61-70 வரை
 

      61. நடுவு நிலைமை

வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள்
     வரும்என்றும் நேசர்என்றும்
  வன்பகைஞரென்று மயலோர் என்றும் மிக்கதன
     வான்என்றும் ஏழைஎன்றும்
இந்த வகையைக்குறித்து ஒருபட்சபாதம் ஓர்
     எள்அளவு உரைத்திடாமல்
  எண்ண முடனேலிகித புத்தியொடு சாட்சிக்கும்
     ஏற்கச்,ச பாசமதம்ஆம்
முந்த இருதலையும் சமன்செய்த கோல்போல்
     மொழிந்திடின் தர்மம்அதுகாண்
  முனைவீமன் உடல்பாதி மிருகம் தனக்குஎன்று
     முன்தருமர் சொன்னதுஅலவோ?
மைந்தன்என அன்றுஉமை முலைப்பால் கொடுத்திட
     வளர்ந்தஅருள் குழந்தைவடிவே
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

   62. ஒருசார்பு சொல்லேல்

ஓரவிவ காரமா வந்தவர் முகம்பார்த்து
     உரைப்போர் மலைக்குரங்குஆம்
  உயர்வெள் எருக்குடன் முளைத்துவிடும் அவர்இல்லம்
     உறையும்ஊர் பாழ்நத்தம்ஆம்
தாரணியில் இவர்கள்கிளை நெல்லிஇலை போல்உகும்
     சமானமா எழுபிறப்பும்
  சந்ததிஇலாது உழல்வர் அவர்முகத்தினில் மூத்த
     தையலே குடிஇருப்பாள்
பாரம்இவர் என்று புவிமங்கையும் நடுங்குவாள்
     பழித்ததுர்மரணம் ஆவார்
  பகர்முடிவிலே, ரவுர ஆதி நரகத்துஅனு
     பவிப்பர்,எப்போதும் என்பார்
வாரமுடன் அருணகிரி நாதருக்கு அனுபூதி
     வைத்துஎழுதி அருள் குருபரா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

  63. ஒன்று இல்லாமையால் சிறக்காதவை

கொங்கை இல்லாதவட்கு எத்தனைப் பணிஉடைமை
     கூடினும் பெண்மைஇல்லை!
  கூறுநிறை கல்வி இல்லாமல்எத் தனைகவிதை
     கூறினும் புலமைஇல்லை!
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம்
     தரிக்கினும் கனதைஇல்லை!
  சட்சுவை பதார்த்தவகை உற்றாலும் நெய்இலாச்
     சாதமும் திருத்திஇல்லை!
பங்கயம் இலாமல் எத்தனைமலர்கள் வாவியில்
     பாரித்தும் மேன்மைஇல்லை!
  பத்தி இல்லாமல்வெகு நியமமாய் அர்ச்சனைகள்
     பண்ணினும் பூசைஇல்லை!
மங்கையர் இலாமனைக்கு எத்தனை அருஞ்செல்வம்
     வரினும் இல்வாழ்க்கைஇல்லை!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      64. அளக்க இயலாதவை

வாரி ஆழத்தையும் புனல்எறியும் அலைகளையும்
     மானிடர்கள் சனனத்தையும்
  மன்னவர்கள் நினைவையும் புருடர் யோகங்களையும்
     வானின்உயர் நீளத்தையும்
பாரில்எழு மணலையும் பல பிராணிகளையும்
     படியாண்ட மன்னவரையும்
  பருப்பதத் தின்நிறையும் ஈசுரச் செயலையும்
     பனிமாரி பொழி துளியையும்
சீரிய தமிழ்ப்புலவர் வாக்கில்எழு கவியையும்
     சித்தர்தமது உள்ளத்தையும்
  தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி
     தெரிந்து அளவிடக்கூடுமோ
வாரிச மடந்தைகுடி கொண்டநெடு மாலுக்கு
     மருகன்என வந்தமுருகா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

65. பிறர் மனைவி நயப்பார்க்கு உறுபயன்

தம்தாரம் அன்றியே பரதாரமேல் நினைவு
     தனைவைத்த காமுகர்க்குத்
  தயைஇல்லை நிசம்இல்லை வெட்கம்இலை சமரினில்
     தைரியம் சற்றும்இல்லை
அம்தாரம்இல்லைதொடர் முறைஇல்லை நிலைஇல்லை
     அறிவுஇல்லை மரபும்இல்லை
  அறம்இல்லை நிதிஇல்லை இரவினில் தனிவழிக்கு
     அச்சமோ மனதில்இல்லை
நந்தாத சனம்இல்லை இனம் இல்லை எவருக்கும்
     நட்புஇல்லை கனதைஇல்லை
  நயம்இல்லை இளமைதனில் வலிமைஇலை முத்திபெறும்
     ஞானம்இலை என்பர்கண்டாய்
மந்தார பரிமள சுகந்தாதி புனையும்மணி
     மார்பனே அருளாளனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

     66. மானம் விடாமை

கனபாரம் ஏறின் பிளந்திடுவது அன்றியே
     கல்தூண் வளைந்திடாது;
  கருதலர்களால் உடைந்தாலும் உயிர் அளவிலே
     கனசூரன் அமரில்முறியான்;
தினமும்ஓர் இடுக்கண்வந்து உற்றாலும் வேங்கைதோல்
     சீவன் அளவில்கொடாது;
  திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும்
     செப்பும்முறை தவறிடார்கள்;
வனம்ஏறு கவரிமான் உயிர்போகும் அளவும்தன்
     மயிரின் ஒன்றும்கொடாது;
  வாராத ஆபத்து வருகினும் கற்புடைய
     மாதுநிறை தவறிநடவாள்;
மனதார உனதுஅடைக்கலம் என்ற கீரன்கு
     வன்சிறை தவிர்த்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      67. திருவருள் சிறப்பு

திருமகள் கடாட்சம் உண்டானால் எவர்க்கும்
     சிறப்புண்டு கனதைஉண்டு
  சென்றவழி எல்லாம் பெரும்பாதை ஆய்விடும்
     செல்லாத வார்த்தைசெல்லும்;
பொருளொடு துரும்பு மரியாதைஆம் செல்வமோ
     புகல்பெருக்கு ஆறுபோல் ஆம்;
  புவியின்முன் கண்டு மதியாதபேர் பழகினவர்
     போலவே நேசம்ஆவார்;
பெருமையொடு சாதியில் உயர்ச்சிதரும் அனுதினம்
     பேரும்ப்ரதிட்டை உண்டாம்;
  பிரியமொடு பகையாளி கூடஉற வாகுவான்
     பேச்சினில் பிழைவராது
வரும்என நினைத்தபொருள் கைகூடி வரும்அதிக
     வல்லமைகள் மிகவும்உண்டாம்;
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

       68. நட்பு நிலை

கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே
     களித்துஉளம் மலர்ந்ததுஎன்ன
  கார்மேகம் எங்கே? பசுந்தோகை எங்கே?
     கருத்தில்நட்பு ஆனதுஎன்ன
மதியம் எங்கே பெருங் குமுதம் எங்கேமுகம்
     மலர்ந்துமகிழ் கொண்டதுஎன்ன
  வல்இரவு விடிவது எங்கே கோழி எங்கே
     மகிழ்ந்துகூவிடுதல் என்ன
நிதிஅரசர் எங்கேயிருந்தாலும் அவர்களொடு
     நேசம் ஒன்றாய் இருக்கும்
  நீதிமிகு நல்லோர்கள் எங்கிருந்தாலும் அவர்
     நிறைபட்சம் மறவார்கள்காண்
மதிலுடன் கோபுரமும் வாவியும் புடைசூழ
     மருவுசோணாட்டு அதிபனே
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      69. காலம் அறிதல்

காகம் பகல்காலம் வென்றிடும் கூகையைக்
    கனகமுடி அரசர்தாமும்
  கருதுசயகாலம் அது கண்டுஅந்த வேளையில்
     காரியம் முடித்துவிடுவார்
மேகமும் பயிர்காலம் அதுகண்டு பயிர்விளைய
     மேன்மேலும் மாரிபொழியும்
  மிக்கான அறிவுளோர் வருதருண காலத்தில்
     மிடியாளருக்கு உதவுவார்;
நாகரிகம் உறுகுயில் வசந்த காலத்திலே
     நலம்என்று உகந்துகூவும்;
  நல்லோர் குறித்ததைப் பதறாமல் அந்தந்த
     நாளையில் முடிப்பர்கண்டாய்;
வாகனைய காலைகல் மாலைபுல் எனும்உலக
     வாடிக்கை நிசம்அல்லவோ
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு?
     மலைமேவு குமரேசனே!

உரை
   

       70. இடம் அறிதல்

தரைஅதனில் ஓடுதேர் நீள்கடலில் ஓடுமோ?
     சலதிமிசை ஓடுகப்பல்
  தரைமீதில் ஓடுமோ? தண்ணீரில் உறுமுதலை
     தன்முன்னே கரிநிற்குமோ?
விரைமலர் முடிப்பரமர் வேணிஅரவினை வெல்ல
     மிகுகருடனால் ஆகுமோ
  வேங்கைகள் இருக்கின்ற காடுதனில் அஞ்சாமல்
     வேறுஒருவர் செல்லவசமோ
துரைகளைப் பெரியோரை அண்டி வாழ்வோர்தமைத்
     துட்டர்பகை என்னசெய்யும்?
  துணைகண்டு சேர்இடம் அறிந்துசேர் என்றுஒளவை
     சொன்னகதை பொய்அல்லவே?
வரைஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள்
     வன்போர் செயித்ததுஅன்றோ?
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை