38. இழிவு
இரப்பவன் புவி
மீதில் ஈனன்; அவனுக்கு இல்லை
என்னும் அவன் அவனின் ஈனன்
ஈகின்ற பேர் தம்மை ஈயாமலே கலைத்
திடும் மூடன் அவனில் ஈனன்!
உரைக்கின்ற பேச்சிலே பலன் உண்டு எனக் காட்டி
உதவிடான் அவனில் ஈனன்!
உதவவே வாக்கு உரைத்தில்லை என்றே சொலும்
உலுத்தனோ அவனில் ஈனன்!
பரக்கின்ற யாசகர்க்கு ஆசை வார்த்தைகள் சொலிப்
பலகால் அலைந்து திரியப்
பண்ணியே இல்லை என்றிடும் கொடிய பாவியே
பாரில் எல்லோர்க்கும் ஈனன்!
அரக்கு இதழ்க் குமுதவாய் உமை நேசனே! எளியர்
அமுதனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
அறப்பளீசுர தேவனே!
|