91-100 வரை
 

91. மலைமீதில் இருப்பவரைப் பன்றி பாயாது

நிலைசேரும் அதிக விதரண சுமுக
   துரைகளுடன் நேசம் ஆகிப்
பலநாளுமே அவரை அடுத்தவர்க்குப்
   பலன் உண்டாம்! பயமும் இல்லை!
கலைசேரும் திங்கள்அணி தண்டலையாரே!
   சொன்னேன்! கண்ணில் காண
மலைமீதில் இருப்பவரை வந்து பன்றி
   பாய்வது எந்த வண்ணம் தானே?

உரை
   

92.   ‘நிறை குடமோ தளும்பாது'

பொறுமையுடன் அறிவு உடையார் இருந்த இடம்
   விளக்கு ஏற்றிப் புகுத வேண்டும்!
கெறுவமுடன் அகந்தை உள்ளார் இறுமாந்து
   நடந்து தலைகீழாய் வீழ்வார்!
வறுமையினும் மறுமையினும் காணலாம்
   தண்டலையார் வாழும் நாட்டில்
நிறை குடமோ தளும்பாது! குறை குடமே
   கூத்தாடி நிற்பதாமே!

உரை
   

93.    ஆலமரம் பழுத்தவுடன் ...

ஞாலம்உறு நல்லவர்க்குச் செல்வம் வந்தால்
   எல்லவர்க்கும் நாவலோர்க்கும்
காலம்அறிந்து அருமையுடன் பெருமை அறிந்து
   உதவிசெய்து கனமே செய்வார்;
மால் அறியாத் தண்டலைநீள் நெறியாரே!
   அவர் இடத்தே வருவார் யாரும்!
ஆலமரம் பழுத்தவுடன் பறவையின்பால்
   சீட்டு எவரே அனுப்புவாரே?

உரை
   

94.    நாணம் அற்றார் நிலை

சேண் இலகு மதிச் சடையார் தண்டலையார்
   வள நாட்டி சிறந்த பூணின்
காணவரும் நாண் உடையார் கனம் உடையார்
   அல்லாதார் கருமம் எல்லாம்
ஆண் அவலம்! பெண் அவலம்! ஆடிய கூத்து
   அவலம்! என அலைந்து கேடாம்!
நாணம் இல்லாக் கூத்தியர்க்கு நாலு திக்கும்
   வாயில் எனும் நடத்தை ஆமே.

உரை
   

95.   பிடாரிதனைப் பெண்டு
     வைத்துக்கொண்டது


அடுத்த மனைதொறும் புகுவாள்! கணவன் உணும்
   முனம் உண்பாள்! அடக்கம் இல்லாள்!
கடுத்த மொழி பேசிடுவாள்! சிறுதனம்
   தேடுவள்! இவளைக் கலந்து வாழ்தல்
எடுத்த விடைக் கொடியாரே! தண்டலையாரே!
   எவர்க்கும் இன்பம் ஆமோ?
குடித்தனமே கெட வேண்டிப் பிடாரிதனைப்
   பெண்டு வைத்துக் கொண்டது ஆமே.

உரை
   

96.  இளைத்தவன் பெண்டிர் என்றால் .....

களித்து வரும் செல்வருக்கு வலிமை உண்டு!
   மிடியருக்குக் கனம் தான் உண்டோ?
வளைத்த மலை எனும் சிலையார் தண்டலைசூழ்
   தரும் உலக வழக்கம் பாரீர்!
ஒளித்திடுவம் தம்மனையில் பெண்டீரைக்
   கண்டவரும் ஒன்றும் பேசார்!
இளைத்தவன் பெண்டீர் என்றால் எல்லார்க்கும்
   மச்சினியாய் இயம்புவாரே.

உரை
   

97.    பிறர் வருத்தம் அறியார்

நொந்தவரும் பசித்தவரும் விருந்தினரும்
   விரகினரும் நோய் உள்ளோரும்
தந்தமது வருத்தம் அல்லால் பிறர் உடைய
   வருத்தம் அது சற்றும் எண்ணார்!
இந்து உலவும் சடையாரே! தண்டலையாரே!
   சொன்னேன் ஈன்ற தாயின்
அந்த முலைக் குத்து வலி சவலை மகவோ
   சிறிதும் அறிந்திடாதே.

உரை
   

98.  நாழி நெல்லுக்கு ஒரு புடைவை

ஆழி எல்லாம் பால் ஆகி அவனி எல்லாம்
   அன்ன மயம் ஆனால் என்ன?
சூழ வரும் இரவலர்க்குப் பசி தீர
   உண்டு இருக்கும் சுகம் தான் உண்டோ!
ஏழ் உலகும் பணிய வரும் தண்டலையாரே!
   சொன்னேன்! எந்த நாளும்
நாழி நெல்லுக்கு ஒரு புடைவை விற்றாலும்
   நிருவாணம் நாய்க்குத் தானே.

உரை
   

99.   அச்சியிலே போனாலும் ...

கொச்சையிலே பாலும் உண்டோ? கூத்தியர்கள்
   தம்மிடத்தில் குணம்தான் உண்டோ?
துச்சரிடத்து அறிவு உண்டோ? துச்சர் எங்கே
   போனாலும் துரை ஆவாரோ?
நச்சு அரவத் தொடையாரே! தண்டலையாரே!
   இந்த நாடு அல்லாமல்
அச்சியிலே போனாலும் அகப்பை அரைக்
   காசு அதன்மேல் ஆர் கொள்வாரே?

உரை
   

100.  பித்தளைக்கு நாற்றம் இயற்கை

நித்தம் எழுநூறு நன்றி செய்தாலும்
   ஒரு தீது நேர வந்தால்,
அத்தனையும் தீது என்பார்! பழி கருமக்
   கயவர் குணம் அகற்றல் ஆமோ?
வித்தகம் சேர் தண்டலையார் வள நாட்டில்
   சாம்பர்இட்டு விளக்கி னாலும்
எத்தனை செய்தாலும் என்ன? பித்தளைக்குத்
   தன்நாற்றம் இயற்கை ஆமே.

உரை