81. மறையோர் சிறப்பு

ஓர் ஆறு தொழிலையும் கைவிடார்; சௌச விதி
     ஒன்று தப்பாது புரிவார்;
  உதயாதியில் சென்று நீர் படிகுவார்; காலம்
     ஒரு மூன்றி னுக்கும் மறவாது
ஆராய்ந்து காயத்ரி அது செபிப்பார்; நாளும்
     அதிதி பூசைகள் பண்ணுவார்;
  யாகாதி கருமங்கள் மந்த்ர கிரியா லோபம்
     இன்றியே செய்து வருவார்;
பேராசை கொண்டிடார்; வைதிக நன்மார்க்கமே
     பிழையாது இருக்கும் மறையோர்
  பெய்யெனப் பெய்யும் மு கில்; அவர் மகிமை எவர்களும்
     பேசுதற்கு அரிது அரிது காண்!
ஆர்ஆர் நெடும் சடில அமலனே! எனை ஆளும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

82. அரசர் சிறப்பு

மனுநீதி முறைமையும், பரராசர் கொண்டாட
     வரும் அதிக ரண வீரமும்,
  வாள் விசயமொடு சரச சாதன விசேடமும்,
     வாசி மதகரி ஏற்றமும்,
கனமாம் அமைச்சரும், பலமான துர்க்கமும்,
     கைகண்ட போர்ப் படைஞரும்,
  கசரத பதாதியும், துரக ப்ரவாகமும்
     கால தேசங்கள் எவையும்
இனிதாய் அறிந்த தானா பதிகளொடு சமர்க்கு
     இளையாத தளகர்த்தரும்,
  என்றும் வற்றாத தன தானிய சமுத்திரமும்,
     ஏற்றம் உள குடி வர்க்கமும்,
அனைவோரும் மெச்ச இங்கு இவையெலாம் உடைய பேர்
     அரசராம்! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

83. வணிகர் சிறப்பு

நீள்கடல் கடந்திடுவர்; மலையாளமும் போவர்!
     நெடிது தூரம் திரிந்தும்
  நினைவு தடுமாறார்கள்; சலியார்கள்; பொருள் தேடி
     நீள் நிலத்து அரசு புரியும்
வாள் உழவரைத் தமது கைவசம் செய்வார்கள்;
     வரும் இடம் வராத இடமும்
  மனத்தையும் அறிந்து உதவி ஒன்று நூறாயிட
     வளர்ப்பர்; வரு தொலை தொலைக்கும்
ஆள்விடுவர்; மலிவு குறைவது விசாரித்திடுவர்
     அளவில் பற்பல சரக்கும்
  அமைவு உறக் கொள்வர்; விற்பார் கணக்கு அதில் அணுவும்
     அறவிடார்; செலவு வரிலோ
ஆளி ஒத்தே மலையின் அளவும் கொடுத்திடுவர்
     அருள் வைசியர்! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

84. வேளாளர் சிறப்பு

யசனாதி கருமமும் தப்பாமல் வேதியர்
     இயற்றி நல் ஏர் பெறுவதும்,
  இராச்ய பாரம் செய்து முடி மன்னர் வெற்றி கொண்டு
     என்றும் நல் ஏர் பெறுவதும்,
வசனாதி தப்பாது தனதானியம் தேடி
     வசியர் நல் ஏர் பெறுவதும்,
  மற்றும் உள பேரெலாம் மிடி என்றிடாது அதிக
     வளமை பெற்று ஏர் பெறுவதும்,
திசைதோறும் உள்ள பல தேவாலயம் பூசை
     செய்யு நல் ஏர்பெறுவதும்,
  சீர் கொண்ட பைங்குவளை மாலை புனை வேளாளர்
     செய்யும் மேழிப் பெருமை காண்
அசையாது வெள்ளி மலை தனில் மேவி வாழ்கின்ற
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

85. தானாபதி, அமைச்சன், படைத்தலைவன்

தன் அரசன் வலிமையும், பரராசர் எண்ணமும்,
     சாலமேல் வரு கருமமும்
  தான் அறிந்து அதி புத்தி உத்தி உண்டாயினோன்
     தானாதிபதி ஆகுவான்;
மன்னவர் மனத்தையும், கால தேசத்தையும்,
     வாழ்குடி படைத் திறமையும்,
  மந்திர ஆலோசனையும் எல்லாம் அறிந்தவன்
     வளமான மதிமந்திரி;
துன்னிய படைக்குணம் கரிபரி பரீட்சையே,
     சூழ்பகைவர் புரி சூழ்ச்சியும்,
  தோலாத வெற்றியும் திடமான சித்தி உள
     சூரனே சேனாதிபன்
அன்னையினும் நல்ல மலை மங்கை பங்காளனே!
     அனகனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

86. அரசவைக் கணக்கர்

வரும் ஓலை உத்தரத்து எழுதி வரு பொருளினால்
     வரவிடுப்போன் மனதையும்,
  மருவி வரு கருமமும் தேச காலத்தையும்
     வரு கரதல ஆமலகமாய்
விரைவாய் அறிந்து அரசர் எண்ணில் எண்ணினை
     அளவிட எழுத வாசிக்கவும்
  வெற்றி கொண்டே பெரிய புத்தி உடையோன் புவியின்
     மேன்மை ராயசகாரன் ஆம்;
கருவாய் அறிந்து தொகை ஈர் ஆறு நொடியினில்
     கடிது ஏற்றிடக்கு உறைக்கக்
  கடுகை ஒரு மலையாக மலையை ஒரு கடுகுமாக
     காட்டுவோன் கருணீகன் ஆம்;
அருவாகி உருவாகி ஒளியாகி வெளியாகும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

87. சீற்றத்தின் கொடுமை

கோபமே பாவங்களுக்கு எல்லாம் தாய் தந்தை!
     கோபமே குடி கெடுக்கும்!
  கோபமே ஒன்றையும் கூடிவர ஒட்டாது!
     கோபமே துயர் கொடுக்கும்!
கோபமே பொல்லாது! கோபமே சீர்கேடு!
     கோபமே உறவு அறுக்கும்!
  கோபமே பழி செயும்! கோபமே பகையாளி!
     கோபமே கருணை போக்கும்!
கோபமே ஈனமாம் கோபமே எவரையும்
     கூடாமல் ஒருவனாக்கும்!
  கோபமே மறலி முன் கொண்டுபோய்த் தீய நரகக்
     குழியினில் தள்ளும் ஆல்!
ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டு அருளும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

88. பல்துறை

தாம் புரி தவத்தையும் கொடையையும் புகழுவோர்
     தங்களுக்கு அவை தழுவுறா!
  சற்றும் அறிவில்லாமல் அந்தணரை நிந்தை செய்
     தயவிலோர் ஆயுள் பெருகார்!
மேம்படு நறும் கலவை மாலைதயிர் பால் புலால்
     வீடு நல் செந்நெல் இவைகள்
  வேறொருவர் தந்திடினும் மனுமொழி அறிந்த பேர்
     விலை கொடுத்தே கொள்ளுவார்!
தேன் கனி கிழங்கு விறகு இலை இவை அனைத்தையும்
     தீண்டரிய நீசர் எனினும்
  சீர் பெற அளிப்பரேல் இகழாது கைக்கொள்வர்
     சீலம் உடையோர் என்பரால்!
ஆன் கொடி உயர்த்த உமை நேசனே! ஈசனே!
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை
   

89. முப்பொருள் (தத்துவத் திரயம்)

பூதம் ஓர் ஐந்துடன், புலன் ஐந்தும், ஞானம்
     பொருந்தும் இந்திரியம் ஐந்தும்,
  பொருவில்கன் மேந்திரியம் ஐந்தும், மனம் ஆதியாம்
     புகல் அரிய கரணம் நான்கும்,
ஓதினோர் இவை ஆன்ம தத்துவம் எனச் சொல்வர்;
     உயர்கால நியதி கலையோடு
  ஓங்கி வரு வித்தை, ராகம், புருடன் மாயை என்று
     உரை செய்யும் ஓர் ஏழுமே
தீதில் வித்யாதத் தவம் என்றிடுவர்; இவை அலால்
     திகழ் சுத்த வித்தை ஈசன்,
  சீர் கொள் சாதாக்கியம், சத்தி, சிவம் ஐந்துமே
     சிவதத்வம் என்று அறைகுவார்;
ஆதி வட நீழலிற் சனகாதியார்க்கு அருள் செய்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே.

உரை
   

90. காமன் அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்

வனசம், செழும் சூதமுடன், அசோகம் தளவம்,
     மலர் நீலம் இவை ஐந்துமே
  மார வேள் கணைகளாம்; இவை செயும் குணம்; முளரி
     மனதில் ஆசையை எழுப்பும்;
வினவில் ஒண் சூதமலர் மெய்ப் பசலை உண்டாக்கும்;
     மிக அசோகம் அது உயர் செயும்;
  வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம் உயிர் போக்கி விடும்;
     மேவும் இவை செயும் அவத்தை;
நினைவில் அதுவே நோக்கம், வேறொன்றில் ஆசை அறல்,
     நெட்டுயிர்ப்பொடு பிதற்றல்,
  நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
     நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனை உயிர் உண்டில்லை என்னல் ஈர் ஐந்தும் ஆம்!
     அத்தனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில் நினைதரு சதுர கிரிவளர்
     அறப்பளீசுர தேவனே!

உரை