பிரிவாற்றா வியல்பு கூறி விளித்தது

72. பிழைநி னைந்துருகி அணைவு றாமகிழ்நர்
    பிரிதல் அஞ்சிவிடு கண்கணீர்
மழைத தும்பவிரல் தரையி லேஎழுது
   மடந லீர்கடைகள் திறமினோ.

     (பொ-நி)மகிழ்நர்  பிரிதல் அஞ்சி, நினைந்து உருகி, விடுநீர் மழை
ததும்ப, தரையிலே எழுது மடநலீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) பிழை  - பிரிய  நினைந்த  பிழை. அணைவுறா -அணைய
நினையாத. கண்கள் நீர்-கண்களினின்றும் பெருகும் நீர். நீர்மழை- நீராகிய
மழை. விரல்-காற்பெருவிரல். பிரிவுத் துன்பத்தால் கண்ணீர் மழைபோன்று
பெருக,  காற் பெருவிரலால் நிலத்தைக் கீறி நின்றனர் என்க. மகளிர்க்குக்
கணவர்  பிரிவுத் துன்பத்தாலும் கூடல் இன்பத்தாலும் துன்பக் கண்ணீரும்
இன்பக்  கண்ணீரும்  பெருகுவது  இயற்கை. இங்கே பிரிவை யெண்ணித்
துன்பக்  கண்ணீர்  வடித்தலைக்  குறித்தார்.  இவ்வாறே கண்ணகியாரும்,
மாதவியாரும்  முறையே  பிரிவினானும்,  கூடலானும்  தம்  நிறையழிந்து
கண்ணீர் உகுத்தனர் என இளங்கோவடிகள்,  ‘உள்ளக நறுந்தா துறைப்பமீ
தழிந்து,  கள்ளுக  நடுங்கும் கழுநீர்போலக், கண்ணகி கருங்கணும் மாதவி
செங்கணும், உண்ணிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன, (சிலப், 5;235-8)
கூறுவது கொண்டும் அறியலாம்.                               (52)