4717. ஆணைநும் ஆணைஎன் அருட்பெருஞ் சோதி
ஆண்டவ ரேதிரு அம்பலத் தவரே
நாணைவிட் டுரைக்கின்ற வாறிது கண்டீர்
நாயக ரேஉமை நான்விட மாட்டேன்
கோணைஎன் உடல்பொருள் ஆவியும் நுமக்கே
கொடுத்தனன் இனிஎன்மேல் குறைசொல்ல வேண்டாம்
ஏணைநின் றெடுத்தகைப் பிள்ளைநான் அன்றோ
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.
உரை: அருட்பெருஞ் சோதி ஆண்டவரே! திருவிளங்கும் அம்பலத்தில் எழுந்தருளுபவரே! நாணத்தைத் துறந்து வாய்விட்டுரைக்கின்ற முறையீடு இதுவாகும்; என்னை மயக்கப் பள்ளியிலிருந்து எழுப்பி மெய்யின்பம் தந்தீராதலால் எனக்கு நாயகராகிய உம்மை நான் ஒருபோதும் விடமாட்டேன்; நும் மேல் ஆணை; நெறி பிறழும் என் உடல் பொருள் ஆவி என்ற மூன்றையும் உமக்கே கொடுத்து விட்டேன்; இனிமேல் என்மீது குறைசொல்ல வேண்டாம்; நான் ஏணையிலிருந்து எடுத்த கைப்பிள்ளை போல்கின்றேன் காண். எ.று.
நாண் - நாணம். அடக்கமாகச் சொல்ல வேண்டியதை வாய்விட்டு வெளிப்பட உரைப்பது பற்றி, “நாணை விட்டு உரைக்கின்றவாறு இது” என்று கூறுகின்றார். கண்டீர் - முன்னிலை அசை. உடலும் பொருளும் உயிரும் எப்போதும் நேர்பட நில்லாமல் பிறழ்ந்து செல்லும் இயல்பினதாகலான், “கோணை உடல் பொருள் ஆவி” என்று கூறுகின்றார். குழந்தைகளை ஆட்டி உறங்குவித்தற்குத் துணியால் கட்டப்படும் தொட்டில் ஏணை என்று வழங்கும். கைப்பிள்ளை - சிறுகுழந்தை. (2)
|