பக்கம் எண் :

மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்55

தாளவட் டங்கொட்டு கைப்பாணி யொப்பவொரு
   சப்பாணி கொட்டியருளே
தமிழொடு பிறந்துபழ மதுரையில் வளர்ந்தகொடி
   சப்பாணி கொட்டியருளே.    
(1)

35.
பொய்வந்த நுண்ணிடை நுடங்கக் கொடுஞ்சிப்
   பொலந்தேரொ டமரகத்துப்
பொன்மேரு வில்லியை யெதிர்ப்பட்ட ஞான்றம்மை
   பொம்மன்முலை மூன்றிலொன்று

கைவந்த கொழுநரொடு முள்ளப் புணர்ச்சிக்
   கருத்தா னகத்தொடுங்கக்
கவிழ்தலை வணக்கொடு முலைக்கண்வைத் திடுமொரு
   கடைக்கணோக் கமுதமூற்ற

    (4) கைப்பாணி - கைத்தாளம். சப்பாணி கொட்டல் - இரண்டு கைகளையும் சே்ர்த்துக் கொட்டுதல்; ஸ: பாணியென்பது சப்பாணியென வந்ததென்பர்.

    (1-4) நள்ளிருளில் நட்டமிடும் மதமத்தர்: “நள்ளிருளினட்டம் பயின்றாடு நாதனே” (திருவா.சிவபுராணம்.) சிவபெருமான் பிரளய கால தாண்டவம் செய்கையில், உமாதேவியார் உடனின்று தாளங் கொட்டனரென்பது புராண வரலாறு.

    (முடிபு.) நள்ளிருளின் நாப்பண், குப்புற்றுக் கவிழச் சுழல மட்டித்து நட்டமிடும் மதமத்தரது நித்த வட்டத்தினுக்கு இசைய ஒத்திக் கொட்டு கைப்பாணி யென்க.

    35. (அடி, 1) பொய்வந்த நுண் இடை - பொய்யின் தன்மையைப் பெற்ற நுண்ணிய இடை. நுடங்க - அசைய. கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன் அமைப்பதோருறுப்பு. (பி-ம்.) ‘கொடிஞ்சி’. பொன்மேரு வில்லி - சிவபெருமான். அம்மை -அம்மையாகிய நீ.

    (1-2) சிவபெருமானைக் கண்ட மாத்திரத்தில் தடாதகைக் பிராட்டியாருடைய மூன்று நகில்களில் ஒன்று மறைந்ததற்குத் தற்குறிப்பேற்ற அணியமைய வேறொரு காரணம் கற்பித்தார். உள்ளப் புணர்ச்சி - காதலர் இருவருடைய மனமும் ஒத்தல். உள்ளத்துள்ளே நிகழும் புணர்ச்சிக்கண் பயன்பட ஒரு நகில் உள்ளே சென்றதென்றார்.