பிற பாடல்கள் வரை
 

1.    வம்பருக்குத் தலைமை

வம்பர் எல்லாம் ஆதிக்கம் மிகுந்து இருந்தால்
   என்ன? அதுமாறி ஓய்ந்த
பம்பரமாய் மூலையினில் கிடந்திட்டால்
   என்ன? அதில் பலன் உண்டாமோ?
சம்பு உலவும் தண்டலையார் வள நாட்டில்
   வருந்து பல கழுதை தாமும்
அம்புவியில் கிடந்து என்ன? பாதாளம்
   தனில் கிடந்து என் ஆகும் தானே?

உரை
   

2. கடும் தேட்டுக் கண்ணைக் கெடுக்கும்

தண்டலையார் அடிபணிந்து தவம் தானம்
   உபகாரம் தருமம் செய்து
கொண்டபொருள் விலைவாசி காணி தேடிக்
   கோடி கொடுப்பது அல்லால்
வண்டருமாய் ஒன்று பத்து விலை கூறி
   அநியாய வட்டி வாங்கிக்
கண்டவர்தம் கடும்தேட்டுக் கண்ணை அறக்
   கெடுக்கும் இது கருமம் தானே.

உரை
   

3.       புரட்டுச் செயல்

‘இது கருமம் : இதனாலே இதை முடிப்பாய்!'
   எனத் தொழிலை எண்ணிச் செய்தால்
அது கருமம் பாராமல் திருடியும் அள்ளியும்
   புரட்டாய் அலைவது எல்லாம்
மதி அணியும் தண்டலையார் வள நாட்டில்
   நீராடும் மாதர் தங்கள்
முதுகினைத் தேய் எனச் சொன்னால் முலைமீது
   கையிட்ட முறைமை தானே.

உரை
   

4.  ஊர்க் குருவிதான் உயரப் பறந்தாலும்

பார்க்குள் அறிவு இருந்தாலும் படித்தாலும்
   கேட்டாலும் பணிந்து வேத
மார்க்கமுடன் நடந்தாலும் சிறியவர்க்குப்
   பெரியவர் தம் மகிமை உண்டோ?
ஆர்க்கும் அருங் கதி உதவும் தண்டலையாரே!
   சொன்னேன்! ஆகாயத்தில்
ஊர்க் குருவி தான் உயரப் பறந்தாலும்
   பருந்து ஆகாது உண்மை தானே.

உரை
   

5. இல்லது வாராது; நமக்கு உள்ளது போகாது

வல்லமையால் முடிவது உண்டோ? தலைகீழாய்
   நின்றாலும் வருவது உண்டோ?
அல்லதுதான் அவன் செயலே அல்லாமல்
   தன் செயலால் ஆவது உண்டோ?
புல் அறிவால் மயங்காமல், தண்டலையார்
   அடிபணிந்து, புத்தி உண்டாய்,
இல்லது வாராது! நமக்கு உள்ளது போகாது
   எனவே இருக்கலாமே.

உரை
   

6.     குங்குமம் சுமந்த கழுதை

பேர் உரை கண்டு அறியாது தலைச்சுமை
   ஏடுகள் சுமந்து பிதற்றுவோனும்,
போரில் நடந்து அறியாது பதினெட்டு
   ஆயுதம் சுமந்த புல்லியோனும்
ஆர் அணி தண்டலைநாதர் அகமகிழாப்
   பொருள் சுமந்த அறிவிலோனும்
காரியம் ஒன்று அறியாக் குங்குமம் சுமந்த
   கழுதைக்கு ஒப்பு ஆவர் தாமே.

உரை
   

7.    பொன் பூவில் வாசனை

கற்பூர வல்லி ஒரு பாகர் செழுந்
   தண்டலையார் கடல் ஏழ் சூழ்ந்த
நற்பூமி தனில் பிறந்தோர் எல்லோரும்
   மக்கள் என நாட்டலாமோ?
அற்பூரும் பண்பு உடையார் நற்குணமும்
   பண்பு இலார் அழகும் காணின்
பொற்பூவில் வாசனையும் புன்முருக்கம்
   பூவும் எனப் புகலல் ஆமே.

உரை
   

8.  கலியாணப் பஞ்சம் இல்லை

சலியாமல் தண்டலையில் தாயகனார்
   அருள்கொண்டு தருமம் செய்யப்
பொலிவு ஆகிக் கொழுமீதில் வந்த பொருள்
   ஈந்தவைதாம் போக மீந்தால்
மலிவு ஆகிச் செல்வம் உண்டாம்! வயல் முழுதும்
   விளைந்திடும் நன்மாரி ஆகும்!
கலியாணப் பஞ்சம் இல்லை! களப் பஞ்சம்
   இல்லை ஒரு காலும் தானே.

உரை
   

9.     இரக்கப் போனாலும் .....

இரக்கத்தால் உலகு ஆளும் தண்டலையாரே!
   சிவனே! எந்த நாளும்
இரக்கத்தான் புறப்பட்டீர்! என் தனையும்
   இரக்க வைத்தீர்! இதனால் என்ன?
இரக்கத்தான் அதிபாவம்! இரப்பதுதீது
   என்றாலும், இன்மையாலே
இரக்கப் போனாலும் அவர் சிறக்கப் போவது
   கருமம் என்னல் ஆமே.

உரை