முத்தப்பருவம்
 
43
காலத் தொடுகற் பனைகடந்த
                கருவூ லத்துப் பழம்பாடல்
        கலைமாச் செல்வர் தேடிவைத்த
                கடவுள் மணியே உயிர்ஆல

வாலத்து உணர்வு நீர்பாய்ச்சி
                வளர்ப்பார்க்கு ஒளிபூத்து அருள்பழுத்த
        மலர்க்கற் பகமே எழுதாச்சொல்
                மழலை ததும்பு பசுங்குதலைச்

சோலைக் கிளியே உயிர்த்துணையாம்
                தோன்றாத் துணைக்குஓர் துணைஆகித்
        துவாத சாந்தப் பெருவெளியில்
                துரியங் கடந்த பரநாத

மூலத் தலத்து முளைத்தமுழு
                முதலே முத்தம் தருகவே
        முக்கண் சுடர்க்கு விருந்துஇடும்மும்
                முலையாய் முத்தம் தருகவே
உரை
   
44
உருகி உருகி நெக்கு நெக்குஉள்
                உடைந்து கசிந்திட்டு அசும்புஊறும்
        உழுவல் அன்பின் பழஅடியார்
                உள்ளத் தடத்தில் ஊற்றுஎடுத்துப்

பெருகு பரமா னந்தவெள்ளப்
                பெருக்கே சிறியேம் பெற்றபெரும்
        பேறே ஊறு நறைக்கூந்தல்
                பிடியே கொடிநுண் நுசுப்புஒசிய

வருகுங் குமக்குன்று இரண்டுஏதந்து
                மலர்ப்பூங் கொம்பே தீங்குழலின்
        மதுரம் கனிந்த பசுங்குதலை
                மழலை அரும்பச் சேதாம்பல்

முருகு விரியும் செங்கனிவாய்
                முத்தம் தருக முத்தமே
        முக்கண் சுடர்க்கு விருந்திடும்மும்
                முலையாய் முத்தம் தருகவே
உரை
   
45
கொழுதி மதர்வண்டு உழக்குகுழல்
                கோதைக்கு உடைந்த கொண்டலும்நின்
        குதலைக் கிளிமென் மொழிக்குஉடைந்த
        குறுங்கண் கரும்பும் கூன்பிறைக்கோடு

உழுத பொலன்சீ றடிக்குஉடைந்த
                செந்தா மரையும் பசுங்கழுத்துக்கு
        உடைந்த கமஞ்சூல் சங்கும்ஒழுகு
                ஒளிய கமுகும் அழகுதொய்யில்

எழுது தடந்தோள்கு உடைந்ததடம்
                பணையும் பணைமென் முலைக்குஉடைந்த
        இணைமா மருப்பும் தருமுத்துஉன்
                திருமுத்து ஒவ்வா இகபரங்கள்

முழுதும் தருவாய் நின்கனிவாய்
                முத்தம் தருக முத்தமே
        முக்கண் சுடர்க்கு விருந்தும்இடும்மும்
                முலையாய் முத்தம் தருகவே
உரை
   
46
மத்த மதமாக் கவுட்டுஒருநான்
                மருப்புப் பொருப்பு மிசைப்பொலிந்த
        வானத்து அரசு கோயில்வளர்
                சிந்தா மணியும் வடபுலத்தார்

நத்தம் வளர அளகையர்கோன்
                நகரில் வளரும் வான்மணியும்
        நளினப் பொகுட்டில் வீற்றுஇருக்கும்
                நங்கை மனைக்குஒர் விளக்கம்எனப்

பைத்த கடிகைப் படப்பாயல்
                பதும நாபன் மார்பில்வளர்
        பரிதி மணியும் எமக்குஅம்மை
                பணியல் வாழி வேய்ஈன்ற

முத்தம் உகந்த நின்கனிவாய்
                முத்தம் தருக முத்தமே
        முக்கண் சுடர்க்கு விருந்திடும்மும்
                முலையாய் முத்தம் தருகவே
உரை
   
47
கோடும் குவடும் பொருதரங்கக்
                குமரித் துறையில் படுமுத்தும்
        கொற்கைத் துறையில் துறைவாணர்
                குளிக்கும் சலாபக் குவான்முத்தும்

ஆடும் பெருந்தண் துறைப்பொருநை
                ஆற்றில் படுதெள் நிலாமுத்தும்
        அந்தண் பொதியத் தடம்சாரல்
                அருவி சொரியும் குளிர்முத்தும்

வாடுங் கொடிநுண் நுசுப்புஒசிய
                மடவ மகளிர் உடன்ஆடும்
        வண்டல் துறைக்கு வைத்துநெய்த்து
                மணந்தாழ் நறுமென் புகைப்படலம்

மூடும் குழலாய் நின்கனிவாய்
                முத்தம் தருக முத்தமே
        முக்கண் சுடர்க்கு விருந்துஇடும்மும்
                முலையாய் முத்தம் தருகவே
உரை
   
48

(வேறு)

பைவைத்த துத்திப் பரூஉச்சுடிகை முன்றில்
                பசுங்கொடி உடுக்கை கிழியப்
        பாய்இருள் படலம் கிழித்துஎழு சுடர்ப்பரிதி
                பரிதிக் கொடிஞ்சி மான்தேர்

மொய்வைத்த கொய்உளை வயப்புரவி வாய்ச்செல்ல
                முள்கோல் பிடித்து நெடுவான்
        முற்றத்தை இருள்பட விழுங்கும் துகில்கொடி
                முனைக்கணை வடிம்பு நக்கா

மைவைத்த செஞ்சிலையும் அம்புலியும் ஒடநெடு
                வான்மீன் மணந்து கந்த
        வடவரை முகந்தநின் வயக்கொடி எனப்பொலியும்
                மஞ்சுஇவர் வளாக நொச்சித்

தெய்வத் தமிழ்க்கூடல் தழையத் தழைத்தவள
்                 திருப்பவள முத்தம் அருளே
        சேல்வைத்த ஒண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
                திருப்பவள முத்தம் அருளே
உரை
   
49
பின்னல் திரைக்கடல் மதுக்குடம் அறத்தேக்கு
                பெய்முகில் கார்உ டலவெண்
        பிறைமதிக் கூன்குயக் கைக்கடைஞ ரொடுபுடை
                பெயர்ந்துஇடை நுடங்க ஒல்கு

மின்னல் தடித்துக் கரும்பொன் தொடிக்கடைசி
                மெல்லியர் வெரீஇப் பெயரவான்
        மீன்கணம் வெருக்கொள்ள வெடிவரால் குதிகொள்ளும்
                விண்புலம் விளைவு லம்எனக்

கன்னல் பெருங்காடு கற்பகக் காட்டுவளர்
                கடவுள்மா கவளம் கொளக்
        காமதே னுவும்நின்று கடைவாய் குதட்டக்
                கதிர்க்குலை முதிர்ந்து விளையும்

செந்நெல் படப்பைமது ரைப்பதி புரப்பவள்
                திருப்பவள முத்தம் அருளே
        சேல்வைத்த ஒண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
                திருப்பவள முத்தம் அருளே
உரை
   
50
சங்குஓ லிடும்கடல் தானைக்கு வெந்நிடு
                தராபதிகள் முன்றில்தூர்த்த
        தமனியக் குப்பையும் திசைமுதல்வர் தடமுடித்
                தாமமும் தலைமயங்கக்

கொங்குஓல் இடும்கைக் கொடுங்கோ லொடும்திரி
                குறும்பன் கொடிச்சுறவுநின்
        கொற்றப் பதாகைக் குழாத்தினொடும் இரசதக்
                குன்றினும் சென்றுஉலாவப்

பொங்குஓல வேலைப் புறத்தினொடு அகத்தின்இமிர்
                போர்ஆழி பரிதிஇரதப்
        பொங்குஆழி மற்றப் பொருப்புஆழி யில்திரி
                புலம்பைப் புலம்புசெய்யச்

செங்கோல் திருத்திய முடிச்செழியர் கோமள்
                திருப்பவள முத்தம்அருளே
        சேல்வைத்த ஒண்கொடியை வலம்வைத்த பெண்கொடி
                திருப்பவள முத்தம்அருளே
உரை
   
51

(வேறு)

பருவரை முதுபல அடியினில் நெடுநிலம்
                நெக்ககு டக்கனியின்
        படுநறை படுநிறை கடம்உடை படுவக
                டுப்பஉ வட்டுஎழவும்

விரிதலை முதலொடு விளைபுலம் உலையஉ
                ழக்கிய முள்சுறவின்
        விசையினின் வழிநறை மிடறுஒடி கமுகின்வி
                ழுக்குலை நெக்குஉகவும்

கரைஎறி புணரியின் இருமடி பெருகுத
                டத்தும டுத்தகடக்
        களிறொடு பிளிறிட இகலிய முகிலின்இ
                ரட்டிஇ ரட்டியமும்

முரசுஅதிர் கடிநகர் மதுரையில் வளர்கிளி
                முத்தம் அளித்தருளே
        முழுதுஉல குஉடையதொர் கவுரியர் குலமணி
                முத்தம் அளித்தருளே
உரை
   
52
புதையிருள் கிழிதர எழுதரு பரிதிவ
                ளைத்தக டல்புவியில்
        பொதுஅற அடிமைசெய் திடுவழி அடியர்பொ
                ருட்டுஅலர் வட்டணையில்

ததைமலர் பொதுளிய களியளி குமிறுகு
                ழல்திரு வைத்தவளச்
        சததள முளரியின் வனிதையை உதவுக
                டைக்கண்ம டப்பிடியே

பதுமமொடு ஒழுகுஒளி வளையும்நின் நளினமு
                கத்தும் மிடற்றுறும்உறப்
        பனிமதி யொடுசுவை அமுதமும் நுதலொடு
                சொற்குத லைக்கண்நிறீஇ

முதுதமிழ் உததியில் வரும்ஒரு திருமகள்
                முத்தம் அளித்தருளே
        முழுதுஉலகு உடையதொர் கவுரியர் குலமணி
                முத்தம் அளித்தருளே
உரை