21-30 வரை
 
21.    விடியல்மட்டும் மழைபெயினும்

கொடியருக்கு நல்ல புத்தி சொன்னாலும்
   தெரியாது! கொடை இல்லாத
மடையருக்கு மதுரகவி உரைத்தாலும்
   அவர் கொடுக்க மாட்டார் கண்டீர்!
படிஅளக்கும் தண்டலைநீள் நெறியாரே!
   உலகம் எலாம் பரவி மூடி
விடியல்மட்டும் மழைபெயினும் அதில் ஓட்டாங்
   குச்சில் முளை வீசிடாதே!
உரை
   
22.    தன்பாவம் தன்னோடு

செங்காவி மலர்த்தடம் சூழ் தண்டலைநீள்
   நெறியே! நின் செயல் உண்டாகில்
எங்காகில் என்ன? அவர் எண்ணியது எல்லாம்
   முடியும்! இல்லை யாகில்,
பொங்கு ஆழி சூழ் உலகில் உள்ளங்கால்
   வெள் எலும்பாய்ப் போக ஓடி
ஐங்காதம் போனாலும் தன்பாவம்
   தன்னுடனே ஆகும் தானே.
உரை
   
23.    நாய் அறியாது...

தாய் அறிவாள் மகள் அருமை! தண்டலைநீள்
   நெறிநாதர் தாமே தந்தை
யாய் அறிவார் எமது அருமை! பரவையிடம்
   தூது சென்றது அறிந்திடாரோ?
பேய் அறிவார் முழுமூடர்! தமிழ் அருமை
   அறிவாரோ? பேசுவாரோ?
நாய் அறியாது ஒரு சந்திச் சட்டிப் பானையின்
   அந்த நியாயம் தானே!
உரை
   
24. எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார் வாழ்ந்தாலும் என்?

கட்டு மாங்கனி வாழைக்கனி பலவின்
   கனிகள் உபகாரம் ஆகும்;
சிட்டரும் அவ்வணம் தேடும் பொருளை எல்லாம்
   இரப்பவர்க்கே செலுத்தி வாழ்வார்
மட்டுலவும் சடையாரே! தண்டலையாரே!
   சொன்னேன்! வனங்கள் தோறும்
எட்டிமரம் பழுத்தாலும் ஈயாதார்
   வாழ்ந்தாலும் என் உண்டாமே?
உரை
   
25.   காதவழி பேரில்லான்......

ஓது அரிய தண்டலையார் அடிபணிந்து
   நல்லவன் என்று உலகம் எல்லாம்
போதம் மிகும் பேருடனே புகழ்படைத்து
   வாழ்பவனே புருடன் அல்லால்
ஈதலுடன் இரக்கம் இன்றிப் பொன்காத்த
   பூதம் என இருந்தால் என்ன?
காதவழி பேர் இல்லான் கழுதையோடு
   ஒக்கும் எனக் காணலாமே!
உரை
   
26.   செவிடன் காதினில் சங்கு குறித்தல்

பரியாமல் இடும்சோறும் ஊமைகண்ட
   கனவும் ஒன்றும் பரிசில் ஈயான்
அரிதான செந்தமிழின் அருள்சிறிதும்
   இல்லாதான் அறிவுமேதான்
கரிகாலன் பூசைபுரி தண்டலைநீள்
   நெறியாரே! கதித்த ஓசை
தெரியாத செவிடன் காதினில் சங்கு
   குறித்தது எனச் செப்பலாமே.
உரை
   

27.    மன்னுயிர்க்கு இரங்குவது

முன் அரிய மறை வழங்கும் தண்டலையார்
   ஆகமத்தின் மொழி கேளாமல்
பின் உயிரை வதைத்தவனும், கொன்றவனும்
   குறைத்தவனும், பேருளோனும்,
அந்நெறியே சமைத்தவனும், உண்டவனும்
   நரகு உறுவர்; ஆதலாலே
தன் உயிர்போல் எந்நாளும் மன் உயிருக்கு
   இரங்குவது தக்க தாமே.

உரை
   
28.    குளிர் காய நேரம் இல்லை!

உரு எடுத்த நாள்முதலா ஒருசாணும்
   வளர்க்க உடல் உழல்வது அல்லால்
மரு இருக்கும் நின்பாத மலர்தேடித்
   தினம் பணிய மாட்டேன்! அந்தோ!
திரு இருக்கும் மணி மாடத் தண்டலைநீள்
   நெறியே! என் செய்தி எல்லாம்
சருகு அரிக்க நேரம் அன்றிக் குளிர்காய
   நேரம் இல்லாத் தன்மை தானே!
உரை
   
29.   உருத்திராக்கப் பூனை!

காதிலே திருவேடம்! கையிலே
   செபமாலை! கழுத்தின் மார்பின்
மீதிலே தாழ்வடங்கள்! மனத்திலே
   கரவடம்ஆம் வேடம் ஆமோ?
வாதிலே அயன்தேடும் தண்டலைநீள்
   நெறியாரே! மனிதர் காணும்
போதிலே மௌனம்! இராப் போதிலே
   ருத்திராக்கப் பூனை தானே!
உரை
   
30. ‘தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்'

மான் ஒன்று வடிவு எடுத்து மாரீசன்
   போய்மடிந்தான்! மானே என்று
தேன் என்று மொழிபேசிச் சீதைதனைச்
   சிறை இருக்கத் திருடிச் சென்றோன்
வான் ஒன்றும் அரசு இழந்தான்! தண்டலையார்
   திரு உளத்தின் மகிமை காணீர்!
தான் ஒன்று நினைக்கையிலே தெய்வம்ஒன்று
   நினைப்பதுவும் சகசம் தானே.
உரை