39

                       (மேற்)

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்க
னிந்திரன் சோமன் பிரம னுருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோ
டிந்த வெழுவரு மென்வழி யாமே

                         (திருமந்திரம்)

     இந்தக் கஞ்சமலையானது பூந்துறை நாட்டின் இணைநாடுகளி
லொன்றான் பருத்திப் பள்ளி நாட்டுக்கும் இராசிபுரநாட் டிணை
நாடான சேலம் நாட்டுக்கும் பூவாணிய நாட்டுக்குஞ் சேர்ந்ததாக
இருக்கிறது. இவ்விடத்து ஆண்டுகள் தோறும் மாசி மாதத்தில் வழலை
(பூநீர்) விளைவதைப் பெறுதற்காகப் பல திசைகளிலிருந்தும் வாதிகள்
வருகிறார்கள் இம்மலை வாரிகளிலொன்றான பொன்னியில் பொன் கனி
எடுக்கிறார்கள். 37-ஆம் செய்யுளின் கீழ்நோக்குக.

                 போகநாதர் புலிப்பாணி

36.



யோக வயித்தியஞ் சொல்ரச வாத மெலாக்கலையுந்
தேக நிலைபெறுங் காயகற் பங்களெண் சித்தியுஞ்சொல்
போக ருடன்புலிப் பாணி முதலிய புண்யரெலா
மாக முறவமர் வைகா நகர்கொங்கு மண்டலமே.

     (க-ரை) யோகம் வைத்தியம் ரசவாதம் நீண்ட ஆயுளைப் பெறுங்
காயகற்பம் அட்டமாசித்தி முதலியவைகளைக் கூறிய போகநாதர், புலிப்பாணி
முதலிய பெரியோர்கள் வசித்துள்ள வைகாவூர் (பழனி) கொங்கு மண்டலம்
என்பதாம்.

     வரலாறு : திருமாளிகைத் தேவர் கருவூர்ச்சித்தர் புலிப்பாணி
முதலிய எண்ணிலாத மாணாக்கர்களையுடையவர் போகர்*. இவர் ஒரு
சித்தர் திருமாளிகைத் தேவர் சரிதத்தால் சைவசமயப் பற்றுள்ளவராகவும்,
கரூர்த் தேவரை நோக்க வாமாசார முடையவராகவுங் கருதப்படுகின்றார்.
தஞ்சாவூர் பிரஹதீசுரர் (பெரிய) கோயில் அட்டபந்தன காலத்தில் இவர்
அங்கு எழுந்தருளி யிருந்தமை இந்நூல் 34 ஆவது செய்யுளின் கீழ்
விளங்குகிறது. புலிப்பாணி மாந்தரீகம், ரசவாதம், வைத்திய முதலியவைகளிற்
றேர்ந்தவராவர்.


  * போகர், சீனதேசத்துப் புத்தசமயி என்றும் அங்கிருந்து கயா முதலிய
    புத்த தலங்களைத் தரிசித்துக் கொண்டு, தென்னாடு முற்றிலுஞ்
    சஞ்சரித்துப் பலநாள் இங்கிருந்து திரும்பிச் சீனதேசஞ் சென்றன
    ரென்றும், புலிப்பாணியும் இவரோடு வந்து இங்கேயே தங்கி
    விட்டனரென்றுஞ் சொல்வாருமுளர்.