31-40 வரை
 
31.  பொய் சொல்லி வாழ்வது இல்லை

கைசொல்லும் பனைகாட்டும் களிற்று உரியார்
   தண்டலையைக் காணார் போலப்
பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்
   கிடையாது! பொருள் நில்லாது!
மைசொல்லும் காரி அளிசூழ் தாழைமலர்
   பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ?
மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
   வாழ்வது இல்லை! மெய்ம்மை தானே!
உரை
   
32. சந்திரனைப் பார்த்து நாய் குரைத்தால் என்ன?

அந்தணரை நல்லவரைப் பரமசிவன்
   அடியவரை அகந்தையால் ஓர்
நிந்தனை சொன்னாலும் என்ன? வைதாலும்
   என்ன? அதில் நிடேதம் உண்டோ?
சுந்தரர்க்குத் தூதுசென்ற தண்டலைநீள்
   நெறியாரே! துலங்கும் பூர்ண
சந்திரனைப் பார்த்து நின்று நாய் குரைத்த
   போதில்என்ன? தாழ்ச்சி தானே?
உரை
   
33.     கோடரிக் காம்பு?

கோடாமல் பெரியவர்பால் நடப்பது அன்றிக்
   குற்றமுடன் குறைசெய்தோர்கள்
ஆடு ஆகிக் கிடந்த இடத்து அதன் மயிரும்
   கிடவாமல் அழிந்து போவார்!
வீடா நற்கதி உதவும் தண்டலையாரே!
   சொன்னேன் மெய்யோ? பொய்யோ?
கோடாலிக் காம்பே தன் குலத்தினுக்குக்
   கோடான கொள்கை தானே!
உரை
   
34. சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே?

சின்னம் எங்கே? கொம்பு எங்கே? சிவிகை எங்கே?
   பரி எங்கே? சிவியார் எங்கே?
பின்னை ஒரு பாழும்இல்லை! நடக்கை குலைந்தால்
   உடனே பேயே அன்றோ?
சொல் நவிலும் தண்டலையார் வளநாட்டில்
   குங்கிலியத் தூபம் காட்டும்
சன்னதமானது குலைந்தால் கும்பிடு எங்கே?
   வம்பர் இது தனை எண்ணாரே!
உரை
   
35.  துறவிக்கு வேந்தன் துரும்பு

சிறுபிறை துன்னிய சடையார் தண்டலைசூழ்
   பொன்னி வளம் செழித்த நாட்டில்,
குறைஅகலும் பெருவாழ்வும் மனைவியும்
   மக்களும் பொருளாக் குறித்திடாமல்,
மறை பயில் பத்திரகிரியும் பட்டினத்துப்
   பிள்ளையும் சேர் மகிமையாலே,
துறவறமே பெரிதாகும்! துறவிக்கு
   வேந்தன் ஒரு துரும்பு தானே.
உரை
   
36.  ஆரியக் கூத்தாடுகினும்

பேரிசைக்கும் சுற்றமுடன் மைந்தரும்
   மாதரும் சூழப் பிரபஞ்சத்தே
பாரியை உற்றிருந்தாலும் திருநீற்றில்
   கழற்காய்போல் பற்று இல்லாமல்,
சீர் இசைக்கும் தண்டலையார் அஞ்செழுத்தை
   நினைக்கின் முத்தி சேரல் ஆகும்;
ஆரியக் கூத்து ஆடுகினும் காரியமேல்
   கண்ணாவது அறிவு தானே.
உரை
   
37.  மரம் வைத்தவர் தண்ணீர் வார்ப்பார்.

இரந்தனை இத்தனை நாளும் பரந்தனை நான்
   என்று அலைந்தாய்! இனிமேலேனும்
கரந்தை மதி சடை அணியும் தண்டலைநீள்
   நெறியாரே காப்பார் என்னும்
உரம்தனை வைத்து இருந்தபடி இருந்தனையேல்1
   உள்ள எலாம் உண்டாம்! உண்மை!
மரம்தனை வைத்தவர் நாளும் வாடாமல்
   தண்ணீரும் வார்ப்பர் தாமே.
உரை
   
38.  செங்கோல் அரசனே தெய்வம்

நாற்கவியும் புகழவரும் தண்டலையார்
   வளநாட்டில் நல்ல நீதி
மார்க்கமுடன் நடந்து, செங்கோல் வழுவாமல்
   புவி ஆளும் வண்மை செய்த
தீர்க்கம் உள்ள அரசனையே தெய்வம் என்பார் :
   கொடுங்கோன்மை செலுத்தி நின்ற
மூர்க்கம் உள்ள அரசனும்தன் மந்திரியும்
   ஆழ்நரகில் மூழ்குவாரே!
உரை
   
39.  காதில் கடுக்கன் முகத்துக்கு அழகு!

ஓது அரிய வித்தை வந்தால் உரிய சபைக்கு
   அழகு ஆகும்; உலகில் யார்க்கும்
ஈதலுடன் அறிவு வந்தால் இனிய குணங்
   களுக்கு அழகாய் இருக்கும் அன்றோ?
நீதிபெறு தண்டலையார் திருநீறு
   மெய்க்கு அழகாய் நிறைந்து தோன்றும்;
காதில் அணி கடுக்கன் இட்டால் முகத்தினுக்கே
   அழகு ஆகிக் காணும் தானே.
உரை
   

40.   கவி சொல்லார்!

‘பாரதியார்' ‘அண்ணாவி' ‘புலவர்' என்பார்
   கல்வியினில் பழக்கம் இல்லார்!
சீர் அறியார் தளை அறியார் பல்லக்கு
   ஏறுவர்! புலமை செலுத்திக் கொள்வார்!
ஆர் அணியும் தண்டலைநீள் நெறியாரே!
   இலக்கண நூல் அறியாரேனும்
காரிகையாகிலும் கற்றுக் கவி சொல்லார்
   பேரி கொட்டக் கடவர் தாமே.

உரை