை என்பார்
   தண்டலையார் தொண்டு பேணி
இன்னத்துக்கு இன்னது என்னும் பகுத்தறிவு ஒன்று
   இல்லாத ஈனர் எல்லாம்
தன்னொத்துக் கண்டவுடன் காணாமல்
   முறைபேசிச் சாடை பேசி
முன்னுக்கு ஒன்றாய் இருந்து பின்னுக்கு ஒன்றாய்
   நடந்து மொழிவர் தாமே.
உரை