8.

    ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
        உத்தமர்தம் உறவு வேண்டும்
        உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
        உறவு கலவாமை வேண்டும்
    பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
        பேசா திருக்க வேண்டும்
        பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
        பிடியா திருக்க வேண்டும்
    மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
        மறவா திருக்க வேண்டும்
        மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
        வாழ்வுனான் வாழ வேண்டும்
    தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
        தலமோங்கு கந்த வேளே
        தண்முகத் துய்யமணி யுண்முகச் சைவமணி
        சண்முகத் தெய்வ மணியே.

உரை:

     தருமம் செய்வார் மிக்குள்ள சென்னையிலுள்ள கந்த கோட்டத்துள் வளரும் திருக்கோயிலில் எழுந்தருளும் கந்த வேளே, தண்ணிய முகத்தை யுடைய தூய மணிகளுட் சிறந்த சைவமணியாகிய ஆறுமுகங்களை யுடைய தெய்வமணியே, ஒரு நெறிப்பட்ட மனத்துடன் நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை நினைக்கின்ற உத்தமர்களின் உறவே எனக்கு வேண்டும்; உள்ளத்தி லொன்றும் புறத்தி லொன்றுமாகப் பேசும் வஞ்சகர் உறவு என்னை யடையாவாறு காக்க வேண்டும்; பெருமை சான்ற நினது புகழையே நான் பேசுபவனாகவும், பொய்ம்மை மொழிகளைப் பேசாதவனாகவும் இருக்க வேண்டும்; பெருமை நல்கும் நெறியையே கடைப் பிடிப்பவனாக அமைய வேண்டுமே யன்றி மத மென்னும் பேயாற் பிடிபடாதவனாக இருக்க வேண்டும்; இயல்பாகவே தோன்றுகிற பெண்ணாசையை என் மனம் மறந்தொழியவும், அதற்கீடாக உன்னை மறவா தொழுகும் தன்மை என் நெஞ்சில் நிலை பெறவும் வேண்டும்; மதி நுட்பமும் உன் கருணையாகிய நிதியமும், நோயற்ற வாழ்வும் உடையனாக வேண்டும்; இவற்றை அருளுக. எ.று.

     தருமம், ஈண்டுக் கொடை மேற்று. தருமம் செய்வார் மிக்கிருத்தல் தோன்றத் “தருமம் மிகு சென்னை” என்று சிறப்பிக்கின்றார். பல தலைப்படாமல் ஒருதலையாக ஒரு நெறிக்கண் இயங்கும் மனத்தின் நினைவு ஒருமை நினைவாதலால், “ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்” என்று கூறுகின்றார். “ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்” என்பர் திருஞான சம்பந்தர். தம்மை உற்றாரையும் ஒருமை நினைவினராக்குவ ரென்பது பற்றி “உத்தமர் தம் உறவு வேண்டும்” என்று கூறுகின்றார். நினைவார் மனத்தின்கண் தங்கித் தன் அருளொளியால் மலர்விக்கும் மாண்புடைமை பற்றித் திருவடி யென்றொழியாமல் “நினது திரு மலரடி” எனப் புகல்கின்றார். உள்ளத்திலொன்றும் வாயில் ஒன்றும் பேசுபவர் வஞ்சமும் பொய்யும் உடைய தீயராதலின் அவரது உறவு அறவே கூடா தென்றற்கு “உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்” எனப் பல சொற்களால் விரியக் கூறுகின்றார். நம் அறிவறியாமே தாமே வந்து கலந்து கொள்பவாதலின், “வஞ்சர் உறவு கலவாமை வேண்டும்” என முருகன்பால் முறையிடுகின்றார். முருகன் புகழ், பொருள் சேர் மெய்ப் புகழாதலின் பேசத்தகுவது என்பது பற்றி, “பெருமை பெறு நினது புகழ் பேச வேண்டும்” என்று கூறுகின்றார். “பேசிப் பிதற்றப் பெருமை தருவார்” (பாசூர்) என்பர் திருஞானசம்பந்தர். தலையாய அறமாதலால் “பொய்ம்மை பேசாதிருக்க வேண்டும்” என எடுத்து மொழிகின்றார். “பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று” (குறள்) எனத் திருவள்ளுவர் உரைப்பது காண்க. பெருமை தரும் செம்மை நெறி பெருநெறி; அதனைக் கடைப்பிடித் தொழுகல் இன்றியமையாமையால் “பெருநெறி பிடித் தொழுக வேண்டும்” என்றும், அதனைக் கெடுக்கும் இயல்புடைமை பற்றி, “மதமான பேய் பிடியா திருக்க வேண்டும்” என்றும் கூறுகின்றார். உடல் வளரும் போதே உடன் வளர்ந்து அறிவை மயக்குவதனால், “மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்” எனவும், மறக்கத் தக்கது பெண்ணாசையாகிய காமமெனினும் மறவாமைக்குரியது யாதென்றெழும் வினாவிற்கு விடையாக, “உனை மறவா திருக்க வேண்டும்” எனவும் முருகனிடம் வேண்டுகின்றார். பொருள் வாழ்வுக்கு இயற்கையறிவாகிய “மதி வேண்டும்” என்றும், அருள் வாழ்வுக்கு நெறி வழங்குதலின் “கருணைநிதி வேண்டும்” என்றும், உடல் வாழ்க்கை உறுதி பயத்தற்கு “நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்” என்றும் இயம்புகின்றார்.

     இதனால், ஒருமை நினைவுடைய உத்தமர் உறவு முதல் நோயற்ற வாழ்வு ஈறாக வுள்ள நலம் பலவும் வேண்டுமென முறையிட்டவாறாம்.

     (8)