1739. தீது தவிர்க்கு மொற்றியுளீர்
செல்ல லறுப்ப தென்றென்றேன்
ஈது நமக்குத் தெரியுமென்றா
ரிறையா மோவிங் கிதுவென்றேன்
ஓது மடியர் மனக்கங்கு
லோட்டு மியாமே யுணரென்றார்
ஆது தெரியே னென்னடியவ்
வையர் மொழிந்த வருண்மொழியே.
உரை: துன்பம் துடைக்கும் திருவொற்றியூரின்கண் எழுந்தருளும் தேவரே, என் துன்பத்தை நீக்குவது எப்பொழுது என்றேனாக, இது நமக்குத் தெரிந்த ஒன்றேயாம் என்று சொன்னார். என் வினாவுக்கு நீர் சொல்லும் இது செவ்வன் இறையாகுமோ என்று கேட்டேன்; அதற்கு, என் திருப்பெயரை ஓதும் அடியார்களின் மன இருளைப் போக்கும் இறையாவார் நாமே என உணர்க என்றார்; அதன் கருத்தை நான் அறியேன்; அந்தத் தேவர் மொழிந்த அருண் மொழியின் பொருள்தான் என்னையோ! எ.று.
இது சில வேறு பாடுகளுடன் இங்கித மாலையில் (1827) காணப்படுகிறது. இதன் விளக்க வுரையை ஆண்டுக் காண்க. (12)
|