51-60 வரை
 

அலைவைத்த வையைத் திரைச்சீத னத்தையு மள்ளிக்கொண்டு
குலைவைத்த தண்ணறுந் தாதலர் பூமணங் கொள்ளைகொண்டு
நிலைவைத்த சந்தன வாசமும் வாரி நிலவுதென்றல்
மலயத் தமழ்மண மேவீசும் பாண்டியன் மண்டலமே.




(51)
   

மடலுற்ற புட்ப மணிநாச்சி யாரம்மை மாமணஞ்செய்
திடமிக்க வாசை யுடனே புதுவையிற் சென்றுமென்றே
யடல்பெற்ற வேங்கடத் தாருமன் னாரு மழகருந்தென்
வடபத்ர சாயியுந் தாமமர் பாண்டியன் மண்டலமே.




(52)
   

பாலினும் வெண்ணெ யினுந்தயிர் மீதினும் பட்சம்வைத்த
வேலினுங் கூரிய கண்ணா ளகோதைதன் வீட்டிடத்தே
ஆலினும் வேலையி னுந்துயில் சங்கத் தழகரெனு
மாலிருஞ் சோலை மலையாரும் பாண்டியன் மண்டலமே.




(53)
   

பந்தா முலையுமை தாயென வாரிதன் பால்முழுகத்
தந்தீரம் விட்டுக் கடவாத வாரிதி தானைமுன்னம்
செந்தே னொழுகுங் கடம்பா டவியில் திருக்குளத்தில்
வந்தே யெழுகட லானதும் பாண்டியன் மண்டலமே.




(54)
   

கானம் புனையும் நெறியுழி மாறன் கருவைப்பெருந்
தான தருக்கள் நிறைந்தபால் வண்ணநா தப்பரனைத்
தேன்மொண்டு மொண்டபி டேகஞ்செய் போது திருவுருவாய்
மான்மழு வோடெதிர் காட்டிடும் பாண்டியன் மண்டலமே.




(55)
   

அரைசிலை யொன்று புனல்வீழ மீனு மணைக்கரையில்
தரைமிசை பாதியப் பட்சியு மாகியத் தண்ணியநீர்க்
கரைமிசைப் பாதியப் பட்சியு மீனுங் கவர்ந்திருக்கும்
வரைசெய் திருப்பரங் குன்றமும் பாண்டியன் மண்டலமே.




(56)
   

அதிகார மாகச்சொக் கேசரைப் பூசைசெய் தானைநர
பதியான மெய்கண்ட சைவ சிகாமணி பக்தியினால்
விதியாகப் பூசித்த வேளாளர்க் கேவெள்ளை நீறளித்த
மதியா மதுரா புரியது பாண்டியன் மண்டலமே.




(57)
   

திருவாய் மொழித்திரு மேனிய ரானதுஞ் செந்தமிழா
லொருநான் மறையென வோதிய பாடல்கொண் டோங்குபதி
யிருநாலு பத்து முடைத்தாகி யெண்டிசை யேற்றம்பெற்று
வருமால் திருப்பதி யுள்ளதும் பாண்டியன் மண்டலமே.




(58)
   

செகத்தினில் பஞ்சம் வரவே யருச்சனை செய்கையிலே
புகழ்த்துணை யார்திருப் புத்தூர்ச் சிவன்முடி மேல்புடைக்க
வகத்துணை யாகப்பெற் றேபடிக் காசொன் றளித்துவரும்
மகத்துவ மானாரும் வேளாளர் பாண்டியன் மண்டலமே.




(59)
   

கரைபெற்ற தோர்பஞ்ச லட்சண மானதொல் காப்பியமுந்
தரைமுற்றும் போற்றிய சிந்தா மணியுந் தமிழ்ச்சங்கத்தில்
நிரைபெற் றுயர்பத்துப் பாட்டும் விளங்க நிசவுரையை
வரைநச்சி னார்க்கினி யார்வாழ்வு பாண்டியன் மண்டலமே.




(60)