81-90 வரை
 

      81. இதனினும் இது நன்று

பஞ்சரித்து அருமை அறியார்பொருளை எய்தலின்
     பலர்மனைப் பிச்சைநன்று;
  பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில்
     பட்டினிஇருக்கை நன்று;
தஞ்சம்ஒரு முயலைஅடு வென்றிதனில் யானையொடு
     சமர்செய்து தோற்றல்நன்று;
  சரசகுணம் இல்லாத பெண்களைச் சேர்தலின்
     சன்னியாசித்தல் நன்று;
அஞ்சலார் தங்களொடு நட்பாய் இருப்பதனின்
     அரவினொடு பழகுவது நன்று;
  அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில்
     ஆருயிர் விடுத்தல்நன்று;
வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே
     வருந்திடும் சிறுமைநன்று;
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

       82. நிலையாதவை

கொற்றவர்கள் ராணுவமும்; ஆறுநேர் ஆகிய
     குளங்களும்; வேசைஉறவும்
  குணம்இலார் நேசமும்; பாம்பொடு பழக்கமும்;
     குலவுநீர் விளையாடலும்;
பற்றலார் தமதிடை வருந்து விசுவாசமும்;
     பழையதாயாதிநிணறும்;
  பரதார மாதரது போகமும்; பெருகிவரு
     பாங்கான ஆற்றுவரவும்;
கற்றும்ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேர்உறவும்;
     நல்ல மதயானைநட்பும்;
  நாவில்நல் உறவும் ஒருநாள்போல் இராஇவைகள்;
     நம்பப் படாதுகண்டாய்!
மற்றும்ஒரு துணைஇல்லை நீதுணை எனப்பரவும்
     வானவர்கள் சிறைமீட்டவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

   83. நற்புலவர் தீப்புலவர் செயல்

மிக்கான சோலையில் குயில்சென்று மாங்கனி
     விருப்பமொடு தேடிநாடும்;
  மிடைகருங் காகங்கள் எக்கனி இருந்தாலும்
     வேப்பங் கனிக்குநாடும்;
எக்காலும் வரிவண்டு பங்கேருகத்தினில்
     இருக்கின்ற தேனைநாடும்;
  எத்தனை சுகந்தவகை உற்றாலும் உருள்வண்டு
     இனம்துர்மலத்தை நாடும்;
தக்கோர் பொருட்சுவை நயங்கள் எங்கேஎன்று
     தாம்பார்த்து உகந்துகொள்வார்
  தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கேஎன்று
     தமிழில் ஆராய்வர்கண்டாய்
மைக்காவி விழிமாது தெய்வானையும் குறவர்
     வள்ளியும் தழுவு தலைவா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

       84. தாழ்தல் பெருமை

வேங்கைகள் பதுங்குதலும், மாமுகில் ஒதுங்குதலும்,
     விரிசிலை குனிந்திடுதலும்,
  மேடம் அது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும்
     வெள்விடைகள் துள்ளிவிழலும்
மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும்
     முனிவர்கள் நயந்துகொளலும்
  முதிர்படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும்
     முதலினர் பயந்திடுதலும்
ஆங்கரவு சாய்குதலும் மகிழ்மலர் உலர்ந்திடலும்
     ஆயர்குழல் சூடுபடலும்
  அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல்
     அதனால் இளைப்புவருமோ?
மாங்கனிக்கா அரனை வலமது புரிந்துவளர்
     மதகரிக்கு இளையமுருகா
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

     85. தெய்வச் செயல்

சோடாய் மரத்தில் புறாஇண்டு இருந்திடத்
     துருவுகண்டே வேடுவன்
  தோலாமல் அவைஎய்யவேண்டும் என்றுஒருகணை
     தொடுத்துவில் வாங்கிநிற்க
ஊடாடி மேலே எழும்பிடின் அடிப்பதற்கு
     உலவு, ராசாளிகூட
  உயரப் பறந்துகொண்டே, திரிய அப்போது
     உதைத்தசிலை வேடன் அடியில்
சேடாக வல்விடம் தீண்டவே அவன்விழச்
     சிலையில் தொடுத்தவாளி
  சென்று இராசாளிமெய் தைத்துவிழ அவ்இரு
     சிறைப்புறா வாழ்ந்த அன்றோ?
வாடாமல் இவைஎலாம் சிவன்செயல்கள் அல்லாது
     மனச்செயலினாலும் வருமோ?
  மயில்ஏறி விளைாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

         86. பாடல் இயல்பு

எழுத்துஅசைகள் சீர்தளைகள் அடிதொடைகள் சிதையாது
     இருக்கவே வேண்டும்அப்பா
  ஈர்ஐம் பொருத்தமொடு மதுரமாய்ப் பளபளப்பு
     இனியசொற்கு அமையவேண்டும்
அழுத்தம்மிகு குறளினுக்கு ஒப்பாக வேபொருள்
     அடக்கமும் இருக்கவேண்டும்
  அன்பான பாவினம் இசைந்துவரல் வேண்டும்முன்
     அலங்காரம் உற்றதுறையில்
பழுத்துஉளம் உவந்துஓசை உற்றுவரல் வேண்டும்
     படிக்கும்இசை கூடல்வேண்டும்;
  பாங்காக இன்னவை பொருந்திடச் சொற்கவிதை
     பாடில் சிறப்புஎன்பர்காண்
மழுத்தினம் செங்கைதனில் வைத்த கங்காளன் அருள்
     மைந்தன் என வந்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

      87. திருநீறு வாங்கும் முறை

பரிதனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர்
     பலகையில் இருந்தும்மிகவே
  பாங்கான அம்பலம் தனிலே இருந்தும்
     பருத்த திண்ணையில்இருந்தும்
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ்நிற்க மேல்நின்று
     திருநீறு வாங்கிஇடினும்
  செங்கைஒன்றாலும்விரல் மூன்றாலும் வாங்கினும்
     திகழ் தம்பலத்தினோடும்
அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும்
     அசுத்தநிலம் ஆன அதினும்
  அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும்
     அவர்க்குநரகு என்பர்கண்டாய்
வரிவிழி மடந்தை குறவள்ளி நாயகிதனை
     மணந்துமகிழ் சகநாதனே!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

  88. திருநீறு அணியும் முறை

பத்தியொடு சிவசிவா என்றுதிரு நீற்றைப்
     பரிந்துகையால் எடுத்தும்
  பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு
     பருத்தபுயமீதில் ஒழுக
நித்தம் மூவிரல்களால் நெற்றியில் அழுந்தல்உற
     நினைவாய்த் தரிப்பவர்க்கு
  நீடுவினை அணுகாது தேகபரி சுத்தராய்
     நீங்காமல் நிமலன் அங்கே
சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே
     தாண்டவம் செய்யும்திரு
  சஞ்சலம் வராதுபர கதிஉதவும் இவரையே
     சத்தியும் சிவனும்என்னலாம்
மத்துஇனிய மேருஎன வைத்து அமுதினைக்கடையும்
     மால்மருகன் ஆனமுருகா!
  மயில்ஏறி விளையாடுகுகனே புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

89. இன்ன உறுப்புக்களால் பயன்இல்லை

தேவாலயம் சுற்றிடாத கால் என்னகால்?
     தெரிசியாக் கண்என்னகண்?
  தினமுமே நின்கமல பாதத்தை நினையாத
     சிந்தைதான் என்னசிந்தை?
மேவுஆகம் சிவ புராணமம் அவை கேளாமல்
     விட்டசெவி என்ன செவிகள்?
  விமலனை வணங்காத சென்னி என்சென்னி பணி?
     விடைசெயாக்கை என்னகை?
நாவார நினை ஏத்திடாதவாய் என்னவாய்?
     நல்தீர்த்தம் மூழ்காஉடல்
  நானிலத்து என்னஉடல் பாவியாகிய சனனம்
     நண்ணினால் பலன்ஏதுகாண்
மாஆகி வேலைதனில் வருசூரன் மார்புஉருவ
     வடிவேலை விட்டமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை
   

 90. நற்பொருளுடன் தீயபொருள் பிறத்தல்

கோகனக மங்கையுடன் மூத்தவள் பிறந்துஎன்ன?
     குலவும் ஆட்டின்கண் அதர்தான்
  கூடப் பிறந்துஎன்ன தண்ணீரின் உடனே
     கொடும்பாசி உற்றும்என்ன?
மாகர்உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்துஎன்ன
     வல் இரும்பில்துருத்தான்
  வந்தே பிறந்துஎன்ன நெடுமரந்தனில் மொக்குள்
     வளமொடு பிறந்துஎன்னஉண்
பாகமிகு செந்நெலொடு பதர்தான் பிறந்துஎன்ன?
     பன்னும்ஒரு தாய்வயிற்றில்
  பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்துஎன்ன?
     பலன்ஏதும் இல்லை அன்றோ?
மாகனக மேருவைச் சிலைஎன வளைத்தசிவன்
     மைந்தன்என வந்தமுருகா!
  மயில்ஏறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

உரை