81-90 வரை
 

81.   மனத்திலே பகை ஆகி ...

தனத்திலே மிகுத்த செழுந் தண்டலையார்
   பொன்னி வளம் தழைத்த நாட்டில்,
இனத்திலே மிகும் பெரியோர் வாக்கு மனம்
   ஒன்று ஆகி எல்லாம் செய்வார்;
சினத்திலே மிகும் சிறியோர் காரியமோ
   சொல்வது ஒன்று! செய்வது ஒன்று!
மனத்திலே பகை ஆகி உதட்டிலே
   உறவாகி மடிவர் தாமே.

உரை
   

82. ‘ஊரோட உடனோட்

தேர் ஓடும் மணி வீதித் தண்டலையார்
   வளம் காணும் தேசம் எல்லாம்
போர் ஓடும் விறல் படைத்து வீராதி
   வீரர் என்னும் புகழே பெற்றார்
நேர் ஓடும் உலகத்தோடு ஒன்றுபட்டு
   நடப்பதுவே நீதி ஆகும்!
ஊர் ஓட உடன் ஓட நாடு ஓட
   நடு ஓடல் உணர்வு தானே.

உரை
   

83.   ‘வழுவழுத்த வுறவதனின் ...'

இழைபொறுத்த முலைபாகர் தண்டலையார்
   வள நாட்டில் எடுத்த ராகம்
தழுதழுத்துப் பாடுவதின் மௌனமாய்
   இருப்பதுவே தக்கது ஆகும்!
குழைகுழைத்த கல்வியினும் கேள்வியினும்
   கல்லாமை குணமே! நாளும்
வழுவழுத்த உறவு அதனின் வயிரம்பற்றிய
   பகையே வண்மையாமே.

உரை
   

84. நெருப்பினைச் சிறிது என்று முன்றானையில் ...

அருப்பயிலும் தண்டலைவாழ் சிவனடியார்
   எக்குலத்தார் ஆனால் என்ன?
உருப் பயிலும் திருநீறும் சாதனமும்
   கண்டவுடன் உகந்து போற்றி,
இருப்பதுவே முறைமை அல்லால் ஏழை என்றும்
   சிறியர் என்றும் இகழ்ந்து கூறின்
நெருப்பினையே சிறிது என்று முன்றானை
   தனில் முடிய நினைந்தவாறே.

உரை
   

85.  ‘பெண் என்றவுடன் பேயும் இரங்கும்'

உரம் காணும் பெண் ஆசை கொடிது ஆகும்!
   பெண் புத்தி உதவாது ஆகும்!
திரம் காணும் பெண் வார்த்தை தீது ஆகும்!
   பெண் சென்மம் சென்மம் ஆமோ?
வரம் காணும் தண்டலைநீள் நெறியாரே!
   பெண்ணிடத்தின் மயக்கத் தாலே
இரங்காத பேரும் உண்டோ? பெண் என்ற
   உடன் பேயும் இரங்கும் தானே.

உரை
   

86. கையிலே புண் இருக்கக் கண்ணாடி
       பார்ப்பது என்ன?


மையிலே தோய்ந்த விழி வஞ்சியரைச்
   சேர்ந்தவர்க்கு மறுமை இல்லை!
மெய்யிலே பிணியும் உண்டாம்! கைப்பொருளும்
   கேடு ஆகி விழலர் ஆவார்!
செய்யிலே வளம் தழைத்த தண்டலையார்
   வள நாட்டில் தெளிந்தது அன்றோ?
கையிலே புண்இருக்கக் கண்ணாடி
   பார்ப்பது என்ன கருமம் தானே?

உரை
   

87.  பனை அடியிலே பால் குடித்தால்?

காலம் அறி தண்டலையார் வள நாட்டில்
   கொலை களவு கள்ளே காமம்
சாலவரும் குரு நிந்தை செய்பவர்பால்
   மேவி அறம்தனைச் செய்தற்கும்
சீலம் உடையோர் நினையார்! பனை அடியிலே
   இருந்து தெளிந்த ஆவின்
பாலினையே குடித்தாலும் கள் என்பார்!
   தள் என்பார்! பள் என்பாரே.

உரை
   

88.      பொல்லாச் சூது

கைக்கு எட்டாது ஒரு பொருளும்! கண்டவர்க்கு
   நகை ஆகும்! கனமே! இல்லை!
இக்கட்டாம் வருவது எல்லாம்! லாபம் உண்டோ?
   கவறு கையில் எடுக்கலாமோ?
திக்கு எட்டு ஏறிய கீர்த்தித் தண்டலையார்
   வள நாட்டில் சீச்சீ என்னச்
சொக்கட்டான் எடுத்தவர்க்குச் சொக்கட்டான்
   சூது பொல்லாச் சூது தானே.

உரை
   

89. புற்று அடிமண் முதலியவற்றின் பயன்

தன மேவும் புற்று அடிமண் குருந்து அடிமண்
   பிரம குண்டம் தன்னில் ஏய்மண்
மன மேவும் மணியுடனே மந்திரமும்
   தந்திரமும் மருந்தும் ஆகி,
இன மேவும் தண்டலையார் தொண்டருக்கு
   வந்த பிணி எல்லாம் தீர்க்கும்!
அனு போகம் தொலைந்தவுடன் சித்தியாம்
   வேறும் உள அவிழ்தம் தானே.

உரை
   

90. அரைக் காசுக்குப் போன அபிமானம் ...

கான் அமரும் கவரி ஒரு மயிர்படினும்
   இறக்கும்! அது கழுதைக்கு உண்டோ?
மானமுடன் வாழ்பவனே மாபுருடன்!
   சுயோதனனை மறந்தார் உண்டோ?
ஆனகம் சேர் ஒலிமுழங்கும் தண்டலையாரே!
   சொன்னேன்! அரைக் காசுக்குப்
போன அபிமானம் இனி ஆயிரம் பொன்
   கொடுத்தாலும் பொருந்திடாதே.

உரை