71-80 வரை
 

71. பகடிக்கோ பணம் பத்து! திருப்பாட்டுக்கு ஒரு காசு.

சக மிக்க தண்டலையார் அடிபோற்றும்
   மகராசர் சபையில் வந்தால்,
சுக மிக்க வேசையர்க்குப் பொன் நூறு
   கொடுப்பர்! தமிழ் சொன்ன பேர்க்கோ
அக மிக்க சோறு இடுவார்! அந்தணருக்கு
   எனின் நாழி அரிசி ஈவார்!
பகடிக்கோ பணம் பத்துத் திருப்பாட்டுக்கு
   ஒருகாசு பாலிப்பாரே.

உரை
   

72.    பணம் தானே பந்தியிலே

பணம் தானே அறிவு ஆகும்! பணம் தானே
   வித்தையும் ஆம்! பரிந்து தேடும்
பணம் தானே குணம் ஆகும்! பணம் இல்லாதவர்
   பிணமாம் பான்மை சேர்வர்!
பணம் தானே பேசுவிக்கும்! தண்டலைநீள்
   நெறியாரே! பார்மீது இற்றான்
பணம் தானே பந்தியிலே! குலம் தானே
   குப்பையிலே படுக்கும் தானே.

உரை
   

73.    பனங்காட்டு நரி சலசலப்புக்கு .....

புனம் காட்டும் மண்ணும் விண்ணும் அஞ்ச வரும்
   காலனையும் போடா என்றே
இனம் காட்டும் மார்க்கண்டன் கடிந்து பதினாறு
   வயது என்றும் பெற்றான்
அனம் காட்டும் தண்டலையார் அடியார் எல்லாம்
   ஒருவர்க்கு அஞ்சுவாரோ!
பனங்காட்டு நரிதானும் சலசலப்புக்கு
   ஒருநாளும் பயப்படாதே.

உரை
   

74.    ஊரில் ஒருவன் தோழன் ....

சீர் இலகும் தண்டலையார் வள நாட்டில்
   ஒரு தோழன் தீமை தீர
வார மிகும் பிள்ளைதனை அரிந்து உண்டான்
   ஒரு வேந்தன் மணந்து கொண்ட
ஆர்வமிகு மனைக்கிழத்தி ஆண்டிச்சி
   வடிவு கொண்டாள்! ஆகையாலே
ஊரில் ஒருவன்தோழன்! ஆரும்அற்றதே
   தாரம்! உண்மை தானே?

உரை
   

75.  சுகம் படுக்கை அறியாது

தான் அவன் ஆகிய ஞானச் செயல் உடையார்
   மாதர் முலை தழுவினாலும்
ஆன தொழில் வகை வகையாச் செய்தாலும்
   அனுபோகம் அவர்பால் உண்டோ?
கான உறையும் தண்டலையார் அடிபோற்றும்
   சுந்தரனார் காமி போலாய்
மேல் நவிலும் சுகம் படுக்கை மெத்தை அறியாது
   எனவே விளம்பினாரே.

உரை
   

76. சோறு சொன்ன வண்ணம் செய்யும்

சோறு என்ன செய்யும்? எல்லாம் படைத்திடவே
   செய்யும்! அருள் சுரந்து காக்கும்!
சோறு என்ன செய்யும்? எல்லாம் அழித்திடவே
   செய்யும்! அதன் சொரூபம் ஆக்கும்?
சோறு என்ன, எளிதேயோ? தண்டலையார்
   தம் பூசை துலங்கச் செய்யும்
சோறு என்ன செய்யும் எனில், சொன்ன வண்ணம்
   செயும்! பழமை தோற்றும் தானே.

உரை
   

77.    பித்தருக்குத் தம் குணமே ...

எத்தருக்கும் உலுத்தருக்கும் ஈனருக்கும்
   மூடருக்கும் இரக்கம் பாரா
மத்தருக்கும் கொடிதாம் அவ் அக்குணமே
   நற்குணமா வாழ்ந்து போவார்!
பத்தருக்கு நலம் காட்டும் தண்டலையாரே
   அறிவார்! பழிப்பாரேனும்
பித்தருக்குத் தம் குணமே நூலினும்
   செம்மையது ஆன பெற்றி ஆமே.

உரை
   

78.   அன்ன நடை நடக்கப் போய் ...

பன்னக வேணிப் பரமர் தண்டலையார்
   நாட்டில் உள பலரும் கேளீர்!
தன் அறிவு தன் நினைவு தன்மகிமைக்கு
   ஏற்ற நடை தகுமே அல்லால்,
சின்னவரும் பெரியவர் போலே நடந்தால்
   உள்ளது போம்! சிறிய காகம்
அன்ன நடை நடக்கப்போய்த் தன் நடையும்
   கெட்ட வகை ஆகும் தானே.

உரை
   

79.   மகாதேவர் ஆடும் இடத்திலே
    பேய்களும் ஆடும்


பேரான கவிராசருடன் சிறிய
   கவிகளும் ஒர் ப்ரபந்தம் செய்வார்!
வீராதி வீரருடன் கோழைகளும்
   வாள் பிடித்து விருது சொல்வார்!
பார் ஆளும் தண்டலை நீள் நெறியாரே!
   இருவரையும் பகுத்துக் காணில்,
ஆராயும் மகாதேவர் ஆடு இடத்துப்
   பேய்களும் நின்று ஆடுமாறே.

உரை
   

80.    பொல்லாத கள்ளர்

செழுங்கள்ளி நிறைசோலைத் தண்டலைநீள்
   நெறியாரே! திருடிக் கொண்டே
எழும் கள்ளர் நல்லகள்ளர்! பொல்லாத
   கள்ளர் இனி யாரோ என்றால்,
கொழுங்கள்ளர் தம்முடன் கும்பிடும் கள்ளர்
   திருநீறு குழைக்கும் கள்ளர்
அழும் கள்ளர் தொழும் கள்ளர் ஆசாரக்
   கள்ளர் இவர் ஐவர் தாமே.

உரை