கணவரோ டுடனுறையுநிலை கூறி விளித்தது

42.விலையி லாதவடம் முலையி லாடவிழி
     குழையி லாடவிழை கணவர்தோள்
மலையி லாடிவரு மயில்கள் போலவரு
   மடந லீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி) வடம்  முலையில்  ஆட, விழி   குழையில் ஆட, கணவர்
தோள் மலையில் ஆடிவரும்  மயில்கள் போல வரும் நலீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.)  வடம் - முத்துமாலை.  விழி - கண். குழை - காதணி. விழி
குழைவரை  ஓடிய   வென்க.  விழை-விரும்பும்.  தோள்மலை - தோளாகிய
மலைமீது; பண்புத்தொகை. நலீர்-நல்லீர்;பெண்களே. கணவர் தோள்மலையில் மயில்  போன்றனர்  பெண்கள். மயில்கள் மலைமீது ஆடுதல் இயல்பாகலின் இவ்வாறு கூறினார்.                                           (22)