4892. மதம்பிடித் தவர்எல்லாம் வாய்ப்பிடிப் புண்டு
வந்துநிற் கின்றனர் வாய்திறப் பிப்பான்
கதம்பிடித் தவர்எல்லாம் கடும்பிணி யாலே
கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறு கின்றார்
பதம்பிடித் தவர்எல்லாம் அம்பலப் பாட்டே
பாடினர் ஆடினர் பரவிநிற் கின்றார்
இதம்பிடித் தெனையாண்ட அருட்பெருஞ் சோதி
என்அய்ய னேபள்ளி எழுந்தருள் வாயே.
உரை: செருக்கென்னும் குற்றம் உடையவர் எல்லாம் வாய் மூடிக்கொண்டு வாய் திறந்து உன்னை வழுத்தும் பொருட்டு உன்முன் வந்து நிற்கின்றார்கள்; சினம் என்னும் குற்றமுடையவர் எல்லாரும் மிக்க பிணியால் மனங் கலங்கி நின்னை நினைந்து ஓலமிடுகின்றார்கள்; நின் திருவடியைப் பற்றாகக் கொண்டவர் எல்லாரும் நின்னுடைய அம்பலப் பாட்டைப் பாடியும் ஆடியும் பராவுகின்றார்கள்; அன்பு கொண்டு என்னை ஆண்டருளிய அருட்பெருஞ் சோதியாகிய என் ஐயனே! பள்ளியினின்றும் எழுந்தருளுக. எ.று.
மதம் - செருக்கு. வாய்ப்பிடிப்புண்டல் - பேசாதிருத்தல். செருக்கினால் சிவன் புகழைப் பேசாதவர்கள் இப்பொழுது வாய் திறந்து ஓதித் துதிப்பதற்கு வந்து நிற்கின்றார்கள் என்ற கருத்தால், “மதம் பிடித்தவர் எல்லாம் வாய்ப்பிடிப்புண்டு வந்து நிற்கின்றனர் வாய் திறப்பிப்பான்” என்று கூறுகின்றார். கதம் - சினம்; முன்கோபம் என்றும் கூறுவர். கடும்பிணி - மிக்க நோய்; ஈண்டு மனநோய் மேல் நின்றது. கடுஞ் சினத்தால் சிவனை வெறுத்துப் பேசின குற்றத்தை உணர்ந்து தம்முன் வருந்தி ஓலமிடுகின்றனர் என்றமை புலப்பட, “கடும் பிணியாலே கலங்கினர் சூழ்ந்தனர் உலம்புறுகின்றார்” என உரைக்கின்றார். மதம் பிடித்தவர் சிவனுடைய திருவடியை நினைந்து வழிபடுபவர். இதம் - அன்பு. கலங்கினர் - சூழ்ந்தனர். பாடினர் - ஆடினர் முதலியன முற்றெச்சங்கள். (8)
|