41-50 வரை
 

41.  குருடனுக்குக் குருடன் கோல் கொடுத்தல்

அருள் மிகுத்த ஆகமநூல் படித்து அறியார்!
   கேள்வியையும் அறியார்! முன்னே
இருவினையின் பயன் அறியார்! குருக்கள் என்றே
   உபதேசம் எவர்க்கும் செய்வார்!
வரம் மிகுத்த தண்டலைநீள் நெறியாரே!
   அவர் கிருபா மார்க்கம் எல்லாம்
குருடனுக்குக் குருடன்கோல் கொடுத்துவழி
   காட்டிவரும் கொள்கை தானே.

உரை
   

42. ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்'

நேற்று உள்ளார் இன்று இருக்கை நிச்சயமோ?
   ஆதலினால், நினைந்த போதே
ஊற்று உள்ள பொருள் உதவி அறம் தேடி
   வைப்பது அறிவு உடைமை அன்றோ?
கூற்று உள்ளம் மலைய வரும் தண்டலையா
   ரே! சொன்னேன்! குடபால் வீசும்
காற்று உள்ள போது எவரும் தூற்றிக் கொள்வது
   நல்ல கருமம் தானே?

உரை
   

43.    சொர்க்கத்தே போம்போதும் .....

வர்க்கத்தார் தமை வெறுத்த விருத்தருமாய்
   மெய்ஞ்ஞான வடிவம் ஆனோர்
கல் கட்டாகிய மடமும் காணியும் செம்பொனும்
   தேடும் கருமம் எல்லாம்
பொன் கொத்தாம் செந்நெல் வயல் தண்டலையாரே!
   சொன்னேன் பொன் நாடு ஆகும்
சொர்க்கத்தே போம்போதும் கக்கத்தே
   ராட்டினத்தைச் சுமந்த வாறே.

உரை
   

44.    ‘ஏன் கருடா! சுகமா?'

ஆம்பிள்ளாய்! எனக் கொடுக்கும் பெரியோரை
   அடுத்தவர்கள் அவனிக்கு எல்லாம்
நாம்பிள்ளாய்! அதிகம் என்பார்! நண்ணாரும்
   ஏவல் செய நாளும் வாழ்வார்
வான்பிள்ளாய்! எனும் மேனித் தண்டலையார்
   பூடணமாய் வளர்த்த நாகம்
ஏன் பிள்ளாய்! கருடா! நீ சுகமோ? என்று
   உரைத்த விதம் என்னலாமே!

உரை
   

45.     புல்லரை அடுக்காதே

வடி இட்ட புல்லர்தமை அடுத்தாலும்
   விடுவது உண்டோ? மலிநீர்க் கங்கை
முடி இட்ட தண்டலை நாதரைப் புகழில்
   பெருவாழ்வு முழுதும் உண்டாம்!
மிடி இட்ட வினை தீரும்! தெய்வம் இட்டும்
   விடியாமல் வீணர் வாயில்
படி இட்டு விடிவது உண்டோ? அவர் அருளே
   கண்ணாகப் பற்றுவீரே!

உரை
   

46.   பூனை பிடித்தது விடுமோ?

பொலிய வளம் பல தழைத்த தண்டலைநீள்
   நெறி பாதம் போற்றி நாளும்
வலிய வலம் செய்து அறியீர்? மறம் செய்வீர்!
   நமன் தூதர் வந்து கூடி
மெலிய வரைந்திடுபொழுது கலக் கண்ணீர்
   உகுத்தாலும் விடுவது உண்டோ?
எலி அழுது புலம்பிடினும் பூனை பிடித்தது
   விடுமோ? என்செய் வீரே?

உரை
   

47.   ‘நெற்றி விழி காட்டுகினும் குற்றமே'

மற்றவரோ தமிழ்பாடி நாட்ட வல்லார்?
   நக்கீரர் வலியர் ஆகி
வெற்றிபுனை மீனாட்சி சுந்தர நாயகர்
   அடுத்து விளம்பும் போதில்,
பற்று உள தண்டலை வாழும் கடவுள் என்றும்
   பாராமல் பயப்படாமல்
நெற்றி விழி காட்டுகினும் குற்றமே
   குற்றம் என நிறுத்தினாரே.

உரை
   

48.  மாரி பதின்கல நீரில் கோடையில்
     ஒரு குடம் நீர் வண்மை


சீர் இலகும் தண்டலையார் திருவருளால்
   அகம் ஏறிச் செழித்த நாளில்,
பாரி என ஆயிரம் பேர்க்கு அன்ன தானம்
   கொடுக்கும் பலனைப் பார்க்க,
நேரிடும் பஞ்சம் தனிலே எவ்வளவு
   ஆகிலும் கொடுத்தால் நீதி ஆகும்
மாரிபதின் கலநீரில் கோடைதனில்
   ஒருகுடம்நீர் வண்மை தானே.

உரை
   

49.   தண்டலையை வணங்கு

பிறக்கும்போது ஒரு பொருளும் கொடுவந்தது
   இல்லை! உயிர் பிரிந்து மண்மேல்
இறக்கும் போதிலும் கொண்டு போவதிலை!
   என்று சும்மா இருந்து வீணே
சிறக்கும் தாயினும் அருள்வார் தண்டலையில்
   சேராமல் தேசம் எல்லாம்
பறக்கும் காகம் அது இருக்கும் கொம்பு அறியாது
   எனத் திரிந்து பயன் பெறாரே!

உரை
   

50.   எய்தவர் இருக்க அம்பை நோவதேன்?

வைதிடினும் வாழ்த்திடினும் இன்ப துன்பம்
   வந்திடினும் வம்பு கோடி
செய்திடினும் தண்டலை நீள் நெறியார்தம்
   செயல் என்றே தெளிவது அல்லால்
மெய் தவிர அவர் செய்தார் இவர் செய்தார்
   என நாடி வெறுக்க லாமோ!
எய்தவர்தம் அருகு இருக்க அம்பை நொந்த
   கருமம் என்ன? இயம்புவீரே!

உரை