செங்கீரைப்பருவம்
 
13
நீராட்டி ஆட்டுபொன் சுண்ணம் திமிர்ந்துஅள்ளி
                நெற்றியில் தொட்டிட்ட வெண்
        நீற்றினொடு புண்டரக் கீற்றுக்கும் ஏற்றிடஒர்
                நித்திலச் சுட்டிசாத்தித்

தாராட்டு சூழியக் கொண்டையும் முடித்துத்
                தலைப்பணி திருத்திமுத்தின்
        தண்ஒளி ததும்பும் குதம்பையொடு காதுக்கு ஒர்
                தமனியக் கொப்பும்இட்டுப்

பாராட்டு பாண்டிப் பெருந்தேவி திருமுலைப்
                பால்அமுதம் ஊட்டிஒருநின்
        பால்நாறு குமுதம் கனிந்து ஊறு தேறல்தன்
                பட்டாடை மடிநனைப்பச்

சீராட்டி வைத்துமுத்து ஆடும் பசுங்கிள்ளை
                செங்கீரை ஆடிஅருளே
        தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி
                செங்கீரை ஆடிஅருளே
உரை
   
14
உள்நிலா உவகைப் பெருங்களி துளும்பநின்று
                உன்திருத் தாதைநின்னை
        ஒருமுறை கரம்பொத்தி வருகஎன அழைத்திடுமுன்
                ஓடித் தவழ்ந்துசென்று

தண்உலாம் மழலைப் பசுங்குதலை அமுதினிய
                தாய்வயிறு குளிரஊட்டித்
        தடமார்ப நிறை குங்குமச்சேறு அளைந்துபொன்
                தாள்தோய் தடக்கைபற்றிப்

பண்ணுலா வடிதமிழ்ப் பைந்தாமம் விரியும்
                பணைத்தோள் எருத்தம்ஏறிப்
        பாசுஒளிய மரகதத் திருமேனி பச்சைப்
                பசுங்கதிர் ததும்பமணிவாய்த்

தெள்நிலா விரியநின்று ஆடும் பசுந்தோகை
                செங்கீரை ஆடிஅருளே
        தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி
                செங்கீரை ஆடிஅருளே
உரை
   
15
சுற்றுநெடு நேமிச் சுவர்க்குஇசைய எட்டுச்
                சுவர்க்கால் நிறுத்திமேருத்
        தூண்ஒன்று நடுநட்டு வெளிமுகடு மூடிஇரு
                சுடர்விளக்கு இட்டுமுற்ற

எற்று புனலில்கழுவு புவனப் பழங்கலம்
                எடுத்துஅடுக்கிப் புதுக்கூழ்
        இன்னமுதமும்சமைத்து அன்னைநீ பன்முறை
                இழைத்திட அழித்துஅழித்துஓர்

முற்றவெளி யில்திரியும் மத்தப் பெரும்பித்தன்
                முன்நின்று தொந்தம் இடவும்
        முனியாது வைகலும் எடுத்துஅடுக்கிப்பெரிய
                மூதண்ட கூடம்மூடும்

சிற்றில்விளை யாடும்ஒரு பச்சிளம் பெண்பிள்ளை
                செங்கீரை ஆடிஅருளே
        தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி
                செங்கீரை ஆடிஅருளே
உரை
   
16
மங்குல்படு கந்தரச் சுந்தரக் கடவுட்கு
                மழகதிர்க் கற்றைசுற்றும்
        வாள்நயன மூன்றும் குளிர்ந்துஅமுத கலைதலை
                மடுப்பக் கடைக்கண்நோக்கும்

பொங்கும் நோக்கில் பிறந்த ஆனந்தப்
                புதுப்புணரி நீத்தம்ஐயன்
        புந்தித் தடத்தினை நிரப்பவழி அடியர்பால்
                போகசாகரம்அடுப்ப

அங்கண்நெடு ஞாலத்து வித்துஇன்றி வித்திய
                அனைத்து உயிர்களும் தளிர்ப்ப
        அருள்மடை திறந்துகடை வெள்ளம் பெருக்கெடுத்து
                அலைஎறிந்து உகளஉகளும்

செங்கயல் கிடக்கும் கருங்கண் பசுந்தோகை
                செங்கீரை ஆடிஅருளே
        தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி
                செங்கீரை ஆடிஅருளே
உரை
   
17
பண்அறா வரிமிடற்று அறுகால் மடுப்பப்
                பசுந்தேறல் ஆறலைக்கும்
        பதும பீடிகையும்முது பழமறை விரிந்துஒளி
                பழுத்தசெந்நாவும்இமையாக்

கண்அறா மரகதக் கற்றைக் கலாம்மஞ்ஞை
                கணமுகில் ததும்ப ஏங்கும்
        கார்வரையும் வெள்ளெனவொர் கன்னிமா டத்துவளர்
                கற்பூர வல்லிகதிர்கால்

விண்அறா மதிமுயல் கலைகிழிந்து இழிஅமுத
                வெள்அருவி பாயவெடிபோய்
        மீளும் தகட்டுஅகட்டு இளவாளை மோதமுகை
                விண்டுஒழுகும் முண்டகப்பூந்

தெள்அறா அருவிபாய் மதுரைமர கதவல்லி
                செங்கீரை ஆடிஅருளே
        தென்னற்கும் அம்பொன்மலை மன்னற்கும் ஒருசெல்வி
                செங்கீரை ஆடிஅருளே
உரை
   
18

(வேறு)

முகமதி ஊடுஎழு நகைநிலவு ஆட
                முடிச்சூ ழியம்ஆட
        முருபுரி வக்கொடி நுதல்இடு சுட்டி
                முரிப்பொடு அசைந்துஆட

இகல்விழி மகரமும் அம்மக ரம்பொரும்
                இருமக ரமும்ஆட
        இடுநூ புரஅடி பெயரக் கிண்கிண்
                எனும்கிண் கிணிஆடத்

துகிலொடு சோர்தரு கொடிநுண் மருங்குல்
                துவண்டு துவண்டுஆடத்
        தொந்தி சரிந்திட உந்தி கரந்துஒளிர்
                சூலுடை யால்அடைமற்று

அகில சராசரம் நிகிலமோடு ஆடிட
                ஆடுக செங்கீரை
        அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
                ஆடுக செங்கீரை
உரை
   
19
தசைந்திடு கொங்கை இரண்டல எனவுரை
                தருதிரு மார்புஆடத்
        தாய்வருக என்பவர் பேதமை கண்டு
                ததும்புபுன் னகைஆடப்

பசைந்திடு ஞாலம் மலர்ந்தமை வெளிறிஒர்
                பச்சுடல் சொல்லவும்ஒர்
        பைங்கொடி ஒல்கவும் ஒல்கி நுடங்கிய
                பண்டி சரிந்துஆட

இசைந்திடு தேவை நினைந்தன என்ன
                இரங்கிடு மேகலையோடு
        இடுகுஇடை ஆட இயற்கை மணம்பொதி
                இதழ்வழி தேறலினோடு

அசைந்துஒசி கின்ற பசுங்கொடி எனஇனிது
                ஆடுக செங்கீரை
        அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
                ஆடுக செங்கீரை
உரை
   
20
பரிமளம் ஊறிய உச்சியின் முச்சி
                பதிந்துஆ டச்சுடர்பொன்
        பட்டமு டன்சிறு சுட்டியும் வெயிலொடு
                பனிவெண் நிலவுஆடத்

திருநுதல் மீதுஎழு குறுவெயர் வாடத்
                தெய்வம ணங்கமழும்
        திருமே னியின்முழு மரகத ஒளிஎண்
                திக்கும்வி ரிந்துஆடக்

கருவிளை நாறு குதம்பை ததும்பிய
                காது தழைந்துஆடக்
        கதிர்வெண் முறுவல் அரும்ப மலர்ந்திடு
                கமலத் திருமுகம்நின்

அருள்விழி யொடும்வளர் கருணை பொழிந்திட
                ஆடுக செங்கீரை
        அவனி தழைந்திட மவுலி புனைந்தவள்
                ஆடுக செங்கீரை
உரை
   
21

(வேறு)

குருமணி வெயில்விட மரகத நிழல்விரி
                குன்றே நின்றுஊதும்
        குழல்இசை பழகிய மழைமுகில் எழஎழு
                கொம்பே வெம்பாசம்

மருவிய பிணிகெட மலைதரும் அருமைம
                ருந்தே சந்தானம்
        வளர்புவ னமும்உணர் வரும்அரு மறையின்வ
                ரம்பே செம்போதில்

கருணையின் முழுகிய கயல்திரி பசியக
                ரும்பே வெண்சோதிக்
        கலைமதி மரபிலொர் இளமயில் எனவளர்
                கன்றே என்றுஓதும்

திருமகள் கலைமகள் தலைமகள் மலைமகள்
                செங்கோ செங்கீரை
        தெளிதமிழ் மதுரையில் வளருமொர் இளமயில்
                செங்கோ செங்கீரை
உரை
   
22
சங்குகி டந்தத டங்கைநெ டும்புயல்
                தங்காய் பங்காய்ஓர்
        தமனிய மலைபடர் கொடிஎன வடிவுத
                ழைந்தா ய்எந்தாய்என்று

அங்கண்நெ டும்புவ னங்கள்தொ ழும்தொறும்
                அஞ்சேல் என்றுஓதும்
        அபயமும் வரதமும் உபயமும் உடையஅ
                ணங்கே வெங்கோபக்

கங்குல்ம தம்கயம் மங்குல் அடங்கவி
                டுங்கா மன்சேமக்
        கயல்குடி புகும்ஒரு துகிலிகை எனநின
                கண்போ லும்சாயல்

செங்கயல் தங்குபொ லன்கொடி மின்கொடி
                செங்கோ செங்கீரை
        தெளிதமிழ் மதுரையில் வளரும்ஒ இளமயில்
                செங்கோ செங்கீரை
உரை