கனவுநிலை கூறி விளித்தது

29. இகலி ழந்தரசர் தொழவ ருப்பவனி
     இரவு கந்தருளு கனவினில்
பகலி ழந்தநிறை பெறமு யன்றுமொழி
   பதறு வீர்கடைகள் திறமினோ.

   
(பொ-நி) பகல் பவனி(யில்) இழந்த நிறைபெற முயன்று, இரவு கனவினில் மொழி பதறுவீர் திறமின்; (எ-று.)

   
(வி-ம்.) இகல்-வலி. பவனி-உலாவில். உகந்தருளும் - விரும்பிக்காணும். பகல்-பகற்பொழுதில். பதறுதல்-துடிப்புறுதல்; நிறை-மனத்தை நிலைதிரியாமல் நிறுத்தல்; மொழி பதறுவீர் - புணர்ந்து  மொழி  பதறுவீர்  என்க.  பகலில் நிறையழிந்தும் இரவில் கனவில் புணர்ந்தும் இருந்தனர் என்க.         (9)